Sunday, December 8, 2013

திருக்குறள் - நினைப்புதான் பொழப்ப கெடுக்கும்

திருக்குறள் - நினைப்புதான் பொழப்ப கெடுக்கும் 


சில பேருக்கு எதையாவது கேட்டால் , பார்த்தால் உடனே அதை செய்ய வேண்டும் என்று தோன்றும்.

மற்றவன் சட்டம் படித்தால், தானும் படிக்க வேண்டும் என்று நினைப்பது.

மற்றவன் கராத்தே படித்தால் , தானும் அதை படிக்க வேண்டும் என்று நினைப்பது.

உலகில் யார் யார் என்ன என்ன செய்கிறார்களோ அதை எல்லாம் தானும் செய்ய நினைப்பது மதியீனம்.

நம்மால் என்ன செய்ய முடியும், நமக்கு என்ன வலிமை இருக்கிறது, என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.

அப்படி, தன் வலிமை என்ன என்று அறியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டு எடுத்த காரியத்தை முடிக்காமல் பாதியில் விட்டு நட்டப் பட்டவர்கள் பலர்.

பாடல்


உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.


சீர் பிரித்த பின்

உடைத் தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி 
இடைக் கண் முரிந்தார் பலர்.

பொருள் 

உடைத் தம் வலி = தம்முடைய வலிமையை

அறியார் = அறியாமல்

ஊக்கத்தின் = ஆர்வத்தால்

ஊக்கி = முனைந்து

இடைக் கண்  = பாதியில்

முரிந்தார் பலர் = தொடங்கிய காரியத்தை கை விட்டவர்கள் பலர்

வெறும் ஆர்வம் மட்டும் போதாது. செய்து முடிக்கும் வலிமை வேண்டும்.

அது என்ன வலிமை ?

வலிமை பற்றி பின்னொரு குறளில் தனியாக சொல்கிறார்  வள்ளுவர். அதை இன்னொரு ப்ளாகில்  பார்ப்போம்.

இரண்டாவது, வள்ளுவர் அப்படி காரியம் செய்யத் தொடங்கியவர்கள் எல்லோரும் தோல்வி அடைவார்கள் என்று சொல்லவில்லை. அப்படி தோற்றவர்கள் "பலர்"  என்கிறார். ஆர்வத்தை மட்டுமே கொண்டு சிலர் வெற்றி அடைந்திருக்கலாம்... ஆனால் பெரும்பாலும் அது தோல்வியில் தான் முடியும். 




1 comment:

  1. தனது வலிமையை அறிவது எப்படி?

    அப்படியென்றால், நம் கனவுகளை எல்லாம் உழைப்பால் அடையலாம் என்பது தவறா?

    ReplyDelete