Thursday, November 8, 2012

திருவாசகம் - என் வேண்டுதல், உன் விருப்பம்


திருவாசகம் - என் வேண்டுதல், உன் விருப்பம்


ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான்.

அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான். ரொம்ப களைப்பு. பசி. தாகம். கொஞ்சம் பயம் வேறு.

சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் உட்கர்ந்து விட்டான்.

அது கற்பக மரம். நம் மனத்தில் நினைப்பதை எல்லாம் அப்படியே நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்தி கொண்டது. ஆனால் அது அந்த இளவரசனுக்குத் தெரியாது.

ரொம்ப தாகமா இருக்கிறதே. கொஞ்சம் தண்ணி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான். சற்றே திரும்பி பார்த்தால், அந்த மரத்தடியில் ஒரு சிறு குழி, அதில் குமிழியிட்டு நல்ல தண்ணீர் பொங்கி வந்து கொண்டு இருந்தது. தாகம் தீர குடித்தான்.

சற்று நேரத்தில் பசி வந்தது. ஏதாவது சாப்பிட கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான், அந்த மரத்தில் இருந்து சுவையான சில பழங்கள் விழுந்தன. அவனுக்கிருந்த பசியிலும், களைப்பிலும் என்ன ஏது என்று நினைக்க நேரமில்லை. அந்த பழங்களை உண்டு பசி ஆறினான். 

பிரயாணக் களைப்பு, உண்ட மயக்கம், தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வந்தது. அட டா இப்ப பஞ்சு மெத்தையோடு ஒரு கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான், உடனே ஒரு கட்டில் வந்தது. 

ஏறி படுத்தான். காலெல்லாம் வலிக்கிறது. பிடித்து விட ஒரு அழகான இளம் பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்....டங் என்று ஒரு பெண் தோன்றி அவன் காலை மெல்ல வருடி விட்டாள். 

அசந்து தூங்கினான். திடீரென்று முழிப்பு வந்து விழித்துக் கொண்டான்.

என்னடா இது, நாம நினைக்கிறது எல்லாம் நடக்கிறதே, ஒரு வேளை இது ஏதாவது பேய் பிசாசு வேலையா இருக்குமோ...அந்த பிசாசு இங்க வந்துட்டால் ? என்று நினைத்தான். டங் என்று ஒரு பெரிய பிசாசு வந்தது. கற்பக மரம் தான் நினைப்பது எல்லாம் கொடுக்குமே. 

ஐயோ, இந்த பிசாசு நம்மை கடித்து தின்று விடுமோ ? என்று நினைத்தான், அவன் நினைத்த மாதிரியே அவனை கடித்து தின்று விட்டது. 

இப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் நாம் பிசாசின் வாயில் தான் போய் விழுவோம்.

நல்ல பெண் என்று தான் நினைத்து திருமணம் செய்து கொள்கிறான். இவள் தான் வேண்டும். இவள் இல்லாவிட்டால் வாழ்கையே இல்லை என்று நினைக்கிறான். திருமணம் முடிந்தவுடன், ஐயோ, இவளுக்கா ஆசைப் பட்டேன் என்று நொந்து கொள்ளுகிறான்.

ஆசை ஆசையாக வீட்டை வாங்குகிறான், கட்டுகிறான்...அக்கம் பக்கம் தொல்லை ... ஏண்டா இங்க வந்தோம் என்று ஆகி விடுகிறது...

பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள் திரும்பிப் பார்க்காமல் போய் விடுகின்றன ... மனம் கிடந்து கவல்கிறது...

இப்படி வேண்டும் வேண்டும் என்று கேட்டது எல்லாம் பின்னாளில் வேண்டாம் வேண்டாம் என்று மறுதலிக்கும் படி ஆகி விடுகிறது...
 

கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்று. அவன் பார்த்து செய்யட்டும் என்று எல்லாவற்றையும் அவனிடமே விட்டு விட்டார் மணி வாசகர்...


பாடல் 


வேண்டத் தக்க தறிவோய்நீ
    வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
    யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
    அதுவும் உன்றன் விருப்பன்றே. 

பொருள் 

வேண்டத் தக்க தறிவோய்நீ = வேண்டத் தக்கது அறிவோய் நீ = எது வேண்டுவதற்கு உரியதோ, அதை நீ அறிவாய்.

வேண்ட முழுதுந் தருவோய்நீ = எதை வேண்டினாலும் அதை முழுமையாகத் தருவாய்

வேண்டும் = வேண்டுகின்ற

அயன்மாற் கரியோய்நீ = அயன் + மால் + அரியோய் நீ. விரும்புகின்ற பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் நீ அரியவன்.

வேண்டி = நீயே விரும்பி

என்னைப் பணிகொண்டாய் = என்னை உன் பணியாளனாக ஏற்றுக் கொண்டாய்

வேண்டி = விரும்பி

நீயா தருள்செய்தாய் யானும் = நீ எனக்கு என்ன அருள் செய்தாலும்

அதுவே வேண்டின்அல்லால் = அதுவே நானும் வேண்டினேன், அல்லாமல்

வேண்டும் = நான் வேண்டும், நான் விரும்பும்  

 பரிசொன் றுண்டென்னில் = பரிசு என்று ஒன்று இருந்தால் 

அதுவும் உன்றன் விருப்பன்றே. = அதுவும் உன்னோட விருப்பம். எனக்குன்னு ஒரு விருப்பமும் கிடையாது.
 

4 comments:

  1. என்ன தூள் பாட்டு, என்ன தூள் விளக்கம்! அமோகம்!

    ReplyDelete
  2. உங்கள் திரு சேவைக்கு நன்றி.... நமசிவாய வாழ்க

    ReplyDelete
  3. இப்பாடலை கேட்டவுடன் மனம் மகிழ்ந்தேன்

    ReplyDelete