Tuesday, February 12, 2013

இராமாயணம் - நல் வழி செல்லும் மனம்


இராமாயணம் - நல்  வழி செல்லும் மனம் 


இராமன் மிதிலை நகர் வருகிறான். கன்னி மாடத்தில் சீதை நிற்பதை காண்கிறான். அவன் மனம் அவள் பால்  விடுகிறது. அண்ணலும் நோக்கினான் , அவளும் நோக்கினாள். 

காதல் அரும்பியது 

இதயம் இடம் மாறியது 

இரவில் தனிமையில் இருக்கும் போது இராமன் யோசிக்கிறான். 

நாம அந்த பெண்ணை விரும்பினோம். ஒரு வேளை  அவள் திருமணம் ஆன பெண்ணாய்  இருந்தால் ? பிறன் மனை நோக்குவது தவறு அல்லவா ? எனக்கு எப்படி அப்படி ஒரு ஆசை வரலாம் ? என்று யோசிக்கிறான். 

பின் அவனே சொல்கிறான்....என் மனம் தவறான வழியில் போகவே போகாது. என் மனம் விரும்பியதால் அவள் திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான்.

எவ்வளவு நம்பிக்கை இராமனுக்கு தன்  மேல் !


பாடல் 

ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்,
பாகுபோல் மொழிப் பைந்தொடி, கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!


பொருள் 

ஆகும் நல்வழி = நல்ல வழி ஆகும் 

அல்வழி என் மனம் ஆகுமோ? = (நல்  வழி ) அல்லாத வழியில் ஆகுமோ என் மனம்  

இதற்கு ஆகிய காரணம் = இதற்கு ஆகிய காரணம் (நான் அவள் மேல் காதல் கொள்ளக் காரணம்)

பாகுபோல்  மொழிப் = சர்க்கரை பாகு போன்ற இனிய மொழியை உடைய 

பைந்தொடி = ஆபரணங்களை அணிந்த அந்தப் பெண் 

கன்னியே ஆகும் = கன்னியே. திருமணம்   ஆகதவளாகத்தான் இருக்க வேண்டும். . கன்னியே ஆகும் என்று உறுதியாக சொல்லுகிறான். 
 
வேறு இதற்கு ஐயுறவு இல்லையே! = இதில் எந்த சந்தேகமும் இல்லை 

1 comment:

  1. இராமனுக்குத் தன் மேல் நம்பிக்கை இருக்கலாம். சினிமா நடிகை முதல், தெருவில் போகும் பெண்கள் வரை எல்லோரையும் சைட் அடிக்கும் நமக்கு இப்படி நம்பிக்கை வர வழியே இல்லை!

    ReplyDelete