Wednesday, May 23, 2012

பெரிய புராணம் - ஆண் அடங்கும் இடம்


பெரிய புராணம் - ஆண் அடங்கும் இடம்

பனிக்காலம் காதலின் காலமோ ?

மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்று கண்ணன் சொன்னது அதனால் தானோ?

துணை தேடும் காலம்.

காதலில் ஆண்டாள் கற்கண்டாய் உருகியதும் இந்த மார்கழிப் பனியில் தான்.


இங்கு அந்த குளிர் காலத்தில் வீடுகளில் என்ன நடக்கிறதென்று கூறுகிறார் சேக்கிழார்....

பனி பொழிகிறது. 

சூரியனும் வெளியே வரவில்லை.

தூரத்தில் மலைகள் எல்லாம் பனிப் போர்வை போத்தி இருக்கின்றன.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.

வெளியே போக யாருக்கு மனம் வரும்.

வீடுகளில் உள்ள மாடங்களில் பெண் புறாவும் ஆண் புறாவும் ஒன்றை ஒன்று தழுவி ஒடுங்கி ஒன்றாய் இருக்கின்றன.

வீட்டின் உள்ளே தங்கள் துணைவிகளோடு ஆண்கள் ஒன்றாய் இருந்தனர்.

சேக்கிழாரின் தமிழுக்கு உரை எழுதினால் அதன் இனிமை கெட்டு விடும் போல இருக்கிறது...அவ்வளவு இனிமையான பாடல்.
  

நீடியவப் பதிகளெலா நிரைமாடத்திறைகடொறும்
பேடையுடன் பவளக்காற் புறவொடுங்கப்பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார் துணைக்கலச வெம்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளு மணிமார்பு மடங்குவன.

சீர் பிரித்த பின்:

நீடிய அப் பதிகள் எல்லாம் நிரைமாடத்து, இறைகள் தொறும்
பேடையுடன் பவளக் கால் புறா ஒடுங்கபித்திகையின்
தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள் 
ஆடவர் தம் பணைத் தோளும் மணி மார்பும் அடங்குவன


நீடிய = நீண்ட

அப் பதிகள் = அந்த ஊரில், அந்த இடத்தில் (எந்த இடம் என்றால் முந்தைய இரண்டு BLOG களைப் பாருங்கள்)

எல்லாம் = எல்லா இடத்தும்

நிரைமாடத்து, = நிறைந்த மாடங்களில்

இறைகள் தொறும்= இறை என்றால் கூண்டு மாதிரி ஒரு இடம் (இறப்பு என்று சொல்வது வழக்கம்)

பேடையுடன் = பெண் புறாவுடன்

பவளக் கால் = பவளம் போல் சிவந்த கால்களை உடைய

புறா ஒடுங்க = ஆண் புறா ஒடுங்க

பித்திகையின் = செண்பகம் போன்ற ஒரு வகை மலர்

தோடு அலர் = இதழ் மலரும்

மென் குழல் = மென்மையான குழலை கொண்ட

மடவார் = பெண்கள்

துணைக் கலச = இரண்டு கலசங்கள் ஒன்றாய் சேர்த்து வைத்தார் போன்ற

வெம் முலையுள் =

ஆடவர் தம் = ஆண்களின்

பணைத் தோளும் = பனை போன்ற கடினமான தோள்களும்

மணி மார்பும் = மணி போல ஒளி வீசும் மார்பும்

அடங்குவன = அடங்கின

பனியில் எது எல்லாம் அடங்கும் ?




2 comments:

  1. ஆஹா... இந்த சேக்கிழார் இப்படி ஒரு காதல் மன்னாக இருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை!

    ஆமாம் ... ஆண்டவனைப் பற்றி நினைக்காமல், இப்படியெல்லாம் பலான விஷயங்களைப் பற்றி அவர் ஏன் நினைக்கிறார்?! குறும்பான ஆளு! எப்படியோ நமக்கு ஒரு தூள் பாட்டு கிடைத்தது.

    இதுக்கு முந்தின இரண்டு ப்லாகையும் (Blog) படித்துவிட்டு, இதை இன்னொரு முறை படிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. காதலும் காமமும் வாழ்க்கையோடு ஒன்று பட்டவை. அதை வெறுக்க வேண்டியது இல்லை என்று காட்டத்தான் இத்தனை பாடல்களும்

    நன்றியையை சேக்கிழாருக்கு சொல்லுங்கள்.

    ReplyDelete