Saturday, February 9, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - வழியைக் கடக்க


இராமானுஜர் நூற்றந்தாதி - வழியைக்  கடக்க


மொழியைக் கடக்கும் பெரும்புக ழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.

கூரத்தாழ்வானின் புகழை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மொழியின் எல்லைகளை கடந்தது அவன் புகழ்.

வஞ்சகமான மூன்று கொடிய குணங்களில் இருந்து கடக்க அவன் நாமமே சரண்

நாம் சேர்த்து வைத்த பழியையை கடத்த இராமானுஜனின் புகழ் அல்லால் வேறு ஒன்றும் இல்லம்

பொருள்:

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் = மொழியை கடந்து நிற்கும்  புகழை உடையவன்.

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே!       

என்பது அபிராமி அந்தாதி.



வஞ்ச முக்குறும்பாம் = வஞ்சகம் செய்யும் மூன்று கெட்ட  குணங்கள். கல்வி செல்வம், குல செருக்கு என்று கொள்ளலாம். அல்லது காமம், குரோதம் மாச்சர்யம் என்றும் கொள்ளலாம். அந்த மூன்று கெட்ட குணங்கள் என்ற

குழியைக் கடக்கும் = குழியில் விழுந்து விடாமல் அதை தாண்டிப் போய்


நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் = நம் கூரத்தாழ்வானின் திருவடிகளை அடைந்த பின்

பழியைக் கடத்தும் = நாம் செய்த பழிகளை கடத்தும்.

முன்பு செய்த பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோள்கள் என்பார் அருணகிரி.

இராமா னுசன்புகழ் பாடியல்லா = இராமானுஜன் புகழ் பாடுவதைத் தவிர

வழியைக் கடத்தல் = வழியை கடந்து செல்லுதல். வழி என்றால் நல்ல வழி மட்டும் தான். பெரியவர்கள் கெட்ட  வழியையை சொல்லுவது இல்லை.

நெறியல்லா நெறிதன்னை நெறியாக முயல்வனே என்பார் மணிவாசகர். நெறி அல்லாத நெறி தீ நெறி.

துணையோடு அல்லது நெடு வழி போகேல் என்றாள் அவ்வைப் பாட்டி.

வைகுண்டம் எவ்வளவு தூரம்?

அவ்வளவு தூரம் துணை இல்லாமல் போகலாமா ?

இராமானுஜன் திருவடிகளே துணை.

எனக்கினி யாதும் வருத்தமன்றே.= எனக்கு இனிமேல் ஒரு வருத்தமும் இல்லை.



1 comment:

  1. நேராக இறைவனையே பாடாமல், அவரது தொண்டரான இராமானுசனைப் பாடிய இந்தக் கவிஞர் எவ்வளவு தன்னடக்கம் கொண்டவராக இருந்திருக்க வேண்டும்?!

    ReplyDelete