Thursday, November 29, 2012

இராமாயணம் - வசையா? புகழா ?


இராமாயணம் - வசையா? புகழா ?


கைகேகிக்கு இராமன் மேல் அளவு கடந்த பாசம். கைகேயின் மனதை மாற்ற வந்த கூனி ஆரம்பிக்கிறாள் "ஆடவர்கள் நகைக்க, ஆண்மை மாசுற, தாடகை என்ற பெண்ணை கொன்ற, குற்றமுள்ள வில்லை கொண்ட  இராமனுக்கா முடி " என்று இராமன் ஒரு பெண்ணை கொன்றதை பெரிய குற்றமாக கூறி ஆரம்பிக்கிறாள். 

ஆனால், இராமன் மேல் பாசம் கொண்ட கைகேகிக்கு கூனி சொல்வது குற்றமாகவே படவில்லை. எப்படி ?

கூனி சொல்வதை எல்லாம் கைகேகி இராமனின் பெருமையாகவே நினைக்கிறாள். நமக்கு வேண்டியவர்கள், நாம் அன்பு செய்பவர்களைப் பற்றி யாரவது தவறாகச் சொன்னால் கூட நமக்கு அது பெரிதாகப் படாது அல்லவா, அது போல 

கூனி சொன்ன பாடல் இது தான் ...
 

ஆடவர் நகையுற, ஆண்மை மாசு உற,
தாடகை எனும் பெயர்த் தையலாள் பட,
கோடிய வரி சிலை இராமன் கோமுடி,
சூடுவன் நாளை; வாழ்வு இது' எனச் சொல்லினாள்.

கைகேகி கேட்டது 


தாடகை எனும் பெயர்த் தையலாள்
ஆடவர் நகையுற, ஆண்மை மாசு உற
பட
கோடிய வரி சிலை இராமன் கோமுடி,
சூடுவன் நாளை; வாழ்வு இது' எனச் சொல்லினாள்

தாடகை என்ற பெயர் கொண்ட ஒரு பெண், அவளால் ஆடவர்களின் ஆண்மை மாசுற்றது. ஒரு பெண்ணை அடக்க முடியவில்லையே என்று உலகம் ஆடவர்களை பார்த்து நகைத்தது. அப்படிப்பட்ட ஒரு பெண் வீழ்ந்து பட, வளைந்த வில்லை ஏந்திய இராமனுக்கு நாளை முடிசூட்டு விழா, நமக்கு வந்த வாழ்வு இது என்று கைகேயி, கூனி சொன்னதை இராமனின் சிறப்பாகவே பார்த்தாள்...அப்படி நினைத்ததனால் அவளுக்கு விலை உயர்ந்த முத்து மாலையை பரிசாகத் தந்தாள்....

தாடகை எனும் பெயர் தையலாள் என்பதற்கு தாடகை என்பவள் பெயருக்குத்தான் பெண் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.  

முத்து மணி ஆரம் கிடைத்தது....அதை கூனி என்ன செய்தாள் தெரியுமா ?

3 comments:

  1. இது என்ன சூப்பரா இருக்கு!

    திரும்பவும் சஸ்பென்சா?! சரி, சீக்கிரம் சொல்லு.

    ReplyDelete
  2. தொடர்கதை படிக்கற மாதிரி இருக்கு.தொடரும் போட்டு சஸ்பென்ஸ் வைக்காதே.Keep posting.

    ReplyDelete
  3. கூனி ராமனை இழிவு படுத்த நினைத்தால் ஆனால் கைகேயி அவள் சொல்லுவது ராமனை பெருமை படுத்துவதாகவே என்று நினைத்து கூனிக்கு பரிசு கொடுத்தல் .

    ReplyDelete