Friday, December 28, 2012

நாலடியார் - பேச்சா ? குரைப்பா?


நாலடியார் - பேச்சா ? குரைப்பா?


கல்வி அறிவை பெறுவது என்பது நம் கலாசாரமாய் இருந்திருக்கிறது. நம் இலக்கியங்களில் எவ்வளவு தூரம் பின்னோக்கி போனாலும், கல்வி கற்றவர்கள் நம் நாட்டில் மிகவும் போற்றப் பட்டு இருக்கிறார்கள். செல்வம், படை பலம் எல்லாவற்றையும் விட கல்வி மிகவும் போற்றப் பட்டு இருக்கிறது. அது இன்றும் தொடர்வது இதம் அளிக்கும் செய்தி. 

இங்கே நாலடியார் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 

படிக்காத முட்டாள், படித்தவர்கள் மத்தியில் இருப்பதை பார்க்கிறோம். அரசியல் வாதிகள், பணம் படைத்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கினால், பணத்தினால் கற்றோர் நிறைந்த சபையில் இடம் பிடித்து விடுகிறார்கள். அப்படி இடம் பிடித்தாலும் பரவாயில்லை, எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி பேசவும் தொடங்கி விடுவார்கள். இது எப்படி இருக்கிறந்து என்றால், பெரிய சபையில் நாய் நுழைந்த மாதிரி. அது நுழைந்ததே தப்பு. சரி, நுழைந்து விட்டது. பேசாமலாவது இருக்கலாம் அல்லவா ? அதால் இருக்க முடியாது. அது பேசவும் ஆரம்பித்தால், அது எப்படி இருக்கும். நாயின் குரைப்பாகத்தான் இருக்கும். அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமா ? இனிமை இருக்குமா ? 

பாடல் 


கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.

பொருள் 

கல்லாது நீண்ட ஒருவன் = கல்லாத ஒருவன் (நீண்ட - தின்னுட்டு தின்னுட்டு மரம் போல் வளர்ந்த)
உலகத்து = இந்த உலகில்
நல்லறி வாள ரிடைப்புக்கு = நல்ல அறிவுள்ளவர்கள் மத்தியில் செல்வது

மெல்ல இருப்பினும் = சுவடு படாமல், நைசாகப் போனாலும்

நாயிருந் தற்றே = அது நாய் இருப்பது போலத்தான் 

இராஅது = அது சும்மா    இருக்காது 

உரைப்பினும் = பேசினால் கூட 

நாய்குரைத் தற்று = குரைப்பது போலத்தான் இருக்கும் 

கற்றறிந்தோர் சபையில் பேசாமல் இருப்பது நல்லது....

1 comment:

  1. பாட்டு என்னவோ, அவ்வையார் எழுதி விட்டார். ஆனால், நம் மேடைகளில் எத்தனையோ பேர் அரசியல்வதிகளை புகழ்வதும், அவர்கள் காலில் விழுவதும் நடக்கத்தானே செய்கிறது?

    ReplyDelete