Wednesday, June 19, 2013

திருக்குறள் - குடும்பம் முன்னேற

திருக்குறள் - குடும்பம் முன்னேற 


ஒரு ஆணோ பெண்ணோ திருமணம் ஆகாமல் தனியாளாக இருந்து விட்டால் பெரிய சவால்கள் ஒன்றும் இல்லை.

திருமணம் ஆன பின், கணவன்/மனைவி, குழந்தைகள் , கணவன் வீட்டார், மனைவி வீட்டார் என்று குடும்பம் பெருகி விடுகிறது.

அந்த குடும்பத்தை உயர்த்துவது அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமை.

பிள்ளைகளை படைக்க வைக்க வேண்டும், குடும்பத்தில் யாராவது வறுமையில் துன்பப் பட்டால் அவர்களை காக்க வேண்டும், குடும்பத்தின் பெருமையை தூக்கிப் பிடிக்க வேண்டும்....குடும்பம் நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்..

அதற்கு என்ன வழி.

ஒரே ஒரு விஷயம். அது மட்டும் போதும் என்கிறார் வள்ளுவர்.

சோம்பலில்லாமல் இருக்க வேண்டும்.

ஒருவன் தன்  குடும்பம் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால், அவன்  சோம்பலை  முற்றுமாக கை விட வேண்டும்.

பாடல்

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.


பொருள்

மடியை = சோம்பலை

மடியா = சோம்பலாக நினைத்து

ஒழுகல் = வாழ்தல்

குடியைக் = குடும்பத்தை

குடியாக வேண்டு பவர் = நல்ல குடும்பமாக குடும்பமாக வேண்டுபவர் .


அது என்ன மடியை மடியா ?

சோம்பல் என்பது ஒரு தீய குணம். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். அது எந்த அளவுக்கு தீய குணம் என்றால் தீயைப் போல தீயது , விஷத்தை போல  தீயது என்று சொல்ல வேண்டும். 

வள்ளுவர் பார்த்தார் ...உலகில் உள்ள எல்லா தீய குணங்களுக்கும் மேலான தீய குணம்  சோம்பல் தான் என்று கண்டார். எனவே, அதையே அதற்க்கு  உதாரணமாக  சொல்லி விட்டார். இமய மலை எவ்வளவு உயரம்னா என்று எப்படி சொல்லுவது ? அதுதான் உள்ளதிலேயே உயரமான மலை. 

சோம்பலை , சோம்பல் போல நினைத்து விலக்கினால் , குடும்பம் சிறக்கும் 

குடும்பம் சிறக்க வழி. 
சோம்பல் எவ்வளவு தீமையானது என்பதற்கு ஒரு உதாரணம். 

தினம் ஒரு குறள்  படியுங்கள்

வாழ்க்கை உயரும்.

 

1 comment:

  1. அருமையான விளக்கம். மிகவும் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete