Thursday, April 19, 2012

திரு அருட்பா - மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

திரு அருட்பா - மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே


'மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே ' இது ஏதோ வண்டிச் சக்கரம் படத்தில் பாலசுப்ரமணியம் பாடிய பாடல் மாதிரி இருக்கா ?

எழுதியவர் இராமலிங்க அடிகளார். படித்துப் பாருங்கள். எவ்வளவு அனுபவித்து எழுதி இருக்கிறார் என்று தெரியும்......





கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. 

--------------------------------------------------------------------------------

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே



கோடையின் சுட்டெரிக்கும் வெயில். ஒதுங்க நிழல் கிடைக்காதா என்று ஏங்கிய போது கண்ணில் ஒரு மரம் பட்டால் எப்படி இருக்கும்? அந்த மரமே இலை தழைகளோடு குளிர்ந்த நிழல் தந்தால் எப்படி இருக்கும்? நிழலோடு சேர்த்து அந்த மரம் உண்ண இனிப்பான கனியும் தந்தால் எப்படி இருக்கும்?


இந்த வாழ்க்கையில் நாம் கிடந்து உழலும் போது (கோடை) நமக்கு கிடைத்த குளிர் தரும், கனி தரும் மரமாய் இருக்கிறான் இறைவன்.


ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே = வெயிலில் நடந்த இளைப்பாற மரம் கிடைத்தது, கனி கிடைத்தது, சாப்பிட்டாகி விட்டது. தண்ணி வேண்டாமா ? அப்போது அங்கே ஒரு இனிமையான ஓடை, அதில் ஊரும் ஜில்லென்ற தண்ணீர் எப்படி இருக்கும் ?


இறைவன் அப்படி பட்டவன்.


தண்ணியும் குடிச்சாச்சு, அந்த ஓடையில் மணம் வீசும் மலரும் இருந்தால் எப்படி இருக்கும்?


இறைவன் அந்த மலர் போல் மனதுக்கு மகிழ்ச்சி தருபவன்.


மணம் மட்டும் இருந்தால் போதுமா, அது நம்மிடம் வர வேண்டாமா..அந்த மணத்தை ஏந்தி வரும் மெல்லிய பூங்காற்று போன்றவன் இறைவன்.


அந்த காற்று சுகமாய் வீசினால் ?


சிறு வயதில் என்னை மணந்த மணவாளா, நான் அணிவிக்கும் இந்த பாமாலையை ஏற்று அருளேன் என்று கொஞ்சுகிறார் வள்ளலார்.















3 comments:

  1. அற்புதம். பாரதியாரின் காக்கை சிறகினிலே நந்தலாலா படித்து வியந்து இருக்கிறேன் .இப்படி கடவுளை எல்லாவற்றிலும் பார்க்க முடியுமா என்று. அதே மாதிரி வள்ளலாறும் எல்லாவற்றிலும் இறைவனை பார்கிறார்.
    Thx a lot for uploading such wonderful poems. This blog is a treasure for my chldren.

    ReplyDelete
  2. WoW!!!Incredible.Thiru arutpa- Solla varthaigal illai..

    SRU

    ReplyDelete
  3. அருமை அருமை

    ReplyDelete