Monday, September 9, 2013

திருக்குறள் - உலகம் என்பது என்ன ?

திருக்குறள் - உலகம் என்பது என்ன ?


குறள்

சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் 
வகைதெரிவான் கட்டே யுலகு.

சீர்  பிரித்த பின்

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு

பொருள்

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் =  சுவை, ஒளி , ஊறு , ஓசை, நாற்றம்

என ஐந்தின் = என இந்த ஐந்தின்

வகை தெரிவான் கட்டே உலகு = வகைகளை தெரிவான் பக்கமே, இந்த உலகு.

அட, இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா ? இது நமக்கே தெரியுமே...

வள்ளுவர் அவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டு போபவர்  அல்ல.

இந்த உலகம், நம் புலன்களைத் தாண்டி தனியாக ஏதாவது இருக்கிறதா ? நமக்கு ஐந்து புலன்கள்  இருக்கின்றன. எனவே நாம்  இந்த உலகை இந்த ஐந்து புலன்கள் வழியாக  உணர்கிறோம்.

ஒருவேளை நமக்கு ஆறு புலன்கள் இருந்திருந்தால், இந்த உலகை வேறு விதமாகப் நாம் உணர்ந்து இருப்போம்.

எது உண்மை ? இந்த புலன்களைத் தாண்டி ஏதேனும் உண்மை என்று இருக்கிறதா ?

சரி, புலன்கள் மட்டும் இருந்தால் போதுமா ? குருடனுக்குக் கூட கண் இருக்கிறது. பார்க்க முடியவில்லை.  செவிடனுக்கு காது இருக்கிறது. கேட்க்க முடியவில்லை. புலன்கள் மட்டும் இருந்தால் போதாது, அவற்றை இயக்கம் புத்தி, மூளை, மனம் என்று ஏதோ ஒன்று வேண்டும்.

புலன்கள் ஐந்து . இவற்றை கர்மேந்திரியங்கள் என்று சொல்கிறார்கள்.

அந்த புலன்களை இயக்கம் அறிவு ஐந்து.  இவற்றை ஞானேந்திரியங்கள் என்று சொல்கிறார்கள்.

புலன்களுக்கு வந்து சேரும் உணர்வுகள் ஐந்து - சுவை, ஒளி , ஊறு , ஓசை , நாற்றம்  என்று ஐந்து விதமான உணர்வுகள்.

இந்த ஐந்து வித உணர்வுகளை உருவாகும் பொருள்களின் தன்மை அல்லது இயல்பு ஐந்து. ஒரு பொருள் சுவையாக இருக்கலாம், சூடாக இருக்கலாம் ...


பொருள்கள் ஐந்து விதம்
அவற்றின் குணங்கள் ஐந்து விதம்
அவற்றை அறியும் நமது புலன்கள் ஐந்து விதம்
அந்த புலன்களை இயக்கம் அறிவின் கூறு ஐந்து விதம்

இந்த இருப்பதை அறியும் அவனைத் தாண்டி உலகம் என்று ஒன்று இல்லை.

இந்த கட்டுக்குள் இருப்பதுதான் உலகம்.

பன்னிய உலகினில் பயின்ற பாவத்தை
நன்னி நின்று அறுப்பது நமச்சிவாயவே என்பார் நாவுக்கரசர்.

நாம் பன்னிய உலகம் இது.

நாம் உருவாக்கிய உலகத்தோடு நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.



1 comment:

  1. புரிந்துகொள்ளக் கடினமான கருத்து.

    ReplyDelete