Sunday, September 9, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணனுக்கு அஜீரணமா?


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணனுக்கு அஜீரணமா?


நாம சில நாள் கல்யாணம் போன்ற விழாக்களுக்கு சென்றால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டு அஜீரணத்தில் கஷ்டப் படுவோம்.

திருமால் ஏழு உலகங்களையும் ஒன்றாக உண்டார். 

அஜீரணம் வருமா இல்லையா ? எவ்வளவு மண்ணு, கல்லு, மலை, உப்புக் கடல்...அத்தனையும் உண்டால் வயறு என்ன ஆவது.

அந்த அஜீரணம் போகத்தான் மனிதனாக (கண்ணனாக) அவதாரம் எடுத்து, நிறைய வெண்ணையும் நெய்யும் உண்டானாம்.



உண்டா யுலகேழ் முன்னமே, உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ? மாயோனே

கொஞ்சம் சீர் பிரிப்போம் 

உண்டாய் உலகம் ஏழும் முன்னமே, உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி 
மண்தான் சோர்ந்த உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ ? மாயோனே

பொருள் 

உண்டாய் = உண்டாய்

உலகம் ஏழும் =  உலகம் ஏழும்

முன்னமே = முன்பு ஒரு நாள்

உமிழ்ந்து = பின் உமிழ்ந்தாய்

மாயையால் புக்கு = பின் மாயையில் புகுந்து

உண்டாய் வெண்ணெய் = உண்டாய் வெண்ணையை

சிறு மனிசர்  = அற்ப மனித உருவம் எடுத்து

உவலை யாக்கை = சருகு போன்ற இந்த உடலை எடுத்து (உவலை = சருகு)

நிலை எய்தி = இந்த நிலையை அடைந்து

மண்தான் சோர்ந்த உண்டேலும் = மண் உண்டு சோர்வடைந்து (சோகை 
அடைந்து)

மனிசர்க்கு ஆகும் = மனிதர்களுக்கு வரும்

பீர் சிறிதும் = நோய் சிறிதும்

அண்டா வண்ணம் = வரா வண்ணம்

மண் கரைய  = முன் உண்ட மண் கரைய

நெய் ஊண் மருந்தோ ? = நெய் உணவு மருந்தா ?

மாயோனே = மாயோனே


1 comment:

  1. இந்தப் பாட்டு அப்படி ஒன்றும் அமோகமாக இல்லையே. மன்னிக்கவும்.

    ReplyDelete