Friday, June 28, 2013

திருக்குறள் - செவிச் செல்வம்

திருக்குறள் - செவிச் செல்வம்


செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

செல்வங்களில் எல்லாம் பெரிய அல்லது உயர்ந்த செல்வம் செவியாகிய செல்வம். அந்த செவிச் செல்வம் மற்ற எல்லா செல்வங்களையும் விட உயர்ந்தது.

நான் ரொம்ப நாள் யோசித்து இருக்கிறேன்...ஏன் செல்வத்துள் செல்வம் விழிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று விழியைச் சொல்லவில்லை.

செவியை விட கண் தானே உயர்வு. காது கேட்காவிட்டால் வரும் துன்பம் கண் தெரியாததால் வரும் துன்பத்தை விட குறைவு தானே.

மேலும், காதால் கேட்பது என்றால் சொல்லும் ஆள் ஒருவர் வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆளைத் தேடித் போக வேண்டும். அவருக்கு நேரம் இருக்க வேண்டும். அதைவிட நமக்கு எது வேண்டுமோ அது சம்பந்தப் பட்ட புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ளலாமே ? ஒரு நல்ல புத்தகக் கடைக்குப் போனால், ஒரு நூலகத்திற்கு போனால் எவ்வளவு புத்தகங்கள் கிடைக்கும். வாங்கி வசித்து அறிந்து கொள்ளலாமே ...அதற்க்கு கண் எவ்வளவு முக்கியம்...அப்படி இருக்க ஏன் வள்ளுவர் செவியை பெரிதாகச் சொன்னார் என்று மண்டையை உடைத்து கொண்டிருக்கிறேன்

அப்புறம் நான்  நினைத்தேன், வள்ளுவர் காலத்தில் எல்லாம் ஓலைச் சுவடிதான். ரொம்ப எழுத முடியாது. ஒரு  ரொம்ப சுருக்கமாக எழுத வேண்டும். அர்த்தம் புரிய வேண்டும் என்றால்  யாரிடமாவது கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அப்படி சொல்லி இருப்பார் என்று விட்டு விட்டேன்.

மேலும், இப்போது கம்ப்யூட்டர் கூகிள் எல்லாம் இருக்கிறது. எது வேண்டுமானாலும்  ஒரு நொடியில் நமக்கு கிடைக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

எனவே கண்தான் உயர்ந்தது. செவி அப்படி ஒன்றும் பெரிய செல்வம் இல்லை என்று நினைத்து,....ஏதோ வள்ளுவர் அந்த காலத்திற்கு எழுதியது இந்த காலத்திற்கு சரி வராது என்று இந்த குறளை காலாவதியான குறள் என்று ஒதுக்கி விட்டேன்.

பல உரைகளை படித்துப் பார்த்தேன். புதிதாக ஒன்றும் புலப்படவில்லை.

சரி, ஒரு குறள் காலத்திற்கு ஒவ்வாத குறள் என்று முடிவு செய்தேன்.

வயது வயது ஆக இந்த  குறளின்  உண்மையான அர்த்தம் பிடிபடத் தொடங்கியது.

வள்ளுவர் எவ்வளவு பெரிய ஆள் என்று பிரமிப்பு ஏற்பட்டது. எவ்வளவு மடத்தனமாக நான் வள்ளுவரை குறைவாக எடை போட்டு விட்டேன் என்று தோன்றியது.

வள்ளுவர் சொன்னதுதான் சரி. நான் நினைத்தது தவறு.

ஏன் என்பதை அடுத்த ப்ளாகில் எழுதுகிறேன். ஒரே ப்ளாகில் ரொம்ப எழுதினால்  உங்களுக்கும் சலிப்பு ஏற்படும்.

நாளை அடுத்த ப்ளாக் வரும்வரை நீங்களும் யோசித்துக்  கொண்டு இருங்கள்.

ஏன் கண்ணை விட காது சிறந்தது ?




4 comments: