Wednesday, March 20, 2013

அற்புதத் திருவந்தாதி - காண்பார்


அற்புதத் திருவந்தாதி - காண்பார் 


காரைக்கால் எழுதியது அற்புதத் திருவந்தாதி. உண்மையிலேயே அற்புதமான நூல்.  அதில் இருந்து ஒரு பாடல். 

கடவுள் இருக்கிறாரா ? இந்த கேள்வி காலம் காலமாய் எழுப்பப்பட்டு முடிவான விடை கிடைக்காமல் மனித குலம் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது. 

காரைக்கால் அம்மையார் இறை உணர்வு பற்றி மனிதர்களை மூன்று விதமாகப் பிரிக்கிறார்.

கடவுள் என்று யாரும் கிடையாது. இந்த உலகைப் படைத்தவன் கடவுள் அல்ல.. இந்த உலகம் தானே உண்டானது. இது சில நியதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது. என்று வாதிடும் ஒரு சாரார் 

இன்னொரு சாரார், நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அது என்னவென்று  தெரியாது. அப்படி ஒன்று இல்லாமலா இத்தனையும் நடக்கிறது ? இந்த உலகம் ஒரு நியதிக்கு உட்பட்டு இயங்குகிறது என்று கூறினால் அந்த நியதிகள் எப்படி வந்தன. இவர்கள் இறைவனை முழுமையாக அறியாதவர்கள். ஆனால் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று அவர்களின் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

மூன்றாவது, இறைவனை அறிந்து, உணர்ந்து, அவன் அன்பில், கருணையில் உருகி அவனையே எங்கும் காண்பார்கள். உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்த ஜோதியாய் காண்பார்கள். 

இதில் முதலாவது பகுதியை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படி இறைவன் தோன்றுகிறான். மீண்டும் மீண்டும் தோன்றும் ஒரு ஒழுங்கு, ஒரு நியதி ...அதுவாக இருக்கிறான் இறைவன் அவர்களுக்கு. 

இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்கள்...கை கூப்பி தொழுது ஏதோ ஒரு உருவத்தில் அவனை நினைக்கிறார்கள்...பெருமாள் சிவன், பிள்ளையார் முருகன் என்று அவர்கள் ஏதோ ஒரு உருவத்தில் அவனை நினைக்கிறார்கள். அந்த உருவத்தில் அவர்களுக்கு அவன் காட்சி தருகிரான் 

மூன்றாவது ரகம், இவர்களுக்கு இறைவன் ஜோதி ரூபமாய் உள்ளும் புறமும் எங்கும் நீக்கமற நிறைந்து காட்சி தருகிறான்.

பாடல் 
  

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.

பொருள் 




காண்பார்க்குங் காணலாந் தன்மையனே = காண்பவர்களுக்கு காணும் தன்மையை கொண்டவன். இவர்கள் இறைவன் இல்லை என்று நம்புபவர்கள். இந்த பாடலில் மூன்று விதமான காண்பவர்களை பற்றி கூறுகிறார் அம்மையார்.. ..காண்பவர், கை தொழுது காண்பவர், காதலால் காண்பவர். முதல் இரகம் காண்பவர். அவ்வளவுதான். தொழுதலும் கிடையாது, காதலும் கிடையாது. அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் அவர்கள் எது உண்மை என்று நினைக்கிறார்களோ அப்படி பட்ட தன்மை கொண்டவனாக இருக்கிறான். 

கைதொழுது காண்பார்க்குங் காணலாங் = கை தொழுது காண்பார்க்கு, அவர்கள் காணும் விதத்தில் அவன் இருக்கிறான். 

 காதலாற் - காண்பார்க்குச் = காதலோடு அவனை காண்பார்க்கு 

சோதியாய்ச் = சோதி வடிவமாய் 

 சிந்தையுளே தோன்றுமே = சிந்தையுள் தோன்றுவான். ஜோதி என்றதனால் அதை வெளியிலும் காணலாம் என்று நாம் அறிய முடியும் 

 தொல்லுலகுக் காதியாய் நின்ற அரன் = இந்த பழமையான உலகுக்கு ஆதியான அரன் ....

.

1 comment:

  1. This is called an argument that you cannot win. It is like this: "If good things happen after prayers, it is due to god's kindness; if bad things happen, you did not pray enough!" Either way, you are stuck.

    The same way, Karaikkal Ammaiyaar says that god appears to you in the form that you believe, even if you say you don't believe in god! Ha!

    ReplyDelete