Friday, January 4, 2013

திரு மந்திரம் - கொடுத்துப் பாருங்கள்


திரு மந்திரம் - கொடுத்துப் பாருங்கள்


எத்தனை இருந்தாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று அலைகிறோம். பணம் இல்லாதவன் பணத்திற்கு அலைகிறான். பணம் இருப்பவன் அன்புக்கு அலைகிறான். நிம்மதிக்கு அலைகிறான். வேண்டாதார் யார் ?

மனித மனம் அடியற்ற பாத்திரம். எவ்வளவு இட்டாலும் நிறையாது. எப்போதும் குறையுடனேயே அலையும். பார்ப்பது எல்லாம் வேண்டும். கண்ணில் படுவது கையில் வேண்டும்.  

பெறுவதிலேயே கவனமாய் இருந்தோமே, கொடுப்பதை பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா ? கொடுக்கும் சுகம் அறிந்தால், பெறுவதில் உள்ள சுகம் மறையும். .அறம் செய்ய விரும்பு என்றால் அவ்வை. கொடுக்கும்போது திருப்தி வரும். நாம் ஒருவருக்கு உதவி செய்தோம் என்ற மன நிறைவு வரும். இன்னும் கூட செய்யலாமே என்ற எண்ணம் வரும். பிறருக்கு நன்மை செய்யும் இடத்தில் நம்மை வைத்த இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும். அமைதியும், இன்பமும் பிறக்கும். 

கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லையே...தானம் செய்யும் அளவுக்கு நான் என்ன அவ்வளவு பெரிய பணக்காரான என்று கேட்பவர்களுக்கு திருமூலர் பதில் சொல்கிறார். 

நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர் தெரியமா ? நீங்கள் கடவுளுக்கே கொடுக்கக் கூடிய அளவுக்கு பெரியவர். கடவுள் நம்மிடம் என்ன கேட்க்கிறார்...ஒரே ஒரு பச்சிலை...ஒரு துளசி தளம். அவ்வளவு தான் அவனுக்கு வேண்டும். அன்போடு ஒரே பச்சை இலை கொடுத்தால் போதும் அவனுக்கு. அது முடியாதா ? 

எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை. அப்படியே கடவுள் இருந்தாலும், அவருக்கு ஒரு பச்சிலை கொடுப்பதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்று வாதிப்பவர்களும் இருக்கலாம். 

வேண்டாம், நீங்கள் கோவிலுக்குப் போக வேண்டாம், சாமி கும்பிட வேண்டாம்...மற்ற உயிர்கள் மேல் அன்பு இருக்கிறதா உங்களுக்கு ? போகிற வழியில் நாலு புல்லை பிடுங்கி வழியில் நிற்கும் பசுவுக்கு வயிறார கொடுங்கள். செய்யலாம் தானே ?

எங்க அபார்ட்மெண்ட் பக்கம் புல்லும் இல்லை பசு மாடும் இல்லை. இதுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். தினம் சாபிடுவீர்கள் தானே ? அதுக்கு நேரம் கட்டாயம் இருக்குமே ? அப்படி சாப்பிடும் போது, ஒரு கை உணவை காக்கைகோ, குருவிக்கோ கொடுங்கள். 

என்னங்க நீங்க புரியாத ஆளா இருக்கீங்க...அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், பெரிய உணவகங்களில் சாப்பிடும் போது காக்காவையும் , குருவியையும் எங்க போய் தேடுவது என்று அலுத்துக் கொள்கிறீர்களா ?

ஒண்ணும் முடியாவிட்டால், மற்றவர்களுக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கள்..அதுவே பெரிய தர்மம்தான். பொய் இல்லாத, கபடம் இல்லாத, சுடு சொல் இல்லாத...இனிய வார்த்தை சொல்லுங்கள்...அது கூட ஒருவிதத்தில் தானம் தான்....

சொல்லித் தெரியாது காமம்
சொன்னாலும் புரியாது தர்மம்...

கொடுத்துப் பாருங்கள், அதன் சுகம் தெரியும்.....

வறிஞர்க்கு நொயிர் பிளவேனும் பகிர்மின்கள் என்பார் அருணகிரி....

பாடல் 

யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே

பொருள் 

யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை = எல்லோருக்கும் சொல்கிறேன், இறைவனுக்கு ஒரு பச்சிலை போதும்

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை = பசுவுக்கு ஒரு வாய் நிறைய புல்லோ, கீரையோ

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி = உண்ணும் உணவில் ஒரு பிடி மற்ற உயிர்களுக்கு தாருங்கள்

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே = ஒண்ணும் முடியாவிட்டால், நல்ல சொல்லாவது தாருங்கள் 

3 comments:

  1. துளசி என்று கூட சொல்லவில்லை. ஏதோ ஒரு பச்சை இலை என்று தான் சொல்லி இருக்கிறார். ஏனென்றால் துளசி, வில்வம் என்று குறிப்பிட்டு சொன்னால் நாம் அது கிடைக்க வில்லை என்று சொல்லி விடுவோம் .

    ReplyDelete
  2. இதை விட எளிமையா எப்படி சொல்றது. ஆனா அது கூட மண்டையில் உரைக்க மாட்டேன்கிறது. வாங்குவதற்கு உடனடியா நீளும் கை கொடுப்பதற்கு மட்டும் ஏன் எப்போதும் யோசிக்கிறது?

    ReplyDelete
  3. என்ன அருமையான, எளிமையான பாடலில் எவ்வளவு நல்ல கருத்து! தந்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete