Friday, August 17, 2012

ஆதிநாதன் வளமடல் - யார் கடவுள்?


ஆதிநாதன் வளமடல் - யார் கடவுள்?


ஆதிநாதன் வளமடல் என்ற நூல் ஜெயங்கொண்டார் என்ற புலவரால் எழுதப்பட்டது. கலிங்கத்துப் பரணி எழுதிய அதே ஜெயங்கொண்டார்தான்.

மிக மிக இனிமையான பாடல்களை கொண்டது. கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காதல் எல்லாம் கலந்தது. 

அதில் இருந்து ஒரு பாடல்...

காதல் வயப்பட்டர்வர்களுக்கு, தங்கள் காதலனையோ, காதலியையோ பார்க்க வேண்டும், அவர்களோடு பேச வேண்டும் என்ற ஆவல் இருக்கத்தான் செய்யும். நேரில் பார்க்க முடியாவிட்டால் phone , sms , chat என்று எப்படியாவது தொடர்பு கொள்ளத் துடிப்பார்கள். அந்த காலத்தில் இது எல்லாம் இல்லை. மேகத்தையும், புறாவையும், நிலவையும் தூது விட்டு கொண்டு இருந்தார்கள். 

அப்படி தூது விடுபவர்களுக்கு, யார் தூது கொண்டு செல்கிறார்களோ அவர்கள் தான் கடவுள் மாதிரி தெரிவார்கள். 





கொன்றை முடித்தார்க்கும் கோபாலர் ஆனார்க்கும்
அன்று படைத்தார்க்கும் ஆளல்லேம் – இன்று
மடப்பாவை யார் நம் வசமாகத் தூது
நடப்பாரே தெய்வம் நமக்கு

கொன்றை முடித்தார்க்கும்= கொன்றை மலரை அணிந்த சிவனும்

கோபாலர் ஆனார்க்கும் = பசுக்களுக்கு (கோ = பசு ) தலைவன் ஆன திருமாலும்

அன்று படைத்தார்க்கும் = அன்று எல்லோரையும் படைத்த பிரம்மாவும் 

ஆளல்லேம் = எனகளுக்கு ஒரு பொருட்டில்லை

இன்று = இன்று

மடப்பாவையார் = என் காதலியிடம் 

நம் வசமாகத் தூது = எனக்காக யார் தூது

நடப்பாரே= போவார்களோ

தெய்வம் நமக்கு= அவர்களே நமக்கு தெய்வம்

1 comment:

  1. "நம் வசமாக" என்றால், நம் வசமாக ஆகும்படிப் பதமாகப் பேசும் தூதுவரே தெய்வம் என்று கொள்ளலாமோ?

    ReplyDelete