Thursday, January 10, 2013

இராமனுஜ நூற்றந்தாதி - என்ன செய்தால் மரண பயம் வராது


இராமனுஜ நூற்றந்தாதி - தனியன் 1 

என்ன செய்தால் மரண பயம் வராது ?


தனியன் என்பது வைணவ இலக்கியங்களில் ஒரு ஆழ்வாரையோ அல்லது ஒரு சமயப் பெரியவரை பற்றியோ கூறும் முன்னர் அவரைப் பற்றி போற்றி துதிக்கும் பாடல்கள். 

தனியன் என்றே ஏன் பேர் வந்தது ?

தனித்து நிற்பதால் தனியன் என்று வந்து இருக்கலாம். 

இறைவனைப் பாடாமல் தனி மனிதனைப் பாடியதால் அதற்க்கு தனியன் என்று பெயர் வந்து இருக்கலாம். 

இராமனுஜ நூற்றந்தாதியில் மூன்று தனியன்கள் உள்ளன. 

முதல் தனியனை இயற்றியது வேதப் பிரான் பட்டர் என்பவர்.  

நல்லா படிச்சிருக்கேன், நான் ஏன் fail  ஆகப் போகிறேன் ? நல்லா வேலை செஞ்சிருக்கேன், எனக்கு ஏன் இந்த வருடம் பதவி உயர்வு கிடைக்காது ? என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். 

என்ன செய்தால் மரண பயம் வராது ? 

மரண பயம் இல்லாதவர் யார் ? மரணம் தவிர்க்க முடியாது தான் என்றாலும், தொடர்ந்து வரும் பாவ புண்ணியம் இவற்றின் பலன்களை எப்படி தவிர்ப்பது ?

வேதப் பிரான் கூறுகிறார் 

பாடல் 



முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் – என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்.

பொருள் 

முன்னை வினையகல = முன்பு செய்த வினைகள் அகல (முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் என்பார் மணிவாசகர்). 

மூங்கிற் குடியமுதன் = மூங்கிற் குடி என்ற குலத்தில் தோன்றிய அமுதனார் 

பொன்னங் கழற் = பொன்னால் செய்த கழல் அணிந்த

கமலப் போதிரண்டும் = தாமரை பூ போன்ற பாதங்கள் இரண்டையும்

என்னுடைய = என்னுடைய

சென்னிக் கணியாகச் = சென்னிக்கு + அணியாக = தலைக்கு அணிகலனாக (நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வைத்து ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்வேன் என்பார் அபிராமி பட்டர் )

சேர்த்தினேன் = சேர்த்துக் கொண்டேன்

தென்புலத்தார்க்கு = தெற்கு புலத்தில் உள்ளவருக்கு (எமனுக்கு)

என்னுக் கடவுடையேன் யான் = எதற்கு கடன் படுவேன், நான் எதற்கு பயப் படவேண்டும் ?


1 comment:

  1. Great start with good introduction.I become emotional whenever i chant Ramanujar Noortruandhadhi.என்னுக் கடவுடையேன் யான் = எதற்கு கடன் படுவேன், நான் எதற்கு பயப் படவேண்டும் ?I thought the meaning is nan evvaru kadamaiyaven.Thanks.

    ReplyDelete