Friday, April 19, 2013

புற நானூறு - பரிசு கிடைக்காத சோகம்


புற நானூறு - பரிசு கிடைக்காத சோகம்

அந்த காலத்தில் புலவர்கள் ரொம்ப துன்பப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வரும் ஒரே வருமானம் அரசர்கள் தரும் பரிசு தான். அரசனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நிர்வாகம், போர், வரி வசூல், வாரிசு சண்டைகள், உள்நாட்டு குழப்பங்கள் என்று. இதற்க்கு நடுவில் நேரம் ஒதுக்கி, புலவர் பாடும் பாடல்களை கேட்டு, அதற்க்கு பொருள் புரிந்து, பாராட்டி பரிசு தரவேண்டும்.

இங்கு ஒரு புலவர்....

புலவருக்கு கையில் காசு இல்லை. வறுமை. இதில் இவர் திருமணம் வேறு செய்து கொண்டு, பிள்ளை வேறு. இவரை நம்பி யார் பொண்ணு குடுப்பார்களோ தெரியவில்லை. பாவம் அந்த பெண். பிள்ளை பாலுக்கு அழுகிறது.. அவளிடம் பால் இல்லை தருவதற்கு. புலவர் பரிசு பெற்று வந்தால், உணவு சமைக்கலாம் என்று காத்து இருக்கிறாள். வீட்டில் சாப்பிட ஒன்றும் இல்லை. உணவை தேடி தேடி வீட்டில் உள்ள எலிகள் கூட இறந்து போய்விட்டன. 

அரசன் பரிசு தருவாதாய் இல்லை. பாட்டை மட்டும் கேட்டு இரசித்து விட்டு, கடைசி வரை பரிசு தரவே இல்லை. ஏன் என்று தெரியவில்லை. பரிசை கட்டி இருக்கிறான், ஆனால் தரவில்லை.  அவனுக்கு என்ன பொருளாதார நெருக்கடியோ. அல்லது, வேறு எதுவும் பிரச்சனையில் அவன் மனம் கிடந்து உழன்றதோ தெரியாது.

புலவர் புறப்பட்டுவிட்டார். ...எனக்கு பரிசு தரவில்லையே, உனக்கு வெட்கமே இல்லை என்று போகும் போது நாசுக்காக திட்டிவிட்டு போகிறார்.

பாடல்:


அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்
குன்றுதூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்!நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்எனக்
கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின்
உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்
கையுள் ளதுபோல் காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாணக் கூறி என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை யானே; வைகலும்
வல்சி இன்மையின், வயின்வயின் மாறி
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து
முலைக்கோள் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்தவென் வாள்நுதற் படர்ந்தே.


பொருள்:



அஞ்சுவரு மரபின் = அஞ்சும் இயல்புடைய

வெஞ்சினப் = வெம்மையான சினம் கொண்ட

புயலேறு =  இடியுடன் கூடிய மழை (புயல் = மழை, ஏறு = இடி)

அணங்குடை =  அச்சப்டும் குணம் உள்ள

அரவின் = பாம்பின்

அருந்தலை = அருமையான தலை

துமிய = துண்டாகும்படி

நின்றுகாண் பன்ன = நின்று காணும்படி 

 நீள்மலை மிளிரக் = நீண்ட மலைகள் பிறழ

குன்றுதூவ = குன்றுகள் அதிரும் படி

எறியும் அரவம் போல = பயந்து ஓடும் பாம்பை போல் 

முரசு = முரசு

எழுந்து இரங்கும் தானையோடு = முரசு அதிரும் படையோடு

 தலைச்சென்று = முன்னே சென்று

அரைசு = அரசுகளை

படக் கடக்கும் = பல வென்று

உரைசால் தோன்றல்! = புகழ் நிறைந்த அரசனே

நின் =  உன்னை 

உள்ளி = நினைத்து

வந்த = வந்த

ஓங்குநிலைப் பரிசிலென் = சிறந்த பரிசு பெறுவேன் என்று

வள்ளியை = நீ பெரிய வள்ளல்

ஆதலின் = ஆதலால்

 வணங்குவன் இவன்எனக் = உன்னை இவன் (நான்) வணங்கி

கொள்ளா மாந்தர் = பரிசு கொடுக்காத மற்றவர்களின்

கொடுமை கூற = கொடுமைகளை கூற

நின் உள்ளியது முடிந்தோய் மன்ற = நீ நினைத்ததை முடிப்பவன்

முன்னாள் = கொஞ்ச நாட்களுக்கு முன்னால்

கையுள் ளதுபோல் காட்டி = கையில் (பரிசு) இருப்பது போல் காட்டி

வழிநாள் பொய்யொடு நின்ற = பொய்யாகப் போன (பரிசில் தரமால்)

புறநிலை வருத்தம் = தருவாய் என்று நான் எதிர்பார்த்து, தராமல் நீ மாறுபட்டு, நம் நிலைகள் மாறி அதனால்

நாணாய் ஆயினும் = உனக்கு வெட்கம் இல்லாவிட்டாலும்

நாணக் கூறி = நான் வெட்கப்படும்படி கூறி

என் = என்னுடைய

நுணங்கு = நுண்ணிய

செந்நா = செம்மையான நாக்கு

அணங்க = துன்புறும்படி 


ஏத்திப் = உன்னை புகழ்ந்து பாடி

பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின் = நான் பாடப் பாடப் மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்ட நீ

ஆடுகொள் = வெற்றி கொண்ட (ஆடு - வெற்றி)

வியன்மார்பு = விரிந்த மார்பை

தொழுதெனன் = தொழுதேன்

பழிச்சிச் = வாழ்த்தி

செல்வல் அத்தை யானே = செவென் அதை (அந்த மார்பை) நானே

வைகலும் = நாளும்

வல்சி = உணவு

இன்மையின் = இல்லாமல்


வயின்வயின் மாறி = வயின் என்றால் இடம். இடம் இடம் மாறி, ஒவ்வொரு இடமாய்

இல்எலி மடிந்த = உணவு கிடைக்காமல், ஒவ்வொரு இடமாய் அலைந்து, பின் இறந்த எலி

தொல்சுவர் வரைப்பின் = பழைய சுவற்றில் பொந்து (வளை) உண்டாக்கி

பாஅல் இன்மையின் = பால் இல்லாமையால்

பல்பாடு சுவைத்து = பலமுறை சுவைத்து

முலைக்கோள் மறந்த = தாயின் முலைகளை மறந்த

புதல்வனொடு = மகனோடு

மனைத்தொலைந் திருந்த = தொலைவில் இருக்கும் என் வீட்டிற்கு

வென் வாள்நுதற் படர்ந்தே.= ஒளி பொருந்திய நெற்றியை உடைய என் மனைவியிடம் நான் போகிறேன் (நினைத்தே என்றும் பொருள் சொல்லலாம்)


வீட்டிற்கு போய் தான் என்ன செய்வான் ? எப்படி அவன் மனைவியின் முகத்தை  பார்ப்பான். பால் இல்லாமல் சோர்ந்து கிடக்கும் பிள்ளையை என்ன செய்வான். அரசனே உதவி செய்யவில்லை என்றால், வேறு யார் இவனுக்கு உதவி செய்ய முடியும் ?

அரசனை திட்டுகிறான். உனக்கு வெட்கம் இல்லை என்று. நீ ஏமாற்றுக் காரன் என்று, கஷ்டப்பட்டு உன்னை புகழ்கிறேன் என்று என்னனமோ சொல்கிறான். அரசன் சாதாரண ஆள் இல்லை. பல நாடுகளை வென்றவன். நினைத்திருந்தால் , புலவனின் தலையை சீவி இருக்கலாம்...புலவனுக்கு பயம் இல்லை....வாழ்வில் அவன் இருந்து சாதித்தது தான் என்ன ?

துக்கத்திலும், கோபத்திலும், வறுமையின் மெலிவிலும் எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டான்.

இந்தப் பாட்டு, காலம் காலமாக எத்தனையோ பேரை பாதித்திருக்க வேண்டும்....அப்படி பாத்தித்ததால் தான் இத்தனை தலை முறை தாண்டி அது வந்திருக்கிறது.....

அவனின சோகம், அந்த பெண்ணின் சோகம், அந்த பையனின் சோகம் நம் மேலும் படர்வதை உணரலாம்....

கவிதை....


1 comment:

  1. என்ன வயிற்று எரிச்சலில் படிய பாடல் என்பது நன்றாகத் தெரிகிறது.

    ReplyDelete