Thursday, November 22, 2012

ஆத்திசூடி - ஐயம் இட்டு உண்


ஆத்திசூடி - ஐயம் இட்டு உண்


தானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது பற்றி தமிழ் இலக்கியம் குறிப்பாக பக்தி இலக்கியம் பக்கம் பக்கமாக சொல்கிறது. 

உடைந்த அரிசிக்கு நொய் அரிசி என்று பெயர். சமைக்க ருசியாக இருக்காது. வேண்டுமானால் கஞ்சி வைக்கலாம். சட்டென்று குழைந்து விடும். அந்த நொய் அரிசியில் ஒரு துணுக்காவது ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று கெஞ்சுகிறார் அருணகிரிநாதர். "நொயிர் பிள அளவேனும் பகிர்மின்கள் " என்று கூறுகிறார். 

(முழுப் பாடல் கீழே 

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

)

தானம் பற்றி சொல்லவந்த வள்ளுவர் 

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்த வற்றுள் எல்லாம் தலை 

என்றார்.

அதாவது நமக்கு கிடைத்த உணவை பகிர்ந்து உண்டு வாழுதல் சிறந்த அறம் என்றார். 

ஔவையார் அதை இன்னும் சுருக்கமாக சொல்ல vizhaikiraar. 

ஏழு  வார்த்தை  எல்லாம் அனாவசியம்  ... மூணே மூன்று வார்த்தையில் சொல்கிறார். 


ஐயம் இட்டு உண் 

அவ்வளவு தான். 

நாம் பொதுவாக என்ன செய்வோம் ? நாம் சாப்பிட்டு முடிந்த பின் , இருக்கும்  மிச்சத்தை வேலை காரிக்கோ, பிச்சை காரனுக்கோ தருவோம். ஒரு வேளை மிஞ்சாமல் போய் விடலாம். அப்போது என்ன செய்வது ? 

இப்ப எல்லாம், மிஞ்சியதை ஒரு சின்ன பாத்திரத்தில் மாற்றி குளிர் சாதன பெட்டியில் வைத்து மறு நாள் சுட வைத்து சாப்பிடுகிறார்கள். இதை எல்லாம் அறிந்து தானோ என்னவோ அவ்வை பாட்டி முதலில் பிச்சை போட்டு விடுங்கள். பின் நீங்கள் உண்ணுங்கள் என்கிறார்.

ஐயம் என்றால் பிச்சை. 

ஐயம் இட்டு (அதன் பின்) உண்.

முன்பு எல்லாம், இலையில் பரிமாறிய உடன், ஒரு கவளம் உணவை உருட்டி இலையின் ஓரத்தில் வைத்து விட்டு உண்பார்கள். இப்படி ஒவ்வொரு இலைக்கும் ஒரு கவளம் என்றால், இல்லை எடுக்கும்  ஏழைகளுக்கு அது போதுமானதாய் இருக்கும். 

எங்காயினும் வரும் ஏற்ப்பவர்க்கு இட்டது....

பசிப் பிணி போக்க அவ்வையின் மூன்றெழுத்து மந்திரம்...ஐயம் இட்டு உண்

 

6 comments:

  1. மிக நன்று. நன்றி.

    ReplyDelete
  2. இவ்வளவு நாளும் ஐயம் நா நெய் மாதிரி ஏதோ ஒரு பொருள் அதை போட்டு சாப்பிட வேண்டும் என்று நினத்திருந்தேன். அதுக்கு இதுவா அர்த்தம். great.
    மீதி ஆதிச்சூடிக்கும் விளக்கம் உடனே கொடுத்தால் என் ராஜ்யத்தில் பாதி உனக்கு எழுதி வைப்பேன்.

    ReplyDelete
  3. நல்ல பாடல். பகிர்ந்து உண்பது என்பதே மறந்துவிட்டது பல பேர்க்கு குளிர் சாதனப்பெட்டியின் வரவால்.

    ReplyDelete
  4. மனைவியும் அதே இலையைப் பகிர்ந்து கொள்கிறாள்.

    ReplyDelete
  5. உண்ணும் முன் உங்கள் முன்னோர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதும் அல்லவா?

    ReplyDelete
  6. ஐயம் என்றால் பயம் தானே???

    ReplyDelete