Sunday, December 15, 2013

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல்

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல் 


இந்திரசித்து இறந்து விட்டான். இலக்குவன் அவன் தலையை கொண்டு சென்று விட்டான். இராவண யுத்த களத்திற்கு வந்து தலையில்லாத மகனின் உடலை நாட்டுக்கு கொண்டு செல்கிறான்.

செய்தி கேட்டு மண்டோதரி ஓடி வருகிறாள்.

கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாத பாடல் ஒன்று கம்பனிடம் இருந்து வருகிறது.

மண்டோதரி கதறிக் கொண்டு ஓடி வருகிறாள். வருகின்ற அவசரத்தில் அவள் கூந்தல் அவிழ்ந்து விழுகிறது. கரிய நீண்ட கூந்தல் அவள் பாதத்தை தொடும் அளவிற்கு கீழே விழுந்து  கிடக்கிறது. துக்கம் தாளாமல் அவள் கைகளால் தன் மார்பின் மேல் அடித்துக் கொண்டு வருகிறாள். அப்படி அடித்ததால் திண்மையான முலைகளின் மேல் அடித்ததால் அவள் கைகள் சிவந்து போயின. அவள் மார்புகள் பெரியதாய் இருந்தன. அவள் இடையோ சிறுத்து இருந்தது.

பாடல்

கருங் குழல் கற்றைப் பாரம் கால் தொட, கமலப் பூவால்
குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் முலைமேல் கொட்டி, அருங் கலச் சும்மை தாங்க, 'அகல் அல்குல் அன்றி, சற்றே 
மருங்குலும் உண்டு உண்டு' என்ன, - மயன் மகள் - மறுகி வந்தாள்.

பொருள்


கருங் குழல் = கரிய  குழல்

கற்றைப் = அடர்த்தியான

பாரம் = பாரம் கொண்ட

கால் தொட = காலைத் தொட (அவ்வளவு நீளம்)

கமலப் பூவால் = சிவந்த கைகளால்

குரும்பையைப் = தேங்காய் முளை விடும் போது உள்ள நிலைக்கு குரும்பு என்று பெயர்

புடைக்கின்றாள்போல் = அடிப்பதைப் போல

கைகளால் முலைமேல் கொட்டி = கைகளால் முலையின் மேல் அடித்து

 அருங் கலச் சும்மை தாங்க = அருமையான அணிகலன்களைத் தாங்க 

 'அகல் அல்குல் அன்றி = அகன்ற அல்குல் மட்டும் அல்ல ,

சற்றே  மருங்குலும் உண்டு உண்டு' என்ன = சிறிய இடையும் உண்டு

மயன் மகள்  = மயனின் மகள்

மறுகி வந்தாள் = மனம் கலங்கி வந்தாள்


இறந்து கிடக்கும் மகனைக் காண கதறிக் கொண்டு வரும் ஒரு தாயை வர்ணிக்கும்  இடமா இது ? கம்பன் இப்படிச் செய்யலாமா ?

அவலச் சுவை இருக்க வேண்டிய இடத்தில் சிருங்காரச் சுவை வரலாமா ? 

இது பிழை இல்லையா ?

என்ன காரணம் என்று அடுத்த ப்ளாகில் சிந்திப்போம் 


2 comments:

  1. வினாவுக்கு விடை காணக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. அந்த காலத்தில் குமுதம், விகடன், கல்கி யில் தொடர் கதை படித்த ஞாபகம் வருகிறது. இது என்ன வார மலரா இல்லை மாத மலரா? அடுத்த ப்ளாக் எப்ப வரும்?

    ReplyDelete