Monday, July 9, 2012

கம்ப இராமாயணம் - எல்லாம் அவளே


கம்ப இராமாயணம் - எல்லாம் அவளே


காதல் விநோதமானது.

காதல் வயப்பட்டவர்களுக்கு பார்க்கும் பொருள் எல்லாம் அவர்களின் காதலனோ அல்லது காதலியாகவோ தான் தெரியும்.

"பார்க்கும் இடம் எல்லாம் நந்தலாலா உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா" என்று பாரதி சொன்ன மாதிரி.

கம்ப இராமாயணத்தில், சீதையையை முதன் முதலாகப் பார்த்த பின், இராமன் அவள் நினைவாகவே வாடுகிறான்.

"அவளுக்கு என் மேல் கருணையே இல்லையா? இப்படி என்னை வாட்டுகிராளே...எனக்கு எல்லாம் ஒரே குழப்பமாய் இருக்கிறது. நிற்கும் பொருள், அசையும் பொருள் எல்லாம் அவளாகவே தெரிகிறது எனக்கு" என்று புலம்புகிறான்.

அந்தப் பாடல்





அருள் இலாள் எனினும். மனத்து ஆசையால்.
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்காலால்.
தெருள் இலா உலகில். சென்று. நின்று. வாழ்
பொருள் எலாம். அவள் பொன் உரு ஆயவே!


அருள் இலாள் எனினும். = என் மேல் அவளுக்கு அருள் இல்லாவிட்டாலும்

மனத்து ஆசையால்.  = என் மனத்தின் ஆசை காரணமாக

வெருளும் = மயக்கம் தரும்

நோய் விடக்  நோய் விட

கண்ணின் விழுங்காலால். = அவள் என்னை கண்ணால் விழுங்கியதால்

தெருள் இலா உலகில். = தெளிவு இல்லாத இந்த உலகில்

சென்று. = அசையும்

நின்று. = அசையாத

வாழ் = இருக்கும்

பொருள் எலாம். = எல்லா பொருளும்

அவள் பொன் உரு ஆயவே! = அவளுடைய பொன் போன்ற உருவமாய்
எனக்கு தோன்றுகிறது

காதல் வயப்பட்டால், கடவுளுக்கே இந்த பாடு என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம்....

No comments:

Post a Comment