Tuesday, May 29, 2012

கம்ப இராமாயணம் - யாருடைய பிழை?


கம்ப இராமாயணம் - யாருடைய பிழை?


இராமன் கானகம் போக வேண்டும் என்ற செய்தியை கேட்ட இலக்குவன் கோபத்தால் கொந்தளிக்கிறான்.

அவன் கோபம் எல்லோர் மேலும் பாய்கிறது. 

தசரதனையும், பரதனையும் கொன்று, அவர்களுக்கு துணையாக யார் வந்தாலும் அவர்களையும் கொன்று இந்த அரசை உனக்கு தருவேன் என்று மிகுந்த கோபம் கொண்டு இராமனிடம் சொல்லுகிறான்.


அவனை சமாதானப் படுத்துகிறான் இராமன்.

நதியில் நீர் இல்லை என்றால் அது நதி செய்த குற்றம் இல்லை, 

மழை பொழியாத விதியின் குற்றம். 

அது போல் என்னை கானகம் போகச் சொன்னது தந்தையின் குற்றம் அல்ல, 

தாயின் குற்றம் அல்ல, பரதனின் குற்றம் அல்ல, விதியின் குற்றம். இதற்க்கு யார் மேல் கோபிப்பது என்று அவனை சமாதனப் படுத்துகிறான்.


நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மைஅற்றே,
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்றுமைந்த!
விதியின் பிழைநீ இதற்கு  என்னை வெகுண்டது?’ என்றான்.

நதியின் பிழை அன்று = நதியின் குற்றம் அல்ல

நறும் புனல் இன்மை = நல்ல தண்ணீர் இல்லாதது. மேலோட்டமாகப் பார்த்தால், தண்ணி இல்லாதது நதியின் குற்றம் அல்ல என்று சொல்லத் தோன்றும். கம்பர் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கிறார். "நல்ல" தண்ணி இல்லாதது நத்யின் குற்றம் அல்ல. நதியில் நல்ல தண்ணி தான் வரும், ஊரில் உள்ளவர்கள் அதில் கழிவு நீரை சேர்த்து விடுவதால் அது கெட்ட நீராக மாறி விடுகிறது. அது போல் நம் தாயும் தந்தையும் நல்லவர்கள் தான், ஆனால் யாரோ அவர்கள் மனதை கெடுத்து இருக்கலாம் என்று ஒரு அர்த்தம் கொள்ளலாம்.

அற்றே, = அது அன்றி

பதியின் பிழை அன்று; = தசரதனின் பிழை அன்று

பயந்து = பயந்து...எதுக்கு பயப்படனும் ? குழந்தைக்கு என்ன கொடுத்தால் என்ன ஆகுமோ, என்று பயந்து பயந்து வளர்த்தவள் கைகேயி. இன்னொரு பொருள், பாராட்டி/சீராட்டி

நமைப் புரந்தாள் = நம்மை வளர்த்தவள் (கைகேயி)

மதியின் பிழை அன்று = அவள் மதியின் பிழை அன்று

மகன் பிழை அன்று; = மகனின் பிழை அன்று (பரதன்) 

மைந்த! = மகனே (இலக்குவனே)

விதியின் பிழை; = விதியின் பிழை

நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். = இதுக்கு போய் ஏன் கோபித்துக் கொள்கிறாய்

இவ்வளவு சொன்ன பின்னும் இலக்குவன் சமாதானம் ஆனானா? 

இல்லை.

"விதிக்கும் விதி காணும் என் விற்தொழில் காண்டி என்றான்" என்று சண்ட மாருதாமாய் புறப்படுகிறான்...

அது அடுத்து வரும் blog குகளில் பார்ப்போம் 


1 comment:

  1. என் அப்பாவிற்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று இது. நல்ல பாடல்தான், ஆனால் ஆழ்ந்த பொருள் உள்ளது என்று சொல்ல முடியாது என்று என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete