Wednesday, May 29, 2013

இரணியன் வதம் - நரசிங்கம் தோன்றுதல்

இரணியன் வதம்  - நரசிங்கம் தோன்றுதல் 


சற்றே இந்த பாடலை உரத்துப் படித்துப் பாருங்கள்...மெய் சிலிர்க்கும்.....

இந்த தூணில் இருக்கிறானா உன் நாராயணன் என்று கேட்டான் இரணியன்.

ஆம், இந்த தூணில் மட்டும் அல்ல, சாணிலும், அணுவை சத கூறிட்ட கோணிலும், நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று  கூறினான் பிரகலாதன்

ஆஹா அப்படியா சங்கதி, அதையும் பார்க்காலாம் என்று தன் பெரிய கைகளால் அந்த தூணை ஓங்கி அறைந்தான் இரணியன்.

தூண் வெடித்து சிதறியது. திசைகளை கிழித்துக் கொண்டு, இந்த அண்டமே அதிரும்படி சிரித்துக் கொண்டு வெளி வந்தது சிவந்த கண்களை கொண்ட ஒரு சிங்கம்

சற்றே இந்த பாடலை உரத்துப் படித்துப் பாருங்கள்...மெய் சிலிர்க்கும்.....குறிப்பாக அந்த கடைசி வரி....


பாடல்


நசை  திறந்து இலங்கப் பொங்கி, "நன்று, நன்று !" என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச் செங் கண் சீயம்.

பொருள் 


 
நசை = நசை என்றால் ஆசை. ஆவல். (பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை என்பது குறள் )

திறந்து = பிறந்து

இலங்கப் = தெளிவாக தெரிந்து கொள்ள (இலட்சியம் என்பதின் வேர்ச் சொல்)

பொங்கி = கோபத்தால் பொங்கி

 "நன்று, நன்று !" = நல்லது நல்லது 

என்ன நக்கு = என்று ஏளனமாக சிரித்து

விசை திறந்து = மிகுந்த விசையுடன், மிகுந்த வேகத்துடன்

உருமு வீழ்ந்ததென்ன = இடி விழுந்தது போல

ஓர் தூணின் = ஒரு தூணின்

வென்றி = வெற்றி பெற்ற

இசை திறந்து = புகழ் பெற்ற

உயர்ந்த கையால் = பெரிய கையால் (ஒரே கையால் )

எற்றினான் = அறைந்தான்

எற்றலோடும் = அறைந்தவுடன் 

திசை திறந்து = திசைகளை கிழித்துக் கொண்டு

அண்டம் கீறச் = அண்டம் பிளந்து கிழியுமாறு

சிரித்தது = சிரித்தது

அச் செங் கண் சீயம் = அந்த சிவந்த கண்களை கொண்ட சிங்கம் 

1 comment:

  1. உண்மையாகவே உறுமும் பாடல்!

    ReplyDelete