Thursday, September 5, 2013

இராமாயணம் - பாதம் அல்லது பற்றிலர்

இராமாயணம் - பாதம் அல்லது பற்றிலர் 



இராமாயணத்தில் இறை வணக்கம் மூன்று பாடல்களில் உள்ளது. இந்த மூன்று பாடலுக்கும் உரிய எழுதுவது என்றால் அதற்காக ஒரு தனிப் புத்தகமே  போடலாம்.

முதல் பாடல் - உலகம் யாவையும் என்று தொடங்கும் பாடல்.

மூன்றாவது பாடல்....

ஆதி. அந்தம். அரிஎன. யாவையும்
ஓதினார். அலகு இல்லன. உள்ளன.
வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர் - பற்று இலார்.

பல பொருள்களை உள்ளடக்கிய பாடல். கம்பன் வேண்டும் என்றே இப்படி எழுதினானா அல்லது அப்படி அமைந்து விட்டதா என்று  தெரியாது.

பொருள்


ஆதி. அந்தம். அரிஎன. யாவையும் ஓதினார்  =  தொடக்கம், முடிவு என்று அரியன யாவையும் ஓதியவர்கள்

அரியன என்றால் அரிதாக உள்ளவை என்று ஒரு பொருள்.

ஆதியும் அந்தமும் அரி (ஹரி) என யாவையும் ஓதினார் = ஆதியும், அந்தமும் ஹரி தான் என்று எல்லாவற்றையும் ஓதியவர்கள்

வேதம் முதலிய பாடங்களை படிக்கும் போது "அரி " என்று சொல்லி ஆரம்பித்து பின் அரி என்று சொல்லி முடிப்பது ஒரு  வழக்கம்.

அரி ஓம் என்று சொல்லும்போது அறிவோம் என்று நம்பிக்கை  பிறக்கிறது.

அலகு இல்லன. உள்ளன வேதம் என்பன  = அலகு என்றால்  அளவு.அளவு உள்ளது, இல்லாதது. அது என்ன உள்ளது, இல்லாதது ? வேதங்கள் இத்தனை என்று எண்ணிச் சொல்லி  விடலாம். ஆனால் அதில் உள்ள அர்த்தங்களை எண்ணிச் சொல்ல  முடியாது.


மெய்ந் நெறி = உண்மையான வழி

நன்மையன் பாதம் அல்லது பற்றிலர் - பற்று இலார் = நன்மை தரக் கூடியவனின் பாதம் அல்லது வேறு ஒன்றையும் பற்ற மாட்டார்கள்


தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே என்று முதல் பாடலில் சொன்னான்.

நாங்கள் சரண் அடைவது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. வேறு யாரெல்லாம்  அவன் பாதங்களை சரண் அடைகிறார்கள் என்று  கம்பன் சொல்லுகிறான்.

ஆதியும், அந்தமும், அரியன எல்லாம் ஓதி உணர்ந்த பெரியவர்கள் அவன்  பாதத்தை சரண் அடைகிறார்கள். 

அப்புறம், வேதங்கள் அவனை சரண்  அடைகின்றன.

மூன்றாவது, பற்றற்ற துறவிகள் அவன் பாதத்தையே பற்றுகிறார்கள்.

சரண் அடைவதில் நமக்கு ஏதேனும் தயக்கம் வந்து விடக் கூடாது என்று கம்பன்  இந்தப் பாடலை  தந்தான்.

No comments:

Post a Comment