Sunday, February 3, 2013

இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல் - 2

இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல் 


இராவணனுக்கும் ஜடாயுவுக்கும் பெரிய போர் நடந்தது. ஜடாயுவுக்குத் தெரியும் தான் தோற்று விடுவோம் என்று.

இராவாணன் யார் ?

முக்கோடி வாழ் நாள், முயன்றுடைய பெருந்தவம், எக்கொடி யாராலும் வெல்லப்  படாய்  என்று ஈசன்  கொடுத்த வரம், திக்கு அனைத்தும் அடக்கிய புய வலி, நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் படைத்த நாக்கு....

கூற்றையும் ஆடல் கொண்டவன் ...

இருந்தும் ஜடாயு போரிட்டான் ? ஏன் ?

அநீதியை எதிர்த்து போரிட வேண்டும் என்று  உணர்த்த.

அந்தப் போரினை கம்பர் காட்டும் அழேகே அழகு.

ஆங்கில இலக்கியத்தில் பெரிய ஆளாக பேசப் படும் ஷேக்ஸ்பியர் கூட போரை வர்ணிப்பதில் அவ்வளவு திறமையானவர் அல்ல என்று சொல்வார்கள். அவருடைய நாடகத்தில் போர் வர்ணனை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது

இராவண ஜடாயு யுத்தம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்....

அதில் இருந்து ஒரு அருமையான பாடல்...கம்பனின் உவமை காட்டும் அழகுக்கு ஒரு சின்ன உதாரணம் ...

ஜடாயுவின் மேல் இராவணன் வேலை எறிந்தான்
பொருள் இல்லாமல்
அந்த வேல் ஜடாயு கிட்ட போனது, நின்றது, திரும்பி விட்டது...

அதற்க்கு கம்பன் மூன்று உதாரணம் சொல்கிறான் ...

முதல் உதாரணம்

பொருள் இல்லாமல் ஒரு விலை மாதின் வீட்டிற்கு சென்றவன் போல் நின்று திரும்பியது அந்த வேல்....

என்ன உதாரணம்.....

உள்ளே போக ஆசை தான்...ஆனால் கையில் காசு இல்லை...உள்ளே விட மாட்டாள்...அப்படியே வாசலில் நிற்கிறான்... அவள் வெளியே வந்தால் பார்த்து விட்டு செல்லலாம் என்று. அவளோ, அவன் போக விட்டு வரலாம் என்று இருக்கிறாள். சோர்ந்து ,  அவன் திரும்பி போகிறான்

அது போல் அந்த வேல் திரும்பி போனது...ஜடாயுவின் உடலின் உள்ளே போக முடியாமல் சோர்ந்து திரும்பியது....



பொன் நோக்கியர்தம் புலன் 
     நோக்கிய புன்கணோரும், 
இன் நோக்கியர் இல் வழி 
     எய்திய நல் விருந்தும், 
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் 
     தம்மைச் சார்ந்த 
மென் நோக்கியர் நோக்கமும், ஆம் 
     என மீண்டது, அவ்வேல்.



பொன்னை (பொருளை ) நோக்கிய விலை மாதரின் அங்கங்களை நோக்க வந்த கவலை தோய்ந்த கண்களை உடையவர் திரும்பி போவது போல ......


இன் நோக்கியர் இல் வழி 
     எய்திய நல் விருந்தும், 


ஒரு வீட்டிற்கு விருந்துக்குப் போனவன் அந்த வீட்டில் நல்ல உபசரிப்பு இல்லை என்றால் எப்படி சட்டென்று திரும்பி விடுவானோ அப்படி அந்த வேல் சட்டென்று திரும்பியது.

விருந்தினர்களை உபசரிப்பது என்பது தமிழ் கலாசாரம் என்ற பொருள் உள்ளே உள்ளது.

முகம் மாறி நோக்க வாடும் விருந்து என்பது வள்ளுவர் வாக்கு.

மோப்பக் குழையும்  அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்பார் வள்ளுவர்.

அப்படி உபசரிப்பு இல்லாத இடத்திற்கு வந்த விருந்தினன் எப்படி முகம் வாடி , மனம் வாடி திரும்பிப் போவானோ அப்படி அந்த வேல் திரும்பிப் போனது.

இன் நோக்கியர் = இனிமையான முகத்தை நோக்கி வந்த
இல் வழி = இல்லாத இடத்தில்
எய்திய நல்   விருந்தும் = சென்ற நல்ல விருந்தினனை போல

இப்படி பட்ட உயர்ந்த ஜடாயுவை நாம் கொல்ல  வந்தோமே என்று வெட்கி, வருந்தி திரும்பியது.





தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் 
     தம்மைச் சார்ந்த 
மென் நோக்கியர் நோக்கமும்



அடுத்த உதாரணம் மற்றவற்றினும் சிறந்தது.



தன் நோக்கிய = தன்னை நோக்கி அறிந்த 
நெஞ்சுடை யோகியர்  = மனம் உள்ள யோகியர் 
தம்மைச் சார்ந்த = அவர்களை சென்று பார்த்த  
மென் நோக்கியர் நோக்கமும் = மென்மையான பெண்களின் பார்வை போல 

துறவிகளின் மேல் சென்ற குலப் பெண்களின் கண்கள் எப்படி சட்டென்று திரும்புமோ அப்படி அந்த வேல் திரும்பியது. 

என்ன உள்  பொருள் ? பெண்ணின் கண்கள் ஆணை எளிதில் சபலப் பட வைக்கும். முனிவர்களையும் அது மயக்கி விடும் எனவே பெண்கள் மற்ற ஆண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்க மாட்டார்கள்.  அதிலும் குறிப்பாக துறவிகளை, அவர்கள் பார்த்தாலும் ஒரு கணத்தில் அந்த பார்வையை வேறு  இடத்திற்கு மாற்றி விடுவார்கள். அந்த மாதிரி அந்த வேல்  சட்டென்று திரும்பிற்று. 

உவமைக்கு கம்பனை மிஞ்ச ஆள் இல்லை. 





2 comments:

  1. ஒரே பாடலில் மூன்று உவமையா?! அற்புதம்.

    ReplyDelete
  2. "உபமா காளிதாசஸ்ய" என்று உவமை கூறி விளக்குவதில் காளிதாசன் சிறந்தவன் என்று கூறுவார்கள். அவர்கள் எல்லாம் கம்பனை படிக்காதவர்கள் என்று தெரிகிறது .

    ReplyDelete