Tuesday, April 16, 2013

திருக்குறள் - கண்டவுடன் காதலா ?

திருக்குறள் - கண்டவுடன் காதலா ?


இன்பத்துப் பால்....வள்ளுவர் 25 அதிகாரம், 250 பாடல் எழுதி இருக்கிறார்.

அத்தனையும், காதல் சொட்டும் பாடல்கள். 8 வார்த்தையில் காதலை இவ்வளவு அழுத்தமாய் சொல்ல முடியுமா என்று உதட்டோரம் புன்னகையை வரவழைக்கும் பாடல்கள்.

அதிகாரங்களை வரிசைப் படுத்துவதில் ஆகட்டும், அதிகாரத்திற்குள் பாடல்களை வரிசைப் படுத்துவது ஆகட்டும் ...அதிலும் ஒரு அழகு சேர்த்திருக்கிறார் வள்ளுவர்.

முதல் பாடல்....தலைவன் முதன் முதலாக தலைவியை சந்திக்கப் போகிறான். அவள் தான் அவன் தேடிய காதலி என்று அவனுக்குத் தெரியாது. அவளுக்கும் தெரியாது இன்று அவள் அவளின் காதலனை காணப் போகிறாள் என்று.

அவள் பாட்டுக்கு சோலையில் உலவிக் கொண்டு இருக்கிறாள்.

அவன், அந்த சோலைக்கு வருகிறான். அவள் இருப்பாள் என்று இவனுக்குத் தெரியாது. அவன் வருவான் என்று இவளுக்கும் தெரியாது. இருவரும் ஒருவரை ஒருவர் இதுவரி பார்த்துக் கொண்டது கூட தெரியாது.


வள்ளுவர் காமிரா கோணம் வைக்கிறார் ...கதாநாயகன் பார்வையில் இருந்து.

ஒரு லாங் ஷாட். தூரத்தில் அவள் இருக்கிறாள்.

நடக்கிறாளா , மிதக்கிறாளா என்று தெரியவில்லை.  காற்றோடு கை கோர்க்கும் `கூந்தல், அலைபாயும் மேலாடை...தேவதை மாதிரி இருக்கிறாள்....ஒரு வேளை உண்மையாவே தேவதையோ என்று சந்தேகம் கொள்கிறான்...

அணங்கு கொல் ?

இன்னும் கொஞ்சம் கிட்ட போகிறான். கொஞ்சம் க்ளோஸ் அப் ...இல்லை...தேவதை இல்லை...அவள் அசைந்து வருவது தெரிகிறது...அழகான மயில் போல் இருக்கிறாள்...

ஆய் மயில் கொல் ?

இன்னும் கொஞ்சம் கிட்ட போகிறான்...இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப் ....

இல்லை, மயில் இல்லை...காதில் கம்மல் போட்டு இருக்கிறாள்...மயில் கம்மல் போட்டு இருக்குமா ? இவள் மானுடப்  பெண் தான்

மாதர் கொல்  ?

பாடல்

அணங்கொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.


கொஞ்சம் பொருள் பிரிக்கலாம்

அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ கனங் குழை
மாதர் கொல்  மாலும் என் நெஞ்சு


பொருள்







அணங்கு கொல் = தேவரலுக பெண்ணோ ?

ஆய் மயில் கொல்லோ = அழகான மயிலோ ?

கனங் குழை = சிறப்பான (?) காதணியை கொண்ட 

மாதர் கொல் = மானிடப் பெண்ணோ ?

மாலும் என் நெஞ்சு = அலைபாயும் என்நெஞ்சு

அடுத்து என்ன ? ஹீரோயினும் ஒரு லுக்கு விட வேண்டியது தான்....அண்ணன் ஜொள்ளு விட விடவேண்டியது தான்...

ஜொள்ளு அடுத்த குறளில் ...


1 comment:

  1. உதட்டோரம் என்ன, உள்ளத்திலேயே புன்னகையை வர வைக்கிறது இந்தப் பாடல்.

    சும்மா சினிமாவுக்கு எழுதின மாதிரி, உன் வர்ணனையும் பிரமாதம்.

    ReplyDelete