Friday, August 3, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ள மனம் தவிர்த்தே


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ள மனம் தவிர்த்தே 


சில சமயம் சிறந்த பக்தர்களுக்குக் கூட இறைவன் மேல் சந்தேகம் வரும்..."கடவுள் என்று ஒருவன் இருந்தால் எனக்கு ஏன் இவ்வளவு துன்பம் வருகிறது...நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்..ஒருவேளை இந்த கடவுள், வேதம் எல்லாம் பொய் தானோ" என்று சந்தேகம் வரும். 

கடவுளை நம்பாத நாத்திக வாதிகள் கூட சில சமயம் "ஒரு வேளை கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரோ" என்ற சந்தேகம் வரலாம்.

சந்தேகம் யாருக்கு வந்தாலும், அவனை. வள்ளலே, மணி வண்ணனே என்று வெளிக்கு சொல்லி வைத்துக் கொள்வார்கள். இது எல்லாம் கடவுளுக்குத் தெரியாதா என்ன ?

"நானும் அப்படித்தான் இருந்தேன்...உன்னை உள்ளன்போடு புகழாமல், வெளிக்கு புகழ்ந்து உன்னையும் ஏமாற்றினேன்...பின், என் கள்ள மனம் தவிர்த்து, உன்னை கண்டு கொண்டேன், இனி உன்னை விடமாட்டேன்" என்கிறார் நம்மாழ்வார்...


உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி,
வள்ளல் மணிவண்ணனே. என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்,
கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்தொழிந்தேன்,
வெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே!

உள்ளன = உண்மையாக உள்ளது ஒன்று

மற்றுளவாப்புறமே = அந்த உண்மையை விடுத்து, அதற்க்கு புறம்பாய்

சில மாயஞ்சொல்லி = சில பொய்களைச் சொல்லி

வள்ளல் = வள்ளலே

மணிவண்ணனே. = மணி வண்ணனே

என்றென்றேயுனை யும் = என்று கூறி, உன்னையும் 

வஞ்சிக்கும், = வஞ்சனை செய்யும்

கள்ளம னம்தவிர்ந்தே = கள்ள மனம் தவிர்த்தே

யுனைக்கண்டுகொண் டுய்தொழிந்தேன், = உன்னை கண்டு கொண்டு பிழைத்தேன்

வெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே! = வெள்ளத்து + அணை + கிடந்தாய் + இனி + உன்னை + விட்டு + எங்கு + கொள்வேனே = திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாய், உன்னை விட்டு நான் இனி எங்கு போவேன் ?

(if you like this blog, please click g+1 button below to recommend this in google)



1 comment:

  1. Your selection of the Pasuram to explain the beauty of Nammazhwar's composition, is outstanding.. This is one of his best, no doubt. Enjoyed this. Thanks

    ReplyDelete