Sunday, June 30, 2013

திருவாசகம் - நான் யார் ?

திருவாசகம் - நான் யார் ?


திருவாசகத்தில் உள்ள மிக சிக்கலான பாடல்களில் ஒன்று

நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.

சீர் பிரித்த பின்

நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி 
ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் 
தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ 

நான் என்பது என்ன ? என் ஞாபங்கள், என் அறிவு  இதைத்  தவிர வேறு என்ன ? நான் அறிந்த அனைத்தும் மறந்து போனால் நான் என்ற நான் யார் ? என் பெயர், என் மனைவி/கணவன், என் பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள், நான் கற்ற கல்வி எல்லாம் மறந்து போனால் நான் , நானாக இருப்பேனா ?

மாணிக்க வாசகருக்கு இது நிகழ்ந்தது.

இறைவன் அவரை ஆட்கொண்டான்.

நான் என்பது மறைந்து விட்டது ? நான் என்பது போன பின் உள்ளம் என்பது எது ?

ஞானம் இரண்டு வகைப்படும் - கற்ற அறிவு, அனுபவ அறிவு. பர ஞானம், அபர ஞானம் என்று சொல்வார்கள். நானும் போன பின், என் உள்ளமும் போன பின் என் ஞானம் என்பது என்ன ?

நான் போய் விட்டேன். நான் என்பது இல்லை

என் உள்ளம் போய் விட்டது.

என் ஞானங்கள் இல்லாமல் போனது.

இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ? 

அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?

ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?



பொருள்


Saturday, June 29, 2013

நன்னெறி - நல்லதே ஆயினும் அறிந்து செய்யுங்கள்

நன்னெறி - நல்லதே ஆயினும் அறிந்து செய்யுங்கள் 


நல்லது செய்யலாம். உண்மை பேசலாம். தான தருமங்கள் செய்யல்லாம். இவற்றை எல்லாம் ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்று அறிந்து செய்ய வேண்டும். அறியாமல் செய்யும் அறங்கள் அவ்வளவு வலிமையானது அல்ல என்று கூறுகிறது நன்னெறி.

ஏன் அப்படி ? செயல் செய்தால் போதாதா ? அது பற்றி ஏன் தெரிந்திருக்க வேண்டும் ?

தானம் செய்வது நல்லதுதான். யாருக்கு தானம் செய்ய வேண்டும், எந்த காரியத்திற்கு தானம் செய்ய வேண்டும் என்று அறிந்து செய்ய வேண்டும். அந்த அறிவை தருவது நம அற  நூல்கள்.

தவறான ஆட்களுக்கு உதவி செய்தால் அது நமக்கே தீங்காய் முடியும்.

ஒரு கதவு எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும், ஒரு சின்ன தாழ்பாழ் இல்லையென்றால் அந்த கதவால் என்ன பயன்  ?

அது போல, எவ்வளவுதான் நல்ல குணங்கள் இருந்தாலும் அறிவு முக்கியம். அறிவில்லாத நல்ல குணம், தாழ்பாழ் இல்லாத கதவு போல்.

பாடல்

பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே – நன்னுதால்
காழொன்று உயர்திண் கதவு வலியுடைத்தோ
தாழென்று இலதாயின் தான்.

பொருள்


திருக்குறள் - செவிச் செல்வம்

திருக்குறள் - செவிச் செல்வம்



செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

ஏன் விழிச் செல்வத்தைவிட செவிச் செல்வம் உயர்ந்தது ?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலாவது, கண்ணின் உதவியால் நாம் புத்தகங்களை படித்து அறிந்து கொள்ள முடியுமே ? எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்களில் இருந்து நேற்று வெளியான புத்தகம் வரை எல்லாம் ஒரு நொடியில் கிடைக்குமே ? வாங்கிப் படித்து அறிவைப் பெருக்கலாமே ?

பிரச்சனையே அதுதான். புத்தகங்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் எழுதப் பட்டவை. இன்றைய சூழலுக்கு அது சரி வருமா ? உங்களின் தனிப்பட்ட பிரச்சனைக்கு அது வழி சொல்லுமா ? சந்தேகம் தான்.

இரண்டாவது, புத்தகங்களை படித்து புரிந்து கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல. எத்தனை பேரால் திருக்குறளை படித்து அதன் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும் ?


மூன்றாவது, எழுதப் பட்டது ஒரு கோணத்தில் இருக்கலாம். நீங்கள் புரிந்து கொண்டது இன்னொரு  கோணத்தில் இருக்கலாம். அர்த்தம் , அனர்த்தமாகப் போய் விடும். உதாரணமாக, பதஞ்சலியின் யோக சூத்திரத்தை சொல்லலாம். அதற்க்கு  எழுதப்பட்ட உரைகளை படித்தால் எது பதஞ்சலி சொன்னது என்று புரிந்து கொள்ள முடியாது.


நான்காவது, புத்தகங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண் படலாம். அல்லது முரண் படுவது போல நமக்குத் தெரியலாம். எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். எப்படி முடிவு எடுப்பது.


ஐந்தாவது, உலகில் உள்ள புத்தங்களை எல்லாம் படித்து அறிந்து கொள்வது என்பது மிக மிக காலம் பிடிக்கும் காரியம். யாரவது அவற்றை எல்லாம் படித்து அறிந்து, நமக்குச் சொன்னால் எவ்வளவு எளிதாக இருக்கும்.

ஆறாவது, படிப்பறிவோடு, அனுபவ அறிவும் சேரும்போது அந்த அறிவு மிக மிக தெளிவாக இருக்கும். ஒரு சிறுவனின் கையில் கீதையை கொடுத்து படித்து அறிந்து கொள்  என்றால் அவன் என்ன அறிவான் ? ஏன், நாமே கூட படித்தால் எவ்வளவு புரியும் ? அதே கீதையை அதை நன்கு படித்து அறிந்த ஒரு பெரியவர்  மூலம் கேட்டால் எப்படி வேகமாக புரிந்து கொள்ள முடியும் ?


ஏழாவது, பெரியவர்களிடம் நாம் சென்று கேட்க்கும் போது அவர்கள் நம் அறிவின் திறம் , நமது பிரச்சனைகள், நமது திறமை என்று நம்மை பற்றி அறிந்து, அதற்க்கு தக்க மாதிரி சொல்லுவார்கள்.

எட்டாவது, எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இருந்தாலும், நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் நாம்  மருத்துவரை போய் பார்க்கிறோம். புத்தகம் வாங்கிப் படித்து  அதில் உள்ளது போல மருந்து உட்கொள்ளுவது இல்லை. ஏன் ?  படிப்பறிவோடு, அனுபவ அறிவும், நம்மை பற்றிய தனிபட்ட தகல்வல்களும் அறிந்து மருத்துவர் மருந்து  சொல்லுவார் என்பதால்.

ஒன்பதாவது, திருப்புகழை நாமே படித்து அறிந்து கொள்வதற்கும், திருமுருக கிர்பானந்த வாரியார்  சொல்லிக் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. எது சிறந்தது ?


பத்தாவது, வருடா வருடம் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப் படுகிறது. அதன் நகல் நமக்குக் கிடைக்கிறது. இருந்தும் பட்ஜெட் விளக்கக் கூட்டம் என்று  பெரிய வல்லுனர்களை கொண்டு பேச வைகிறார்கள். அதற்கு மிகப் பெரிய  கூட்டம் வருகிறது. ஏன், படித்து அறிந்து கொள்ள முடியாதா ? வல்லுனர்களிடம் இருந்து  கேட்டு அறிவது நம் அறிவை மிக விரைவாக ஆழமாகவும் அகலமாகவும் ஆக்கும்.

பதினொன்றாவது, நாமே படித்து, குழம்பி, பின் தெளிய நாள் பல ஆகும். ஒரு இருபது இருபத்தி ஐந்து வருடம்   ஒரு குறிப்பிட்ட துறையில் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் போய் கேட்டால் நம் குழப்பங்களை மிக எளிதில் தீர்த்து வைத்து விடுவார்.

எப்படி பார்த்தாலும் கற்றலை விட கேட்பது சிறந்தது.

கேட்பது என்றால் உயர்ந்தவர்களிடம் போய் கேட்க்க வேண்டும்.

தமிழ் கேட்க்க வேண்டும் என்றால் கி. வா. ஜா, கி. ஆ. பெ. விஸ்வநாதம் , வாரியார் ஸ்வாமிகள் , போன்ற பெரியவர்களிடம் கேட்க்க வேண்டும். தமிழ் அறிஞர்கள் என்று   சொல்லிக் கொண்டு திரியும் பட்டி மன்ற ஆட்களிடமோ, அரசியல்வாதிகளிடமோ  போய் கேட்க்கக் கூடாது.

நன்றாக யோசித்துப் பாருங்கள், நீங்கள் அதிக பயன் பெற்றது வாசித்ததன் மூலமா ? கேட்டதன் மூலமா என்று ?

நிறைய கேளுங்கள். படித்து அறிந்த அறிஞர்கள் கூறுவதை கேளுங்கள். தேடித் போய் கேளுங்கள்.

செவிச் செல்வத்தைப் பற்றி வள்ளுவர் இன்னும் கூறுவார்.

 

Friday, June 28, 2013

திருக்குறள் - செவிச் செல்வம்

திருக்குறள் - செவிச் செல்வம்


செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

செல்வங்களில் எல்லாம் பெரிய அல்லது உயர்ந்த செல்வம் செவியாகிய செல்வம். அந்த செவிச் செல்வம் மற்ற எல்லா செல்வங்களையும் விட உயர்ந்தது.

நான் ரொம்ப நாள் யோசித்து இருக்கிறேன்...ஏன் செல்வத்துள் செல்வம் விழிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று விழியைச் சொல்லவில்லை.

செவியை விட கண் தானே உயர்வு. காது கேட்காவிட்டால் வரும் துன்பம் கண் தெரியாததால் வரும் துன்பத்தை விட குறைவு தானே.

மேலும், காதால் கேட்பது என்றால் சொல்லும் ஆள் ஒருவர் வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆளைத் தேடித் போக வேண்டும். அவருக்கு நேரம் இருக்க வேண்டும். அதைவிட நமக்கு எது வேண்டுமோ அது சம்பந்தப் பட்ட புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ளலாமே ? ஒரு நல்ல புத்தகக் கடைக்குப் போனால், ஒரு நூலகத்திற்கு போனால் எவ்வளவு புத்தகங்கள் கிடைக்கும். வாங்கி வசித்து அறிந்து கொள்ளலாமே ...அதற்க்கு கண் எவ்வளவு முக்கியம்...அப்படி இருக்க ஏன் வள்ளுவர் செவியை பெரிதாகச் சொன்னார் என்று மண்டையை உடைத்து கொண்டிருக்கிறேன்

அப்புறம் நான்  நினைத்தேன், வள்ளுவர் காலத்தில் எல்லாம் ஓலைச் சுவடிதான். ரொம்ப எழுத முடியாது. ஒரு  ரொம்ப சுருக்கமாக எழுத வேண்டும். அர்த்தம் புரிய வேண்டும் என்றால்  யாரிடமாவது கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அப்படி சொல்லி இருப்பார் என்று விட்டு விட்டேன்.

மேலும், இப்போது கம்ப்யூட்டர் கூகிள் எல்லாம் இருக்கிறது. எது வேண்டுமானாலும்  ஒரு நொடியில் நமக்கு கிடைக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

எனவே கண்தான் உயர்ந்தது. செவி அப்படி ஒன்றும் பெரிய செல்வம் இல்லை என்று நினைத்து,....ஏதோ வள்ளுவர் அந்த காலத்திற்கு எழுதியது இந்த காலத்திற்கு சரி வராது என்று இந்த குறளை காலாவதியான குறள் என்று ஒதுக்கி விட்டேன்.

பல உரைகளை படித்துப் பார்த்தேன். புதிதாக ஒன்றும் புலப்படவில்லை.

சரி, ஒரு குறள் காலத்திற்கு ஒவ்வாத குறள் என்று முடிவு செய்தேன்.

வயது வயது ஆக இந்த  குறளின்  உண்மையான அர்த்தம் பிடிபடத் தொடங்கியது.

வள்ளுவர் எவ்வளவு பெரிய ஆள் என்று பிரமிப்பு ஏற்பட்டது. எவ்வளவு மடத்தனமாக நான் வள்ளுவரை குறைவாக எடை போட்டு விட்டேன் என்று தோன்றியது.

வள்ளுவர் சொன்னதுதான் சரி. நான் நினைத்தது தவறு.

ஏன் என்பதை அடுத்த ப்ளாகில் எழுதுகிறேன். ஒரே ப்ளாகில் ரொம்ப எழுதினால்  உங்களுக்கும் சலிப்பு ஏற்படும்.

நாளை அடுத்த ப்ளாக் வரும்வரை நீங்களும் யோசித்துக்  கொண்டு இருங்கள்.

ஏன் கண்ணை விட காது சிறந்தது ?




முறிந்த வில்கள் - பிள்ளை முன் இட்டது பேதைமை

முறிந்த வில்கள் - பிள்ளை முன் இட்டது பேதைமை

சீதையை மணமுடிக்க வேண்டும் என்றால் சிவனின் வில்லை வளைக்க வேண்டும் என்பது நிபந்தனை. இராமன் எழுகிறான் அதை வளைக்க.

அங்குள்ள பெண்களுக்கு எல்லாம் ஒரே பதட்டம். ஒரு வேளை இராமன் இந்த வில்லை வளைக்கா விட்டால் ? இந்த இராசாவுக்கு (ஜனகனுக்கு) அறிவே இல்லை. மாப்பிளைய பிடிசிருஞ்சா பேசாம மணம் பேச வேண்டியதுதானே, இவ்வளவு பெரிய வில்லை எடுத்து இந்த சின்ன பிள்ளையின் முன் போட்டு இதை வளை என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று ஜனகனை மக்கள் திட்டுகிறார்கள்.

பாடல்

வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்,
"கொள்" என் முன்பு கொடுப்பதை அல்லால்,
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து, இப்
பிள்ளை முன் இட்டது பேதைமை' என்பார்.

பொருள்


Thursday, June 27, 2013

திருக்குறள் - களவு

திருக்குறள் - களவு



களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

பொருள் : களவின் மூலம் உண்டாகிய செல்வம் நிறைய அளவு கடந்து ஆவது போல தோன்றி, பின்னால் அழியும்.

இது பள்ளிகளில் நாம் படித்தது.

அதாவது தீய வழியில் சேர்த்த செல்வம் நிலைத்து நிற்காது என்பதாக பொருள் சொல்லப் பட்டது.

வள்ளுவராவது அவ்வளவு லேசா எழுதுவதாவது.

கொஞ்சம் குறளை மாற்றிப் போடுவோம்

களவினால் ஆகிய ஆகம் ஆவது போல் அளவிறந்து கெடும்

அதாவது, களவினால் ஆகிய ஆக்கம் முதலில் ஆவது போல தோன்றினாலும் பின் அளவு இன்றி கெடும்.

தீய வழியில் வந்த செல்வம் முதலில் பெரிதாக வளர்வது போலத் தோன்றினாலும், அது போகும் போது அந்த செல்வம் மட்டும் அல்ல போவது அதற்கு முன் சேர்த்து வைத்த செல்வத்தையும், நல்ல பெயரையும், புகழையும் சேர்த்து கொண்டு போய் விடும்

அது மட்டும் அல்ல, மீண்டும் செல்வம் வரும் வழியையும் அது அடைத்து  விடும்.

மேலும், பாவத்தையும் பழியையும் களவு செய்தவன் மேல் சுமத்தி விட்டு போகும்.

இந்த பிறவியில் வறுமையும், பழியும் சேர்க்கும்

மறு பிறவிக்கான வீடு பேறு அடைய முடியாமல் பாவத்தை சேர்த்து வைக்கும்.

அதனால், களவினால் ஆகிய ஆக்கம் அளவற்ற கெடுதலை செய்யும்.

இன்னொரு பொருள் என்ன வென்றால்.....

நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க நாள் பல ஆகும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான்  செல்வம் சேரும்.

ஆனால், களவின் மூலம் சேரும் செல்வம் மிக வேகமாக வளரும்.  குறுகிய காலத்தில் மிகுந்த செல்வம் சேரும், களவின் மூலம்.

 களவினால் ஆகிய ஆகம் ஆவது போல் அளவிறந்து கெடும்

வள்ளுவர் சொல்கிறார், அது எந்த வேகத்தில் வந்ததோ (ஆவது போல்) அதை விட வேகமாக கெடும். 

எப்படி ஆகியதோ அதே போல் கெடும். சொல்லப் போனால், "ஆவது போல் கெடும்"  என்று  சொல்லி இருந்தால் எப்படி ஆனதோ அதே போல் கெடும் என்று அர்த்தம் கொள்ளலாம் .

வள்ளுவர் ஒரு படி மேலே போய் "ஆவது போல் அளவிறந்து கெடும் " என்கிறார் 

இதை எல்லாம் சின்ன வயதில், பிள்ளைகளுக்கு சொல்லிக்  கொடுத்தால் அவர்கள் மனதில்  பசு மரத்து ஆணி போல் பதியும். அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள். நல்ல சமுதாயம் வரும். 

சரியாக சொல்லிக் கொடுக்காமல் , பாட நூல்களை அரசியல்வாதிகள் கையில் கொடுத்து , பல தலைமுறைகளை இந்த மாதிரி உயர்ந்த கருத்துகள் சென்று அடைய விடாமல்   தடுத்து விட்டோம்.

இப்படி ஒரு பொக்கிஷத்தை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது ? 

 

Wednesday, June 26, 2013

திருக்குறள் - பொறுத்தல் வேண்டும்

திருக்குறள் - பொறுத்தல் வேண்டும் 



அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னை தோண்டுபவர்களையும் தாங்கும் நிலத்தை போல ஒருவரை இகழ்பவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் தலை சிறந்தது.

அம்புடுதான்.

இதைசொல்ல வள்ளுவர் வேண்டுமா ? யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். வள்ளுவர் ஆழமில்லாமல் எதையும் சொல்ல மாட்டாரே....இந்த குறளில் அப்படி ஒன்றும் ஆழம் இருப்பது மாதிரி தெரியவில்லையே. ரொம்ப சாதரமான குறள் மாதிரிதானே இருக்கு ?

கொஞ்சம் ஆராய்வோம்.

அகழ்வாரை தாங்கும் நிலம்....நிலம் தன்னை புண் படுத்தி கடப்பாரை, மண் வெட்டி போன்ற கூறிய ஆயுதங்களால் தோண்டுபவர்களை பதிலுக்கு தண்டிப்பது இல்லை.

அது மட்டும் அல்ல...அப்படி தோண்டுபவர்களுக்கு நல்லதும் செய்கிறது நிலம். கொஞ்சம் தோண்டி  விதை நட்டால் செடியும் மரமும் தழைத்து அதில் இருந்து நிழலும் காயும் கனியும்   கிடைக்கச் செய்கிறது.

மேலும் தோண்டினால் சுவையான நிலத்தடி நீர் தந்து தாகம் தீர்கிறது. உயிர் காக்கிறது.

இன்னும் தோண்டினால் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தருகிறது.

வள்ளுவர் காலத்தில் பெட்ரோல் டீசல் இது எல்லாம் கிடையாது. இப்போது அதுவும் கிடைக்கிறது.

தனக்கு கெடுதல் செய்பவர்களை பொறுப்பது மட்டும் அல்ல, நிலம் அவர்களுக்கு நல்லதும் செய்கிறது.

அது போல, உங்களுக்கு தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.

சரி, வள்ளுவர் "இகழ்வார்" என்று தானே சொல்லி இருக்கிறார். இகழ்தல் என்றால்   தரக் குறைவாக பேசுதல், திட்டுதல், வைதல்...எனவே நம்மை பற்று இகழ்வாக பேசுபவர்களை  மட்டும் பொறுத்தால் போதும்...நமக்கு உடல் ரீதியாகவோ, உள்ள ரீதியாகவோ தீமை செய்பவர்களை பொறுக்கும் படி வள்ளுவர் சொல்லவில்லையே  என்று வாதிக்கலாம்.

அதற்குத் தான் "அகழ்வாராய் தாங்கும் நிலம்" என்ற உதாரணம். நம்மை திட்டுபவர்கள் மட்டும் அல்ல, மற்ற செயல்களால் துன்பம் தந்தவர்களையும் பொறுக்க  வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

மேலும் சொல்லுகிறார்....





இராமாயணம் - முறிந்த வில்கள்

இராமாயணம் - முறிந்த வில்கள் 


ஜனகன் வில்லை கொண்டு வந்து வைத்து விட்டான். அதை வளைத்து நான் ஏற்றுபவர்களுக்குத் தான் சீதை. விஸ்வாமித்திரன் வில்லைப் பார்த்தான், இராமனைப் பார்த்தான். விச்வாமித்ரனின் மனதில் உள்ளதை எல்லாம் இராமன் அறிந்தான் என்று கம்பன் சொல்லுவான்.

அந்த இடம் தொடங்கி இராமன் வில்லை நான் ஏற்றும்வரை கம்பன் காட்டுவது அற்புதமான ஒரு அதிவேக சினிமா காட்சி போல இருக்கும். காமிரா அங்கும் இங்கும் அலைகிறது. அங்கங்கே உள்ளவர்கள் பேசுவது. அங்குள்ள மக்களின் மன நிலை...அத்தனையும் கம்பன் படம் பிடிக்கிறான்....ஏதோ அவன் அந்த கூட்டத்தில் , அந்த மக்கள் மத்தியில் இருந்து கேட்ட மாதிரியும் பார்த்த மாதிரியும்...அவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறான்.

அதை படிக்கும் போது நீங்களும் அங்கே இருப்பதை போல் உணர்வீர்கள்.

முதல் பாடல்

அரங்கம் நிறைந்து இருக்கிறது. இராமன் எழுந்து நிற்கிறான். அங்குள்ள பெண்கள் எல்லாம் அவன் அழகில் மயங்குகிறார்கள். இராமன் அந்த வில்லை முறிக்கும் முன் மன்மதன் ஆயிரம் வில்லை முறித்தானம் . அங்குள்ள பெண்களின் மேல் மலர் அம்புகளை எறிந்து எறிந்து அவன் விற்கள் முறிந்து கொண்டே இருந்ததாம்.


பாடல்

தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம்.
சேயிழை மங்கையர் சிந்தைதொறு எய்யா.
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான்.


பொருள்


Tuesday, June 25, 2013

திருவருட்பா - தடைகள்

திருவருட்பா - தடைகள் 


 

சில பேர் இருக்கிறார்கள் ... எந்த வேலை சொன்னாலும் அதை ஏன் செய்ய முடியாது என்று கூறித் திரிவார்கள்.

காலேஜ் முடிச்சப்பறம் ஏன் மேல படிக்கல ? வீடு நிலைமை சரியில்லை.

சும்மாதான வீட்டுல உட்கார்ந்து இருக்க - உருப்படியா ஏதாவது செய்யக் கூடாதா என்றால் - என் மகளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் பாரு என்று சொல்வார்கள்.

வேலை செய்யாமல் இருக்க ஏதாவது ஒரு தடை சொல்லித் திரிவது.

காரணமா கிடைக்காது வேலை செய்யாமல் இருக்க.

மழை பெய்தது, ஒரே கூட்டமா இருந்தது, உடம்பு சரியில்லை ...இப்படி ஏதாவது சாக்கு.

வள்ளலார் துறவறம் போகலாம் என்று நினைத்தார். முதலில் அவரின் தாய் விடவில்லை. பின் தாரம் விடவில்லை. பின் பிள்ளைகள் விடவில்லை.. இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதோ தடை வந்து கொண்டே இருந்தது. கடைசியில் பார்த்தால் ஒரு தடையும் இல்லை...இருந்தும் துறவறம் மேற்கொள்ளவில்லை. அவருக்கே தெரியவில்லை ஏன் என்று. இப்படி தடை சொல்லி சொல்லி   பழகி வேலை செய்யவே முடிய மாட்டேங்குது. என்ன செய்வேன் என்ன செய்வேன் என்று புலம்புகிறார்.

வள்ளலார் துறவிதான். இப்படி உலகம் இருக்கிறதென்று தன்னை கற்பனை பண்ணிச் சொல்கிறார் அடிகளார்.

தாய்தடை என்றேன் பின்னர்த்
          தாரமே தடைஎன் றேன்நான்
     சேய்தடை என்றேன் இந்தச்
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
     தோய்தடைச் சிறியேன் இன்னுந்
          துறந்திலேன் எனைத் தடுக்க
     ஏய்தடை யாதோ எந்தாய்
          என்செய்கேன் என்செய் கேனே.

தடைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். தடையே இல்லாத போதுதான் வேலை செய்வேன் என்று  நினைத்து இருந்தால் ஒரு  நடக்காது. அது மட்டுமல்ல , எல்லா தடைகளும் விலகினாலும் எப்படி வேலை செய்வது என்று தெரியாது. ஏன் என்றால் இதுவரை வேலை செய்து பழகவில்லையே....

எனவே, தடை ஒரு பக்கம் இருக்கட்டும்....வேலையை ஆரம்பியுங்கள்.

வெற்றி உங்களுக்கே.


திருக்குறள் - யார் பெரியவர்

திருக்குறள் - யார் பெரியவர்


" பெரியவங்க சொன்னா கேட்கணும் " என்று வீட்டில் உள்ள வயதானவர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

பெரியவர் என்றால் யார்.

வயதால், படிப்பால், அறிவால் , செல்வத்தால், உடல் உயரத்தால், உடல் எடையால், செல்வாக்கால் ....எதில் பெரியவர் ?

வள்ளுவர் சொல்கிறார். பெரியவர் என்றால் இது எல்லாம் இல்லை.

செய்வதற்கு அரிய செயல்களை செய்பவர் பெரியவர்.

கல்யாணம் பண்ணிக் கொள்வது, பிள்ளைகளை பெறுவது, வேலைக்குப் போய் சம்பாதிப்பது, சமைப்பது, துணி மணி மடித்து வைப்பது போன்றவை "செயற்கு அரிய செயலில் " வராது.

உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்....இதுவரை செயற்கரிய செயல் ஏதாவது செய்திருக்கிறீர்களா ? என்று.

செய்வதற்கு அரிய செயல் என்றால் என்ன ?

மற்றவர்களால் செய்ய முடியாத செயல். அரிதானது என்றால் எளிதில் கிடைக்காதது. எப்போதாவது நிகழ்வது. அந்த மாதிரி செயல் செய்பவர்கள் பெரியவர்கள்.

இது சாதாரண மக்களுக்கு மட்டும் அல்ல, மத குரு மார்கள், அரசியல் தலைவர்கள், என்று யார் யார் எல்லாம் தங்களை பெரியவர்கள் என்று கூறிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இது பொருந்தும்.

எனவே, பெரியவர் என்பது செயலைப் பொருத்தது.

சரி, பெரியவர்கள் செய்வதற்கு அரிய செயல்களை செய்வார்கள்.

அப்படியானால் சிறியவர்கள் ?

சிறியவர்கள் சின்ன செயல்களை செய்வார்கள் என்று சொல்லவில்லை.

சிரியர் செய்வதற்கு அறிய செயல்களை செய்ய மாட்டார்கள். அப்படி என்றால் சின்ன செயல்களை செய்வார்களா என்றால், அதையும் கூட செய்யாத சோம்பேறிகளாக இருக்கலாம்.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 
செயற்கரிய செய்கலா தார்.

ஒரு அரிய செயலை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து முடித்து விட முடியாது. அதை செய்து முடிக்க நாள் பிடிக்கும்.

அந்த கால கட்டத்தில் உங்கள் செயலும், எண்ணமும் ஒரு பெரிய செயலை செய்வதில் மூழ்கி  இருக்கும் போது  உங்களை அறியாமலேயே உங்கள் மனம் நல் வழிப் படும், பெரியவர்களின் தொடர்பு ஏற்படும், சில்லறை விஷயங்களில் ஈடுபட   நேரம் இருக்காது.

அந்த செயலை நோக்கி நீங்கள் நகரும்போது தானகவே உங்கள் ஆளுமை (personality ) மாறும். பெரியவர் ஆவீர்கள்

பெரியவர்களாக அது ஒன்றுதான் வழி.

நீங்கள் இதுவரை அரிய செயல் எதையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை...இன்றிலிருந்து ஆரம்பியுங்கள்....வாழ்நாளில் ஏதாவது ஒரு பெரிய  செயல வேண்டும் என்று.

எப்பதான் பெரியவராகப் போகிறீர்கள் ?

பிறக்கும் போது சின்னவராக இருந்தோம். இறக்கும் போதும் அப்படியேவா இருப்பது  ?

பெரியவனாக, பெரியவளாக வளர வேண்டாமா ?

வளருங்கள்.

செயர்கரியதை செய்து முடிக்கும் வரை , நான் பெரியவன் / ள் என்ற எண்ணத்தை தவிருங்கள்.

முடிவு செய்து விட்டீர்களா ? என்ன செய்யப் போகிறீர்கள் ?

நளவெண்பா - மயங்கினாள் , என் செய்வாள் மற்று ?

நளவெண்பா - மயங்கினாள் , என் செய்வாள் மற்று ?


நளனின் காதலை தமயந்தியிடம் அன்னப் பறவை  சொன்னது. நளன்  உன் மேல்  எப்படி எல்லாம் காதல் கொண்டிருக்கிறான் என்று கூறியது.

அதை கேட்ட தமயந்தி உருகுகிறாள். ஐயோ , என் மேல் இத்தனை அன்பா, இத்தனை காதலா என்று அவள் மனம் கரைகிறது. ஏற்கனவே அவனை திருமணம் முடித்து, அவனை கட்டி அணைத்தார்ப் போல இருக்கிறது அவளுக்கு. அந்த அபரிமிதமான காதலால், மகிழ்ச்சியில் அவள்  மார்புகள் விம்முகின்றன. அதை அவள் பார்க்கிறாள். மயங்குகிறாள்.

பாவம் பெண், வேறு என்ன செய்ய முடியும் ?

பாடல்

மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க அகமுருகி - முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினாள் என்செய்வாள் மற்று.

பொருள்



Monday, June 24, 2013

இராமாயணம் - அவளை காணும் காலம் வருமா ?

இராமாயணம் - அவளை காணும் காலம் வருமா ?



திருமணத்திற்கு முதல் நாள். இராமன் தனிமையில் அமர்ந்து சீதையின் அழகைப் பற்றி எண்ணுகிறான்.

அவனுக்குள் காதல் பொங்கி எழுகிறது.

அவளுடைய உருவம் அவன் கண் முன் வந்து போகிறது. அவளோட அழகிற்கு முன்னால் நான் எம்மாத்திரம் என்று எண்ணுகிறான்.

அவளுடைய அந்த அழகிய மார்புகள், வாள்  போன்ற கூறிய கண்கள், நிலவு போன்ற முகம், அதில் நெளியும் ஒரு புன் முறுவல், அந்த புன்னகை பூக்கும் இதழ்கள்...அவளை இன்னொரு முறை பார்க்கும் காலம் வருமா ?

திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. விடிந்தால் திருமணம். அதற்குள் இராமனுக்கு அவளை பார்க்க வேண்டும் என்று ஆவல்.

உங்கள் வாழ்விலும் நடந்த மாதிரி இருக்கிறதா ?...:)

பாடல்

பூண் உலாவிய பொற் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதலஎன்னினும்;
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவதுஓர் காலம் உண்டாம் கொலோ?


பொருள்


திருக்குறள் - காலத்தினால் செய்த உதவி

திருக்குறள் - காலத்தினால் செய்த உதவி 



காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.


ஒரு குவளை தண்ணீர் என்ன பெறும் . ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது பெரிய உதவியா ?

சாதரணமான நேரத்தில் அது ஒன்றும் பெரிய உதவி இல்லை தான்.

அதுவே, ஒரு பாலை வனத்தில், நாக்கு வறண்டு உயிர் போகும் தருவாயில் உள்ள ஒருவனுக்கு அந்த ஒரு குவளை தண்ணீர் எவ்வளவு பெரிய உதவி ?

உதவி என்பது என்ன செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது யாருக்குச் செய்கிறோம் எனபது அல்ல

உதவி என்பது எப்போது செய்கிறோம் என்பதைப் பொருத்தது.

மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.

இதையே கொஞ்சம் மாத்தி யோசித்துப் பார்ப்போம்.

காலம் அல்லாத காலத்தில் செய்த உதவி பெரிது அல்ல. அதற்காக எப்போதும் சாகிற  காலத்தில்தான் உதவி செய்ய வேண்டும் என்பது அல்ல.

"நான் அவனுக்கு அவ்வளவு செய்தேனே...அவனுக்கு கொஞ்சம் கூட நன்றி இல்லை " என்று நிறைய பேர் அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.

உதவி செய்தவனுக்கு வேண்டுமானால் அது பெரிதாய் இருக்கலாம். உதவி பெற்றவனுக்கு  அது சரியான காலமாய் இருக்காது. அவனை நொந்து பயன் இல்லை.

அதே போல், மிக இக்கட்டான காலத்தில் உள்ளவர்களுக்கு செய்யும் உதவி மிகப் பெரிதாய்  நினைக்கப் படும்.

இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர் ஒருவனுக்கு இறுதி வந்த காலத்தில் செய்த உதவி  பெரிதாய் நினைக்கப் படும் என்று கூறினார்.

அதுக்காக மருத்துவமனைக்குப் போய் , சாகக் கிடக்கிறவனாய்  பாத்து உதவி செய்ய கூடாது

இறுதி என்பதற்கு ஒரு இக்கட்டான சமயம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொன்றையும் யோசிக்கலாம்.

அதாவது, ஒருவன் உதவி என்று கேட்கும் போது, அதன் அவசரம் தெரிந்து உதவி செய்ய வேண்டும்.   கொஞ்சம் காலம் தாழ்த்தினாலும் அந்த உதவியின் பயனோ  பலனோ வெகுவாக குறைந்து போகலாம்.


எனக்கு இதில் வேறு ஒரு அர்த்தம் தோன்றுகிறது.இலக்கணப்படி அது சரியாக வருமா என்று தெரியவில்லை. இருந்தாலும்.....

ஒருவனுக்கு பணம் காசு தந்து உதவி செய்யலாம். வேலை வாங்கித் தரலாம். அது எல்லாவற்றையும் விட  மிகச் சிறந்த உதவி அவனுக்கு உங்கள் நேரத்தை தருவது. காலத்தினால் செய்த உதவி. பொருளினால் செய்த உதவி அல்ல. காலத்தினால்  செய்த உதவி.

காலம் என்பது எப்போதும் அரிதான ஒன்று. உங்கள் காலத்தை (நேரத்தை ) நீங்கள்  மற்றவருக்கு தருகிறீர்கள் என்றால் உங்களையே தருகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் காலத்தை மட்டும் தனியே அனுப்ப முடியாது.

உதவி வேண்டுபவனை நேரில் போய் பார்ப்பது , அவனுடைய துன்பத்தை தீர்க்க  நீங்கள் முயற்சி செய்வது, உங்களுக்குத் தெரிந்தவர்களை கண்டு பேசி அவனுடைய துன்பத்திற்கு  வழி தேடுவது, அவனுக்காக பணம் திரட்டுவது, அவனுக்காக பரிந்து பேசுவது இப்படி பல வழிகளில் உங்கள் காலத்தை அவனுக்காக செலவிடலாம். அவன் துன்பத்தை தீர்க்க உங்கள் நேரத்தை நீங்கள் செலவிடுவது பெரிய உதவி.

ஒண்ணும் இல்லை, கொஞ்சம் நேரம் செலவழித்து அவனை நேரில் போய்  பார்க்கிறீர்கள் என்று  வைத்துக் கொள்வோம், அவன் துன்பத்தின் ஆழம் தெரியும், அவன் மேல் பரிவு உண்டாகும், மேலும் உதவி செய்யவேண்டும் என்று தோன்றும்.

அவன் கூட பேசினால் (தொலை பேசியில், வள்ளுவர் தொலை பேசி என்று நினைத்து இருக்க மாட்டார் என்றாலும் ), அவன் என்ன வேண்டும் என்று சொல்வான். அவனுக்கு வேண்டியது ஒரு வேளை பணமாக இருக்காது. உங்கள் அறிவு, உங்கள் அனுபவம், உங்கள் தொடர்பு இவை எல்லாம் அவனுக்கு உதவி செய்யப் பயன் படலாம்.

கொஞ்சம் பணத்தை அனுப்பி விட்டு இருந்துவிட்டால் சிக்கல் தீர்ந்து விடாது.

வாழ்வில் எல்லா சிக்கலும் பணத்தால் தீர்ந்து விடாது.

எனவே, காலத்தினால் செய்த உதவி உலகை விட பெரியது.

அடுத்த முறை யாருக்காவது உதவி செய்ய வேண்டும் நினைத்தால், கொஞ்சம் நேரமும்  செலவிடுங்கள். உதவி தேவைப் படுபவருக்கு உங்கள் நேரம் மிகப் பெரிய  உதவியாய் இருக்கும். உங்கள் பணத்தை விட உங்கள் நேரம் அவருக்கு மிகப் பெரியதாய் தோன்றும்.

காலத்தினால் செய்த உதவி.


யோசித்துப் பாருங்கள்.


திருவெம்பாவை - எய்யாமற் காப்பாய்

திருவெம்பாவை - எய்யாமற் காப்பாய்


அழகான சின்ன கிராமம். அந்த கிராமத்தில் ஒரு கோவில். அந்த கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு திருக் குளம். அந்த குளத்தில் சில தாமரை மலர்கள் மலர்ந்து இருக்கின்றன. அந்த தாமரையில் தேன் குடிக்க வண்டுகள் வருகின்றன. வண்டுகளின் ரீங்காரம் அந்த அதி காலையில் தெளிவாகக் கேட்கிறது.

அதி காலை நேரத்தில் சில பெண்கள் அந்த குளத்தில் நீராட வருகிறார்கள்.
மார்கழி மாதம். குளிர் காற்று உயிர் உரசி போகும் நேரம்.குளத்தின் நீர் ஜில் என்று இருக்கிறது. தண்ணீரில் கால் வைத்தால் குளிர் எலும்பு வரை எட்டி பாயும்.

அந்த பெண்கள் ஆனது ஆகட்டும் என்று நீரில் "முகேர்" என்று குதித்து விட்டார்கள்.

குளிர்கிறது . சிறிது நேரத்தில் குளிர் பழகி விட்டது. தண்ணீர் சுகமாக இருக்கிறது.

தூரத்தில் கோவில் மணி அடிக்கிறது.

அந்த பெண்கள்  இறைவனின் திருவடிகளை  போற்றி பாடுகிறார்கள்.

"ஐயா, வழி வழியாய் உந்தன் அடியார்களாக வாழ்ந்து வருகிறோம்.  சிவந்த சிவந்த மேனியில் பால் போன்ற திருவெண்ணீறு அணிந்தவனே.  அந்த உமா தேவியின் மணவாளனே.  நீ அடியார்களை ஆட் கொண்டு விளையாடும் விளையாட்டில், பலன் அடைந்தவர்கள் சென்ற வழிகளை அறிந்தோம். எங்களை கை விடாமல் காப்பாற்றுவாய்"

அவர்களின் பாடலும், வண்டுகளின் ஒலியும் , கோவிலின் மணியும், அவர்கள் நீராடும் போது தோன்றும் நீரின் சல சலப்பு ஒலியும் காற்றில் கலக்கின்றது....


பாடல்

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்.


பொருள்


Sunday, June 23, 2013

திருக்குறள் - செய்யாமல் செய்த உதவி

திருக்குறள் - செய்யாமல் செய்த உதவி


செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.


சீர் பிரித்த பின்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் மாற்றல் அரிது 


பள்ளிக் கூடத்தில் படித்த குறள்தான்.

உதவி செய்யாமல் இருந்து பின் செய்த உதவிக்கு ஈடாக இந்த வையகத்தையும் வானகத்தையும் தந்தாலும் போதாது.

இப்படித்தான் படித்தோம்.

வள்ளுவர் இவ்வளவு சாதரணமாக எழுதுவாரா ?

முதலில், அது என்ன செய்யாமல் செய்த உதவி ?

ஒருவன் நமக்கு முன் பின் ஒரு உதவியும் செய்யாமல் இருக்கும் போது அவனுக்கு நாம்  செய்யும் உதவி இருக்கிறதே அது தான் செய்யாமல் செய்த உதவி. அதாவது, ஒருவர் உங்களுக்கு முன்பே ஒரு உதவி  செய்திருக்கிறார் என்று வைத்துக்   கொள்வோம், அதற்க்கு பதிலாக நீங்கள் ஒரு உதவி செய்கிறீர்கள் என்றால் அது  பெரிய விஷயம் அல்ல. உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ  நீங்கள் செய்யும் உதவி பெரிதல்ல. உங்களுக்கு உதவியே செய்யாத ஒருவருக்கு நீங்கள் செய்யும் உதவி மிகப் பெரியது


இது ஒரு அர்த்தம்

இன்னொரு அர்த்தம்....செய்யாமல் செய்வது. அது என்ன செய்யாமல் செய்வது ? குழப்பமாய்  இருக்கிறதே.

சில பேர் நமக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்து செய்ய மாட்டார்கள். அவர்கள், அவர்கள் கடமையை செய்வார்கள். நமக்கு அது உதவியாய்  முடியும்.

உதாரணமாக, நம் பெற்றோர்கள்.

அவர்கள் நமக்கு எவ்வளவோ செய்கிறார்கள். அது எல்லாம் உதவி என்று நினைத்து அவர்கள் செய்வது இல்லை. அது நமக்கு மிகுந்த பலனை தருகிறது. அது செய்யாமல் செய்த உதவி.

நம் ஆசிரியர்கள்.

உதவி செய்ய வேண்டும் என்று பாடம் நடத்துவது இல்லை. ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடம் நமக்கு எவ்வளவு பெரிய  உதவியாய் முடிகிறது. அது செய்யாமல் செய்த உதவி.

நாம் யார் என்று கூட தெரியாமல் நமக்காக குறள் எழுதி வைத்தாரே வள்ளுவர், அது செய்யாமல் செய்த உதவி.

ஆழ்ந்து யோசித்தால் நமக்கு எவ்வளவோ பேர் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்காமல் , அவர்கள் செய்த ஏதோ ஒன்று நமக்கு உதவியாய் முடிந்திருக்கிறது.

போலியோ சொட்டு மருந்தை தந்த அந்த விஞ்ஞானி செய்தது செய்யாமல் செய்த உதவி.

சுயநலம் அற்ற அந்த உதவிகள் செய்யாமல் செய்த உதவிகள்.

வையகமும் வானகமும் மாற்றல் அரிது என்றால் என்ன அர்த்தம் ?

அப்படிப்பட்ட உதவிக்கு நாம் என்ன செய்தும் ஈடு கட்ட முடியாது. இந்த உலகம் பூராவையும் , அந்த வானம் பூராவையும் தந்தாலும் போதாது என்கிறார் .

எதை கொடுத்தும் அந்த நன்றியை நம்மால் ஈடு கட்ட முடியாது.

எதை கொடுத்து தாயின் அன்பை ஈடு கட்டுவீர்கள் ?

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய குறள் .


கம்ப இராமாயணம் - கண்ணின் விழுங்காலால்

கம்ப இராமாயணம் - கண்ணின் விழுங்காலால்



இராமன் வில்லை முறித்துவிட்டான். திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு.  இருவரும் தனித் தனியே இருக்கிறார்கள். மனதில் காதல் கனிகிறது. கம்பனின் கவிதைகள், காதலின் உச்ச கட்டம்.

கம்பனுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது

காதலைச்  சொல்ல வேண்டும். சொல்லப் படும் தலைவனும் தலைவியும் இறைவனும் இறைவியும் ஆகும். விரசத்தின் விளிம்பை கூட தொட்டு விடக் கூடாது. மிக மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய இடம்.

இராமன் நினைக்கிறான்...

அவளுக்கு என் மேல் அருள் இல்லை என்றாலும், என் மனதில் எழுந்த ஆசையால் வந்த இந்த  கலக்கத்தை தரும் நோய் போக என்னை அவள் அப்படியே அவளுடைய கண்களால் விழுங்கி விட்டால் கூட பரவாயில்லை. இந்த உலகில் நிற்கும் பொருளும், அசையும் பொருளும் எல்லாம் அவளாகவே தெரிகிறதே.....

பாடல்

‘அருள் இலாள் எனினும். மனத்து ஆசையால்.
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்காலால்.
தெருள் இலா உலகில். சென்று. நின்று. வாழ்
பொருள் எலாம். அவள் பொன் உரு ஆயவே!


பொருள்


Saturday, June 22, 2013

சரஸ்வதி அந்தாதி - கல்லும் சொல்லாதோ கவி

சரஸ்வதி அந்தாதி - கல்லும்   சொல்லாதோ கவி 


கம்பர் எழுதியாதக சொல்லப் படும் நூல்.

முப்பது பாடல்களை கொண்டது.

அறிவுக் கடவுளான சரஸ்வதியின்  மேல் பாடப் பட்டது.

உண்மையிலேயே சரஸ்வதி நேரில் வந்து அருள் வழங்கினால் ஒருவன் எவ்வளவு சந்தோஷப் படுவானோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியும் நன்றியும் கொப்பளிக்கும் பாடல்கள்.

கம்பர் சொல்கிறார், நான் எப்படி இவ்வளவு அழகான கவிதைகள் எழுதுகிறேன் என்று நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்கள் அல்லவா ? இது என்ன ஆச்சரியம், அவளை இரவும் பகலும் எந்நேரமும் துதித்தால், ஒரு கல்  கூட கவி பாடும் என்கிறார்.

பாடல்


படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

பொருள் 

திருக்குறள் - அன்பு கட்டாயம் செய்ய வேண்டும்

திருக்குறள் - அன்பு கட்டாயம் செய்ய வேண்டும்



என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

நாம் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துவதும், செலுத்தாமல் இருப்பதும் நம் விருப்பம்தானே ? அதை யாரும் நம் மீது திணிக்க முடியாது தானே ? நீங்கள் மற்றவர்கள் மேல் அன்போடு இருக்க வேண்டும் என்று சட்டம் போட முடியுமா ? முடியாது அல்லவா ?

அப்படி அல்ல என்கிறார் வள்ளுவர்

நீங்கள் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துவது என்பது உங்கள் விருப்பம் அல்ல. நீங்கள் கட்டாயம் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்தியே ஆக வேண்டும் என்கிறார்.

இது என்னடா வம்பா போச்சு....அப்படி நான் யார் மேலும் அன்பு செலுத்தாமல் இருந்தால் என்ன ஆகும் ? என்று கேட்டீர்கள் என்றால் அதற்க்கும் வள்ளுவர் விடை வைத்து இருக்கிறார்.

அப்படி அன்பு செய்யாதவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்கிறார்.

யார் தண்டிப்பா ? என்று கேட்டால் ....

அறம் தண்டிக்கும் என்கிறார்.

என்ன தண்டனை தெரியுமா ? கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுப்பது...வருந்த வருந்த உயிரை எடுப்பதுதான் அந்த தண்டனை.

நான் சொன்னா நம்ப மாட்டீங்க....பாடலைப் பாருங்க...

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

கொஞ்சம் சீர் பிரிப்போம் ...

என்பு இல்லதனை வெயில் போலக் காயுமே
அன்பு இலதனை அறம்

பொருள்

என்பு என்றால் எலும்பு. எலும்பு இல்லாததை வெயில் எப்படி காயுமோ அது போல அன்பு இல்லாததை  அறம் காயும்.

எலும்பு இல்லாதது எது ? புழு.

இந்த புழு என்ன செய்யும்...அதனுடைய மறைவிடத்தில் இருந்து வெளிச்சம் கண்டவுடன் வெளியே வரும். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து வெளியே வரும்.  இளம் சூடான வெயிலில் குளிர் காயும். நேரம் ஏற ஏற சூடு அதிகம் ஆகும். திருப்பி தன் இடத்திற்கு போகலாம் என்றால் அதனால் வேகமாக ஓட முடியாது. நகர்ந்து தான் போக முடியும். தரையோ சுட்டு பொசுக்கும். ஓடி ஒதுங்கவும் முடியாது. சூடு பொறுக்கவும் முடியாது. கடைசியில் உடலில் உள்ள நீர் வற்றிபோய் கருகி சாகும்.

அது போல, அன்பு இல்லாதவனுடைய வாழ்க்கை முதலில் நன்றாக இருப்பது போல தோன்றினாலும் ...நாள் நாள் ஆக ஆக துன்பபடுவான்.  அறக் கடவுள் அவனை தண்டிப்பார்.

சூரியன் வெளி வரும் போது வெளிச்சம் கண்ணுக்குத் தெரியும். சூடு கண்ணுக்குத் தெரியாது.

எப்படி கண்ணுக்குத் தெரியாத சூட்டில் புழு துடிதுடித்து இறக்குமோ, அது போல் அன்பில்லாதவன்  அறத்தால் இறப்பான்.

சூரியன், அந்த புழுவை வெளியில் இழுத்துப் போட்டு பொசுக்குவது இல்லை. புழு தானே வெளியே வரும்.  இளம் சூடு, வெளிச்சம் இவற்றை கண்டு அதுவே வெளியே வந்து   சூடு கொண்டு மாளும் .

அது போல, அன்பில்லாதவன், தானே அழிவைத் தேடிக் கொள்வான். யாரும் போய்  அவனை பிடித்து வந்து தண்டிக்க வேண்டியது இல்லை.

அன்பு செய்து கொண்டே இருங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.



நளவெண்பா - கற்பின் தாழ் வீழ்த்த கதவு

நளவெண்பா - கற்பின் தாழ் வீழ்த்த கதவு 


தமயந்தி, நளனை காண்கிறாள்.

ஒரு புறம் காதல். மறு புறம் ஆசை. இரண்டுக்கும் நடுவில் நாணமும் கற்பும்.

பெண் பாவம்தான். எவ்வளவு சிக்கல்.

தாமரை போன்ற தமயந்தியின் முகம். நீலோற்பலம் போன்ற நளனின் கண்கள் சென்று தீண்டியதுதான் தாமதம் ... ஆசையை மனத்தில் அடக்கி, கற்பு என்ற தாழ் போட்டு பூட்டி வைத்திருந்த கதவு, அவள் கொண்ட அன்பின்/காதலின் வேகத்தால் திறந்து கொண்டது.

ஆசை மனதில் இருக்கிறது. ஆனால், அந்த ஆசை அல்ல மனம் திறக்க காரணம்.

அவன் மேல் கொண்ட அன்பினால் அந்த கதவு திறந்து கொண்டது.

பாடல்  


நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர்
அற்பின்தாழ கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்த்த கதவு.


பொருள்


Friday, June 21, 2013

திருக்குறள் - மெய் பொருள் காண்பது அறிவு

திருக்குறள் - மெய் பொருள் காண்பது அறிவு


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எல்லோரும் அறிந்த குறள்தான். எதை யார் சொன்னாலும், அதன் உண்மையான பொருளை காண்பது அறிவு.

இது நாம் பள்ளிக் கூடத்திலேயே படித்திருக்கிறோம்.

நவில் தொறும் நூல் நயம் போலும், படிக்க படிக்க புதுப் புது அர்த்தங்களைத் தருவது திருக்குறள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்வார்கள். அதில் எது உண்மை என்று கண்டு அறிய வேண்டும் என்பது ஒரு பொருள்.

ஒரே ஆளே கூட வேறு வேறு விதமாக பேசலாம். அவனுடைய அறிவும், அனுபவமும் ஏற ஏற அவன் சொல்லுவது மாறும். அன்றைக்கு சொன்னது மாதிரியே என்றைக்கும் சொல்லுவான் என்று நாம் நினைக்கக் கூடாது. அதற்காக, ஒவ்வொரு நாளும் அவனிடம் போய் , நீ இன்று நினைக்கிறாய் என்று கேட்டுக் கொண்டும்  இருக்க முடியாது.

அறிவும், அனுபவமும் மட்டும் அல்ல ஒருவனின் உணர்ச்சியின் நிலை கூட அவன் சொல்லுவதை மாற்றலாம். கோபமாக இருக்கும் போது  ஒன்று சொன்னால்  அதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆட்கள் மாறினாலும், ஒரே ஆள் வேறு வேறு விதமாக கூறினாலும், அதன் மெய் பொருளை  அறிவது அறிவின் வேலை.

சரி. இது புரியுது. அடுத்தது, யார் யார் "வாய்" கேட்பினும் அப்படின்னு சொல்றாரே ...அது என்ன வாய் ?

சில சமயம் மனம் ஒன்று நினைக்கும், வாய் ஒன்று சொல்லும்.

பெற்றோரோ, ஆசிரயரோ ஒரு மாணவனை கடிந்து ஏதாவது சொல்லி விடலாம். அந்த வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் அது தப்பாகத்தான்  தெரியும். வாய் வார்த்தையை பார்க்கக் கூடாது. அதன் பின் உள்ள  மெய்யான அர்த்தத்தை உணர வேண்டும்.

அதே போல், தீயவர்கள் வாய் வார்த்தை அழகாக இருக்கும். ஆனால், உள்ளே வஞ்சம் இருக்கும். அந்த வாய் வார்த்தையின் மெய் பொருளை காண்பது அறிவு. இவன் எதற்க்காக இதை சொல்கிறான், இதில் உண்மையான நோக்கம் என்ன என்று அறிவது  அறிவின் வேலை.

இரண்டு வார்த்தைகளை வள்ளுவர் உபயோகப் படுத்துகிறார் ...

கேட்பது, காண்பது.

யார் யார் வாய் கேட்பினும்
மெய் பொருள் காண்பது

யார் யார் என்று இரண்டு முறை கூறினார். ஏன் ?

யார் யார் என்பது பன்மை பற்றி வந்தது.

அதாவது, ஒருவன் நேரடியாக நம்மிடம் ஒன்று சொல்லலாம்.

மாறாக, அவன் அப்படி சொன்னான், இவன் இப்படி சொன்னான் என்று வேறு யாரோ சொன்னதை கேட்டு வந்து நம்மிடம் சொல்லலாம். இப்படி யாரோ சொன்னதை கேட்டு  நம்மிடம் சொல்லும் போது , அது பல பேரை தாண்டி நம்மிடம் வரலாம்


முதலாவது ஒருத்தன் ஒன்றை சொல்லி இருக்கலாம். அதை இரண்டாமவன் கேட்டு, மூன்றாவது ஒருத்தனிடம் சொல்லி, அவன் நான்கவதாக ஒருவனிடம் கூறி....இப்பை பல ஆட்களை தாண்டி நம்மிடம் வரலாம்.

யார் யார் வாய் கேட்பினும் என்பதற்கு அதுதான் அர்த்தம்.

யோசித்துப் பாருங்கள். எத்தனையோ மத சம்பந்தப் பட்ட கோட்பாடுகள் யார் யாரோ சொல்லி , எப்படி எப்படியோ மாறி நம்மிடம் வருகிறது.

ஆதி சங்கரர் சொன்னதை அவர் சிஷ்யர்கள் கேட்டு, அவர்கள் அவர்களின் சிஷயர்களுக்குச் சொல்லி. ...இப்படி பல தலாய் முறைகளை கடந்து வாய் வழியாக  நமக்கு வந்து சேர்ந்து இருக்கிறது. நாம் கேட்பதுதான் முதலில் சொல்லப் பட்டது என்று சொல்ல முடியாது.

எனவே, மெய் பொருள் "காண்பது" அறிவு. காண்பது என்றால், நீங்களே காண வேண்டும். உங்கள் அனுபவத்தில் நீங்கள் காண வேண்டும்.

வியாசர் சொன்னார், கிருஷணர் சொன்னார், இயேசு சொன்னார் , புத்தர் சொன்னார்  என்று சொல்லாதீர்கள். நீங்கள் கண்டதுண்டா ?

புவி ஈர்ப்பு விசை பற்றி நியூட்டன் சொல்லுவதை கேட்டால் மட்டும் போதாது. நீங்களே அதை சோதனை செய்து "பாருங்கள்" அல்லது "காணுங்கள்".

சில சமயம் உங்கள் காதுகளும், கண்களும் கூட உங்களை ஏமாற்றலாம். தோற்றம் பொய்யாக இருக்கலாம். பொய் பொருளை இல்லை, மெய் பொருளை காண்பது அறிவு.

திருக்குறளில் எதையும் சாதாரணம் என்று ஒதுக்கி விடாதீர்கள். ஒவ்வொரு குறளுக்கு  பின்னாலும் ஏராளமான அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன.

நாம் முன்பு செய்த புண்ணியம்....நமக்குத் தமிழ் தெரிவது.

நாம் செய்த தவம், திருவள்ளுவர்

  

நள வெண்பா - நாணம் என்னும் தறி

நள வெண்பா - நாணம் என்னும் தறி 


தமயந்திக்கு, நளன் மேல் அவ்வளவு காதல். அவனை அப்படியே இறுக கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை.

இறுக என்றால் எவ்வளவு இறுக?

தன் மார்பும், அதில் தவழும் பொன் ஆரமும் நளனின் மார்பில் அழுந்தி மறைந்து போகும் அளவுக்கு இறுக கட்டி அணைக்க ஆசை.

ஆசை என்றால் எவ்வளவு ஆசை ?

யானை அளவுக்கு பெரிய ஆசை.

ஆனால், இந்த பாழாய் போன நாணம் இருக்கிறதே, இத்துணுண்டு தான் இருக்கு, இருந்தாலும் அந்த நாணம் பெரிய யானையை கட்டி அடக்கும் அங்குசம் போல என் ஆசைகளை எல்லாம் கட்டிப் போட்டு விடுகிறதே என்று நொந்து கொள்கிறாள் தமயந்தி....

ஜொள் வடியும் அந்த பாடல்


மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளிப்ப புல்லுவனென் - றுன்னா
எடுத்தபே ரன்பை இடையே புகுந்து
தடுத்ததே நாணாம் தறி.

சீர் பிரித்த பின்


மன்னன் அகத்துள் அழுந்தி  வார் அணிந்த மென்முலையும்
பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவென் என்று உன்னா 
எடுத்த பேரன்பை இடையே புகுந்து
தடுத்ததே நாணாம் தறி.

பொருள்


Wednesday, June 19, 2013

திருக்குறள் - குடும்பம் முன்னேற

திருக்குறள் - குடும்பம் முன்னேற 


ஒரு ஆணோ பெண்ணோ திருமணம் ஆகாமல் தனியாளாக இருந்து விட்டால் பெரிய சவால்கள் ஒன்றும் இல்லை.

திருமணம் ஆன பின், கணவன்/மனைவி, குழந்தைகள் , கணவன் வீட்டார், மனைவி வீட்டார் என்று குடும்பம் பெருகி விடுகிறது.

அந்த குடும்பத்தை உயர்த்துவது அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமை.

பிள்ளைகளை படைக்க வைக்க வேண்டும், குடும்பத்தில் யாராவது வறுமையில் துன்பப் பட்டால் அவர்களை காக்க வேண்டும், குடும்பத்தின் பெருமையை தூக்கிப் பிடிக்க வேண்டும்....குடும்பம் நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்..

அதற்கு என்ன வழி.

ஒரே ஒரு விஷயம். அது மட்டும் போதும் என்கிறார் வள்ளுவர்.

சோம்பலில்லாமல் இருக்க வேண்டும்.

ஒருவன் தன்  குடும்பம் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால், அவன்  சோம்பலை  முற்றுமாக கை விட வேண்டும்.

பாடல்

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.


பொருள்

மடியை = சோம்பலை

மடியா = சோம்பலாக நினைத்து

ஒழுகல் = வாழ்தல்

குடியைக் = குடும்பத்தை

குடியாக வேண்டு பவர் = நல்ல குடும்பமாக குடும்பமாக வேண்டுபவர் .


அது என்ன மடியை மடியா ?

சோம்பல் என்பது ஒரு தீய குணம். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். அது எந்த அளவுக்கு தீய குணம் என்றால் தீயைப் போல தீயது , விஷத்தை போல  தீயது என்று சொல்ல வேண்டும். 

வள்ளுவர் பார்த்தார் ...உலகில் உள்ள எல்லா தீய குணங்களுக்கும் மேலான தீய குணம்  சோம்பல் தான் என்று கண்டார். எனவே, அதையே அதற்க்கு  உதாரணமாக  சொல்லி விட்டார். இமய மலை எவ்வளவு உயரம்னா என்று எப்படி சொல்லுவது ? அதுதான் உள்ளதிலேயே உயரமான மலை. 

சோம்பலை , சோம்பல் போல நினைத்து விலக்கினால் , குடும்பம் சிறக்கும் 

குடும்பம் சிறக்க வழி. 
சோம்பல் எவ்வளவு தீமையானது என்பதற்கு ஒரு உதாரணம். 

தினம் ஒரு குறள்  படியுங்கள்

வாழ்க்கை உயரும்.

 

Tuesday, June 18, 2013

பிரகலாதன் - நரசிம்மம் இரணியனை கொல்லுதல்

பிரகலாதன் - நரசிம்மம் இரணியனை கொல்லுதல்

பிரகலாதனை எப்படியெல்லாமோ கொல்லுவதற்கு இரணியன் முயற்சி செய்தான். ஒன்றும் பலிக்கவில்லை.

கடைசியில் தூண் பிளந்து நரசிங்கம் வந்தது.

அப்போதும் பிரகலாதன் தன் தந்தையான இரணியனிடம் , இறைவனை தொழும்படி கூறினான்.

இரணியன் கேட்கவில்லை. நரசிங்கத்திடம் போருக்குப் போனான்.

எப்படி ?

பயங்கர சிரிப்பு. கையில் பெரிய வாள் . கையும், காலும் வாயும் கோபத்தால் அனல் கக்குகிறது. புகை எழுகிறது.

எதிரில் நரசிங்கம்.

கணக்கில் அடங்காத தோள்கள். அத்தனை கைகள்.

அந்த கைகளால், அவனை இழுத்து மடியில் போட்டு, காலாலும், கைகளாலும் அவனை அப்படியே சூழ்ந்தது.

பாடலைப் படித்துப் பாருங்கள் ... நரசிங்கத்தின் கை விரல்கள் உங்கள் உடல்மேல் ஊறுவதை உணர்வீர்கள்....


பாடல்

'நகைசெயா, வாயும் கையும் வாளொடு நடந்த தாளும்
புகைசெயா, நெடுந் தீப் பொங்க உருத்து, எதிர் பொருந்தப் புக்கான்;
தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான் -
மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான்.


பொருள் 

திருக்குறள் - துன்பத்தின் இலக்கம்

திருக்குறள் - துன்பத்தின் இலக்கம் 


நாம் வாழ்வில் முன்னேறாததற்கு முக்கிய காரணம் உடல் துன்பத்தை பெரிது படுத்துவதுதான்.

சோம்பல். விடா முயற்சியின்மை. தள்ளிப் போடுதல் போன்ற அனைத்து கெட்ட குணங்களுக்கும் ஆணி வேர் எது என்று பார்த்தால், உடல் படும் துன்பத்தை பொறுக்காமல் இருப்பது.

ரொம்ப சோர்வா (tired ) இருக்கு. நாளைக்கு படிக்கிறேன்.

ரொம்ப அசதியா இருக்கு, அப்புறம் செய்யலாம்.

முதுகு வலிக்குது, கண் எரியுது, கழுத்தெல்லாம் ஒரே வலி...எழுதி எழுதி கையே உடைஞ்சிரும் போல இருக்கு, ரொம்ப தலை வலிக்குது.........

என்று உடல் துன்பத்தை பொறுக்காமல் இருப்பது தான் வெற்றிக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் தடைக் கல்.

நிறைய பேர் உடல் பயிற்சி செய்வது கிடையாது. காரணம், உடல் வலிக்கும்.

படி ஏறுவது கிடையாது.

தூக்கத்தை பொறுப்பது கிடையாது.

காலையில் எழுந்திரிக்க சோம்பேறித்தனம்.  இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே தூங்குவோமே என்ற உடல் சுகம்.

சான்றோர்கள், பெரியவர்கள் அப்படி இருப்பது இல்லை.

அவர்கள் இந்த உடல் துன்பத்தின் இலக்கு என்று கொள்வார்கள்.  ஒரு வேலை எறிந்தால் எப்படி அது அந்தந இலக்கை சென்று அடையுமோ அது போல் இந்த உடல் துன்பத்தின் இலக்கு.

எப்படி அந்த இலக்கு "ஐயோ, என் மேல் வேல் வந்து விழுகிறதே, அம்பு வந்து பாய்கிறதே " என்று பயப்படாமல், இது என் கடமை என்று அவற்றை தன் மேல் வாங்கிக் கொள்கிறதோ, அது போல் துன்பங்களை ஏற்பது இந்த உடலின் கடமை என்று மேலோர் ஏற்றுக் கொள்வார்கள்.

என்ன அர்த்தம் ?

நீங்களும் மேலோனாக வேண்டும் என்றால், உடல் துன்பத்தை பொருட்படுத்தாதீர்கள்.


இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்.

சீர் பிரித்த பின்

இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை 
கையாறாக் கொள்ளாதா மேல் 


பொருள்

இலக்கம் = குறி (target )

உடம்பு = இந்த உடம்பு

இடும்பைக்கு என்று = துன்பத்திற்கு என்று

கலக்கத்தை = கலங்குவதை

கையாறாக் கொள்ளாதா  மேல் = மனம் கலங்குதல் கொள்ள மாட்டார்கள் மேலோர்

கொஞ்சம் வலி பொறுங்கள்.

கொஞ்சம் அசௌகரியம் பொறுங்கள்.

கொஞ்சம் உடல் சுகத்தை குறையுங்கள்.

வெற்றி உங்களது. 


Monday, June 17, 2013

திருக்குறள் - சோதனைகளை வெற்றி கொள்ள

திருக்குறள் - சோதனைகளை வெற்றி கொள்ள 


வாழ்வில் நிறைய சோதனைகள் வரும். தோல்விகள் வரும். அந்த சோதனைகளும் தோல்விகளும் தரும் துன்பத்தை எப்படி கடந்து வெற்றி கொள்வது ?

எருது வண்டி இழுப்பதை பார்த்து இருக்கிறீர்களா ? மேடு, பள்ளம், மணல், சகதி , என்று அது செல்லும் வழியில் பல தடங்கல்கள் வரலாம். அந்த எருது அதை எல்லாம் பார்த்து சோர்ந்து நின்று விடாது. அது பாட்டுக்கு வண்டியை இழுத்துக் கொண்டே சென்று அது போய் சேர வேண்டிய இடத்தை சென்று அடையும்.

எடுத்த செயலை முடிக்க விடாமுயற்சி வேண்டும்.

சில பேர் வேலை செய்வதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டே இருப்பார்கள். வேலை செய்வது கிடையாது. அப்படியே வேலையை தொடங்கினாலும், ஒரு சோம்பல், ஒரு சுணக்கம் வந்து பாதியில் விட்டு விடுவார்கள்.

எருது போல் எத்தனை தடை வந்தாலும் விடா முயற்சியோடு எடுத்த காரியத்தை செய்பவனுக்கு வந்த துன்பம் துன்பப்பட்டு ஓடி விடும்.

பாடல்

மடுத்த வாயெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.

சீர் பிரித்த பின்

மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் உற்ற 
இடுக்கண் இடர் பாடு உடைத்து 


பொருள்


பிரகலாதன் - நாயகன் நாமம் விடுகிற்கின்றிலன்

பிரகலாதன் - நாயகன் நாமம் விடுகிற்கின்றிலன்


பிரகலாதனை, இரணியனின் வீரர்கள் பெரிய கல்லில் கட்டி, கடலின் நடுவில் காற்றை விட வேகமாக சென்று தூக்கிப் போட்டார்கள்.

என்ன ஆயிற்று ?

அந்த நிலையிலும் பிரகலாதன் நடுநிலைமையான அந்த நாயகனின் நாமத்தை  விடவில்லை. அதனால், அந்த கடல் அவனுக்கு சின்ன மடு போல ஆனது. அவனைக் கட்டிய அந்த கல் மிதக்கும் குடுவையானது. அந்த குடுவையே அவன் மிதந்து கரை சேரும் படகானது.

பாடல்

'நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆகலின், வேலை
மடு ஒத்து, அங்கு அதின் வங்கமும் அன்றாய்,
குடுவைத் தன்மையது ஆயது, குன்றம்.

பொருள் 

Sunday, June 16, 2013

அபிராமி அந்தாதி - என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

அபிராமி அந்தாதி - என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே 



பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

பெண், வானவில் போன்றவள்.

மனைவியே சில சமயம் தாயாகவும்,மகளாகவும், சகோதரியாகவும், தோழியாகவும் பரிணமிக்கிறாள்.

உயிர் தரும் தாயாக, கொஞ்சும் நேரம் மனைவியாக, முரண்டு பிடிக்கும் நேரம் மகளாக, சோதனை நேரத்தில் தோள் கொடுக்கும் போது தோழியாக....அத்தனையுமாக இருக்கிறாள் அவள். 

நீங்கள் அவளை எப்படி பார்கிரீர்களோ, அவள் அப்படி இருக்கிறாள். 

அபிராமியை பார்க்கிறார் பட்டார்.

இந்த உலகை எல்லாம் படைத்த தாயாகத்  தெரிகிறாள்.

படைத்தால் மட்டும் போதுமா ? படைத்த வண்ணமே அவள் எல்லா உயிர்களையும் காக்கிறாள்.

பின் அவற்றை மறைத்து வைக்கிறாள். அவற்றை அழிக்கிறாள் என்றோ கொன்றாள் என்றோ சொல்லவில்லை. சில உயிர்களை மற்ற உயிர்களிடம் இருந்து  மறைத்து வைக்கிறாள். 

கறை கண்டனுக்கு - நஞ்சை உண்டதால் கருத்த கண்டத்தை உள்ள சிவனுக்கு மூத்தவளே.

அவனுக்கு இளையவளே.

பெரும்  செய்தவளே. உன்னை விடுத்து வேறு தெய்வங்களை ஏன் வணங்குவேன் ? 

பொருள் 

பிரகலாதன் - கரை காணா வெள்ளத்து உய்த்திடுமின்

பிரகலாதன் - கரை காணா வெள்ளத்து உய்த்திடுமின்



இரணியனும் விட்டபாடில்லை.

பிரகலாதனை தீயில் இட்டு பொசுக்கச் சொன்னான். அது குளிர்ந்தது.
பாம்புகளை விட்டு கடிக்கச் செய்தான் - நஞ்சு அமுதமாகியது
யானையை விட்டு மிதிக்கச் செய்தான் - அது பயந்து, வணங்கிச் சென்றது.

அடுத்து, பிரகலாதனை கல்லை கடலில் தூக்கிப் போடுங்கள் என்றான்.

சொல்பவன் கம்பன். அதிலும் ஒரு  கவிச் சுவையை சேர்க்கிறான்.

நகர்த்த கூட முடியாத பெரிய மலை போன்ற கல்லோடு, இந்த கள்ளனை (பிரகாலதனை) எல்லோரும் பார்த்து நகைக்கும்படி, இறுகக் கட்டி, கரை காண முடியாத கடலின் நடுவில் கொண்டு போய் போடுங்கள்

என்று ஆணையிடுகிறான்

பாடல்

' "தள்ளத் தக்கு இல் பெருஞ் சயிலத்தோடு
எள்ளக் கட்டி எடுத்து விசித்து,
கள்ளத்து இங்கு இவனைக் கரை காணா
வெள்ளத்து உய்த்திடுமின்" என விட்டான்.


பொருள்

Saturday, June 15, 2013

பெரிய புராணம் - திரு ஞான சம்பந்தர்

பெரிய புராணம் - திரு ஞான சம்பந்தர் 


ஞானம் இரு வகைப் படும்.

ஒன்று கற்று அறிவது. இன்னொன்று அனுபவத்தில் வருவது.

இதை பர ஞானம், அபர ஞானம்  சொல்லுவார்கள்.

சில பேருக்கு நன்றாகப் பாட வரும்....குரல் இனிமை இருக்கும், தாள லயம் இருக்கும் ஆனால் இசை பற்றிய ஞானம் இருக்காது.

சில பேருக்கு பாடலை நன்றாக விமர்சிக்கத் தெரியும், ஆனால் பாட வராது.

இரண்டும் சேர்ந்து இருப்பது மிக சிறப்பானது.

சில புத்தகங்களை படித்து விட்டு எல்லாம் அறிந்த மாதிரி பேசுவார்கள். அனுபவ அறிவு இருக்காது.

இந்த இரண்டும் வரப் பெற்றவர் திரு ஞான சம்பந்தர்.

இரண்டு ஞானங்களின் சம்பந்தம், ஒரு பிணைப்பு அவருக்கு இருந்தது.

அதை சொல்ல வந்த தெய்வப் புலவர் சேக்கிழார்....

பாடல்

சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம்
உவமையிலாக் கலைஞான முணர்வரிய மெய்ஞ்ஞானந்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தர ரந்நிலையில்.


கொஞ்சம் சீர் பிரிப்போம். 

சிவன் அடியே  சிந்திக்கும் திரு பெருகும் சிவ ஞானம் 
பவம் அதனை அற  மாற்றும்  பாங்கில் ஓங்கிய ஞானம் 
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய  மெய்ஞ்ஞானந்
தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தர் அந்த நிலையில் 

பொருள்


பிரகலாதன் - பயம் ஏன் ?

பிரகலாதன் - பயம் ஏன் ?


வாழ்வில் துன்பங்கள் மலை போல் வரலாம் ? ஆபத்து நம்மை உலுக்கிப் போடலாம்.

உலகிலேயே மிகப் பெரிய பலவான், வீரன் இரணியன். தேவர்களும், முனிவர்களும் அவனிடம் நடுங்கி நின்றனர்.

அப்படிப் பட்ட அரக்கன், பிரகலாதனை கொல்லும் படி தன்  வீரர்களுக்கு உத்தரவு இடுகிறான்.

பிரகலாதன் அப்படி ஒன்றும் பெரிய பலசாலி இல்லை. சிரிய பாலகன்.

அவனை கயிற்றில் கட்டி, உலகிலேயே பெரிய யானையான இந்திரனின் ஐராவதம் என்ற யானையை கொண்டு மிதிக்கச் செய்யும்படி வீரர்களுக்கு ஆணை இடுகிறான்.

இதை விட பெரிய துன்பம், ஆபத்து என்ன இருக்க முடியும் ?

தப்பித்து ஓட முடியாது. எதிர்த்து சண்டை போட முடியாது ? இதுதான் எல்லை, இதுதான் முடிவு...என்ன செய்வது....என்ன செய்வது ?

யோசித்துப் பாருங்கள்.  துன்பத்தை பகரிந்து கொள்ளக் கூட யாரும் இல்லை.

தன்னந் தனியனாய் மிகப் பெரிய ஆபத்தை எதிர் நோக்கி நிற்கிறான்.

அவன் அந்த யானையிடம் வணங்கிச் சொன்னான்..உன் முன்னவனான கஜேந்திரனை காப்பாற்றியவன் என் மனத்தில் இருக்கிறான் என்று.

அதை கேட்டு யானை, அவனை தொழுது, பயந்து விலகிச் சென்றது.

யானைக்கு நம் மொழி தெரியுமா ? யானைக்கு கஜேந்திரன் கதை தெரியுமா என்பதல்ல கேள்வி.

பிரகலாதன் கதை எதற்கு இருக்கிறது ?

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இன்னல் வந்தாலும், ஆபத்து வந்தாலும், இறை நம்பிக்கை இருந்தால் அந்த துன்பமும், ஆபத்தும் உங்களை கண்டு பயந்து, உங்களை வணங்கி விலகிச் செல்லும் என்ற நம்பிக்கையை விதைக்க வந்தவை இந்த கதைகள்.

ஒரு புறம் கோபம் கொண்ட இரணியன்.

மறு புறம் மிகப் பலம் கொண்ட ஐராவதம்.

இன்னொரு புறம் இரணியனின் வீரர்கள்.

நம்பிக்கையின் சக்தியை சொல்ல வந்தவை இந்த கதைகள்.

பாடல்

'என்னா முன்னம், இருங் களிறும் தன்
பொன் ஆர் ஓடை பொருந்த, நிலத்தின்,
அன்னானைத் தொழுது, அஞ்சி அகன்றது;
ஒன்னார் அத் திறம் எய்தி உரைத்தார்.



பொருள் 

Friday, June 14, 2013

பிரகலாதன் - முந்தாய் நின்ற முதல் பொருளே

பிரகலாதன் - முந்தாய் நின்ற முதல் பொருளே


பிரகலாதனை கொல்ல இரணியன் பல விதங்களில் முயல்கிறான். தீயில் இட்டான். பின் கொடிய விடம் உள்ள பாம்புகளை விட்டு கடிக்கச் செய்தான். ஒன்றும் நடக்கவில்லை

அடுத்தது, யானையை விட்டு மிதிக்கச் சொன்னனான்.

இரணியனின் வீரர்கள் இந்திரனின் யானையை கொண்டு வந்தார்கள். பிரகலாதனை கயிற்றால் கட்டி அந்த யானையின் முன் போட்டு யானையைக் கொண்டு மிதிக்க முயன்றார்கள்.

பிரகலாதன் அந்த சமயத்திலும் நம்பிக்கை இழக்கவில்லை. அந்த யானையை வணங்கி கூறுவான்

"எந்தாய், முன்பு ஒரு நாள், கஜேந்திரன் என்ற உன் முன்னோனை ஒரு முதலை விழுங்க இருந்த போது, அந்த யானை ஆதி மூலமே என்று அழைத்த போது வந்து அதன் உயிர் காத்தானே, அவன் என் மனத்தில் இருக்கிறான்"

என்று கூறினான்.

பாடல்

' "எந்தாய் ! - பண்டு ஓர் இடங்கர் விழுங்க, -
முந்தாய் நின்ற முதல் பொருளே ! என்று, 
உன் தாய் தந்தை இனத்தவன் ஓத,
வந்தான் என்தன் மனத்தினன்" என்றான்.

பொருள் 

Thursday, June 13, 2013

திருக்குறள் - மறத்திற்கும் அன்பே துணை

திருக்குறள் - மறத்திற்கும் அன்பே துணை 




அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

அறத்திற்கே அன்பு சார்பு என்பர் அறியார் 
மறத்திற்கும் அதுவே துணை 

அற வழியில் நிற்பதற்கு மட்டுமே அன்பு துணை செய்யும் என்று சொல்லுபவர்கள் அறிய மாட்டர்கள் அறம் அல்லாத மற வழியில் செல்வதற்கும் அதுவே துணை என்பதனை.

மிக ஆழமான அர்த்தங்களை கொண்ட குறள் .

அறம் அல்லாத மற  வழிக்கு எப்படி அன்பு சார்பாக இருக்க முடியும் ?

அறம் அல்லாத வழியில் செல்பவர்கள் தீயவர்கள். முரடர்கள். அவர்களை மாற்றி அற வழியில் கொண்டு வருவதற்கும் அன்பே அடிப்படையாக உதவுகிறது.

மற வழியில் செல்பவர்களை திருத்தி அவர்களை அன்பால் நல்வழிப் படுத்த முடியும் என்பது பரிமேல் அழகர் உரை.

மேலும் சில உரைகள் உண்டு.  அவற்றை பரிமேல் அழகரும் , தேவநேய பாவாணரும்  மறுத்து உரைக்கிறார்கள்.

ஒரு சிலர் மற வழியில் செல்கிறார்கள் என்றால் அதற்கும் அன்பே காரணமாக இருக்கும் .

ஒருவன் திருடுகிறான் என்றால், தன் மனைவி குழந்தைகள் மேல் வைத்த அன்பினால், அவர்களை காப்பாற்ற தன்னிடம் பொருள் இல்லையே என்று  வருந்தி  திருடி இருக்கலாம். அறமல்லாத அந்த வழிக்கு செல்வதர்க்குக் கூட  அன்பே  காரணமாய் இருக்கிறது. இது இன்னொரு உரை.


வீர தீர செயல்களுக்கும், அன்பே காரணமாய் இருக்கிறது. நாட்டை காக்க, நீதியை நிலை நாட்ட  சில சமயம் மறச் செயல்களும் வேண்டி இருக்கிறது. அந்த  வீர செயல்களுக்கும் அன்பே காரணமாய் இருக்கிறது.


அன்பு, அறம் , அறம் அல்லாதது என்று பார்ப்பது இல்லை. அன்பு இவற்றை எல்லாம் கடந்தது.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலர்
அன்பே சிவமானது அறிகிலர் என்பார் திருமூலர்.

அன்புதான் சிவம்.

பரிமேல் அழகர் சொன்னது ஒரு பாதுகாப்பான உரை. யாரும் அதை மறுக்க முடியாது.

இருப்பினினும், வள்ளுவர் அதையும் தாண்டி ஏதோ சொல்ல வருகிறார் என்றுதான் எனக்குப் படுகிறது.  எனக்கு  என்னவோ அறம் கூட அன்புக்கு அடுத்தபடிதான் என்று வள்ளுவர் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது.

ஒரு அப்பாவியை சில பேர் கொலை செய்ய விரட்டி வருகிறார்கள். உங்களுக்குத் தெரியும் அவன் எங்கே மறைந்து இருக்கிறான் என்று. பொய் சொல்லாமல்  அவனை காட்டிக் கொடுத்தால் நீங்கள் அற வழியில் நிற்பவர்கள் ஆவீர்கள்.

ஆனால், அவன் மேல் இரக்கப்பட்டு , கருணையோடு, அன்போடு அவனை காட்டிக் கொடுக்காமல் அவன் இருக்கும் இடம் தெரியாது என்று அற வழி பிரண்டு  பொய் சொல்லி அவன் உயிரை காப்பாற்றினால், அந்த மறத்திற்கும் அன்பே காரணம்.

அறம் முக்கியமா ? அன்பு முக்கியமா ?

நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். வேறு ஏதாவது புதிய அர்த்தம் தோன்றினால், பகிர்ந்து கொள்ளுங்கள்.


பிரகலாதன் - நஞ்சு அமுதாகி

பிரகலாதன் - நஞ்சு அமுதாகி 


இரணியன் தன் வீரர்களிடம் பாம்புகளை விட்டு பிரகலாதனை கடிக்க விடச் சொன்னான்.

அந்த பாம்புகளும் அவனை கடித்தன.

அந்த பாம்புகள் எப்படி பட்டவை , எப்படி கடித்தன ?

மேகம் போல் கறுத்த கறை படிந்த பற்கள். அவனை கடித்தவுடன் அவைகளுக்கு பல் எல்லாம் கொட்டி போயிற்று. அவற்றின் வாயில் இருந்து நஞ்சுக்குப் பதில் அமுதம் வழிந்தது.

பாடல்

'பக்கம் நின்றவை பயத்தினின் புயற் கறைப் பசும் புனல் பகு வாயின்
கக்க, வெஞ் சிறைக் கலுழனும் நடுக்குற, கவ்விய காலத்துள்,
செக்கர் மேகத்துச் சிறு பிறை நுழைந்தன செய்கைய, வலி சிந்தி
உக்க, பற் குலம்; ஒழுகின, எயிற்று இரும் புரைதொறும் அமிழ்து ஊறி.


பொருள் 

Wednesday, June 12, 2013

திருக்குறள் - செல்வம் சேமித்து வைக்கும் இடம்

திருக்குறள் - செல்வம் சேமித்து வைக்கும் இடம் 


பணத்தை எங்கே போட்டு வைக்கலாம் ? வங்கியில், கம்பெனி முதலீட்டில் (shares ), தங்க நகைகளில், நிலத்தில், வீட்டில் என்று பல இடங்களில் பணத்தை முதலீடு செய்யலாம்.

வள்ளுவர் சொல்கிறார் , பணத்தை எங்கே முதலீடு செய்ய வேண்டும் என்று.

ஏழைகளின் வயிற்றில் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமாம்.

முதலில் பாடலைப் பார்ப்போம்,

பாடல்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

பொருள்


பிரகலாதன் - துடித்திலன், திருப் பெயர் மறவாதான்

பிரகலாதன் - துடித்திலன், திருப் பெயர் மறவாதான்


பிரகலாதனை தூக்கி தீயில் போடுங்கள் என்றான் இரணியன்.

அந்தத் தீ அவனை சுடவில்லை. மாறாக குளிர்ந்தது.

இரணியனின் வீரர்கள் , "உன் மகனை தீ சுடவில்லை , அடுத்து என்ன செய்வது " என்று கேட்டார்கள்.

இரணியனுக்கு பயங்கர கோபம் ?

முதலில் அந்த "அக்னி தேவனை கையை காலை கட்டி சிறையில் தள்ளுங்கள் , அந்த பிரகலாதனை சிறையில் தள்ளி நஞ்சு கொண்ட பாம்புகளை கொண்டு கடிக்க விடுங்கள்"  என்று ஆணையிட்டான்

ஆணவம் எப்படி கண்ணை மறைக்கிறது. பெத்த பிள்ளையை கொல்லத் தூண்டுகிறது.

இரணியன் நினைத்த மாத்திரத்தில் அனந்தன் முதலிய பாம்புகள் வந்து நின்றன. "அவனைப்  போய் கடியுங்கள் " என்று அவற்றை ஏவினான்.

அந்த பாம்புகளும் அவற்றின் பல் பதியும் படி கடித்தன.

பிரகலாதன் - பயந்தானா ? வலியால் துடித்தானா ? அவன் முகம் மாறியதா ?

கம்பன் மட்டுமே சொல்ல முடியும் அதை. பாடலைப் படியுங்கள்

பாடல்


அனந்தனே முதலாகிய நாகங்கள்,  "அருள் என்கொல் ?" என, அன்னான்
நினைந்த மாத்திரத்து எய்தின, நொய்தினில்; நெருப்பு உகு பகு வாயால், 
வனைந்ததாம் அன்ன மேனியினான் தன்மேல், வாள் எயிறு உற ஊன்றி, 
சினம் தம் மீக்கொள, கடித்தன; துடித்திலன், திருப் பெயர் மறவாதான்.

பொருள் 

Tuesday, June 11, 2013

திருக்குறள் - இரக்கப்படுவது தவறு

திருக்குறள் -  இரக்கப்படுவது தவறு


என்னது ? இரக்கப் படுவது தவறா ?

இது என்ன புதுக் கதை என்று நீங்கள் வியக்கலாம்.

வள்ளுவர் அப்படிதான் சொல்லுகிறார்.

இரக்கப் படுவது தவறுதான், எது வரை என்றால் நம்மிடம் உதவி என்று கேட்டு வந்தவன் முகம் மகிழ்ச்சியாகும் வரை.

உங்களிடம் ஒருவன் பசி என்று வருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு ஒரு நாலு இட்டிலி கொடுத்தால் பசி தீரும் என்று கொள்வோம்.

ஐயோ, பாவம்...ரொம்ப பசியா இருக்கியா ..இந்தா 10 பைசா என்று அவனிடம் இரக்கப் பட்டு தருவது தவறு என்கிறார்.

அவன் முகம் இன்முகமாக வேண்டும் ... அதுவரை இரக்கப் படுங்கள். அப்படி இல்லை என்றால், உங்கள் இரக்கம் துன்பம் தருவது என்கிறார்.

இன்னா என்றால் இன்பம் அல்லாதது. அதாவது துன்பம் தருவது.

உங்களிடம் பசி என்று வந்தவனுக்கு பத்து பைசா கொடுத்துவிட்டு அவன் முகத்தை பாருங்கள். முதலில் பசி மட்டும் இருந்தது. இப்போதும் ஏமாற்றமும்இருக்கும். அது மட்டும் அல்ல, உங்கள் மேல் வெறுப்பும் , இந்த உலகின் மேல் சலிப்பும், படைத்தவன் மேல் ஒரு கோபமும் உண்டாகும்.

அவன் பசிக்கு உணவளித்துப் பாருங்கள். உங்களை வாழ்த்துவான். மனம் நிறையும்.

ஒண்ணும் இல்லாததற்கு பத்து பைசா நல்லது தானே என்று வாதம் புரியலாம். நல்லதுதான். வள்ளுவர் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அந்த இரக்கம் நன்மை பயக்காது என்கிறார்.

யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால், அவர்கள் மனம் மகிழும்படி உதவி செய்யுங்கள்.

வலியும் , ஏமாற்றமும், பயமும் கொண்ட அவர்கள் முகம் இன்முகமாக மாற வேண்டும். அதுவரை, உங்கள் இரக்கம் இன்னாததுதான்

ஒருவன் கேட்பது எல்லாம், நம்மால் கொடுக்க முடியுமா என்று கேட்டால், பிச்சை கேட்பவன் அப்படி கேட்க மாட்டான். இரப்பவன், எவ்வளவு குறைத்து கேட்க்க முடியுமோ அவ்வளவு குறைத்து கேட்ப்பான்.

உலகளந்த பெருமாளே, யாசகம் கேட்க்க வந்தபோது கூனி குறுகி வாமன உருவமாய்த் தான் வந்தான்.

கேட்பவன், கூச்சப் பட்டு மிக மிக குறைத்துத்தான் கேட்பான்.

எவ்வளவு நுண்ணிய பொருள் நிறைந்தது திருக்குறள்.

தானம் செய் என்று அறம் சொல்ல வந்த வள்ளுவர் எப்படி சொல்லுகிறார் பார்த்தீர்களா ?

அடுத்த முறை யாருக்காவது உதவி செய்யும்போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


பாடல்  

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.


பொருள்


பிரகலாதன் - குளிரும் நெருப்பு

பிரகலாதன் - குளிரும் நெருப்பு 


இதிகாசங்கள்  நம் கற்பனையின் எல்லைகளை விரிவாக்குகின்றன.

பெரிதாக சிந்திக்க வழி கோலுகின்றன. தாடகை மலைகளை தன் கொலுசில் மணிகளாக போட்டுக் கொள்வாள் என்று படிக்கும் போது நம் கற்பனை விரிகிறது....எவ்வளவு பெரிய மலை, எவ்வளவு பெரிய கொலுசு, அதை அணியும் கால் எவ்வளவு பெரிசா இருக்கும், அப்படிப்பட்ட காலை கொண்ட ஆள் எவ்வளவு பெரிசா இருப்பாள் என்று எண்ணத் தலைப் படுகிறோம்.

எண்ணமும் கற்பனையும் நம்ப முடியாத அளவுக்கு விரிவடைகின்றது. அவ்வளவு பெரிய ஆளை நாம் கற்பனை செய்யத் தலைப் படுகிறோம்.

எதற்கு இது எல்லாம் என்றால்....இறைவன் என்பவன் நம் கற்பனையின், அறிவின் எல்லைகளை தாண்டியவன்....இறைவனை பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் நம் மனமும், எண்ணமும், கற்பனையும் விரிவடைய வேண்டும். மிகப் பெரிய அளவில் விரிய வேண்டும்.

நாம் அறிந்த எல்லாவற்றையும் கடந்து சிந்திக்க பழக வேண்டும்.

நான் படித்த அறிவியலில், நான் படித்த தர்க்க (logic ) சாஸ்திரத்தில் இப்படி ஒன்று இருக்கவே முடியாது என்று சொல்லிக் கொண்டு இருக்கக்  கூடாது.

நாம் அறிந்தவை, பார்த்தவை, படித்தவை இவற்றை எல்லாம் கடந்து நமக்கு சிந்திக்க  கற்று தருகின்றன இந்த இதிகாசங்கள்.

நரசிம்மம் இவ்வளவு பெரிசா ? இரணியனுக்கு சமுத்திரம் கணுக்கால் அளவுதானா என்று சிந்திக்கும் போது உங்களை அறியாமலையே உங்கள் கற்பனையின் எல்லை விரிகிறது.

இப்படி பட்ட பாடல்களை நாளும் படிக்கு போது, ஒரு நாள் உங்கள் அறிவின் எல்லைக்கு உட்படாத ஒன்றை உங்களால் சிந்தனை பண்ணி பார்க்க முடியும், உணர முடியும்.

எனவே,  இதிகாசங்களை படியுங்கள்.

பிரகாலதனை ஆயுதங்கள் ஒன்றும் செய்ய வில்லை என்ற உடன், அவனை தீயில் எறியுங்கள் என்று ஆணை இருக்கிறான், இரணியன்......

பாடல்



'குழியில் இந்தனம் அடுக்கினர், குன்று என; குடம்தொறும் கொணர்ந்து  எண்ணெய்

இழுது நெய் சொரிந்திட்டனர்; நெருப்பு எழுந்திட்டது, விசும்பு எட்ட;
அழுது நின்றவர் அயர்வுற, ஐயனைப் பெய்தனர்; "அரி" என்று
தொழுது நின்றனன், நாயகன் தாள் இணை; குளிர்ந்தது, சுடு தீயே.

Monday, June 10, 2013

வாலி வதம் - ஈறு இல் அறம்

வாலி வதம் - ஈறு இல் அறம் 




அறத்திற்கு எல்லை கிடையாது. நாம் படித்தது, நாம் அறிந்ததுதான் அறம் என்று இறுதியாக உறுதியாக கூற முடியாது.

கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு என்று சட்டத்தின் வரைவு விசாலாமகிக் கொண்டே போவது போல அறம் பரந்து பட்டது.

இராமனுக்கு அது தெரியும். நான் அறிந்ததுதான் அறம் என்று அவன் சாதிக்க வில்லை.

விஸ்வாமித்திரன் சொல்கிறான்....

அந்தம் இல்லாத அறத்தை பார்த்து கூறுகிறேன். இவளை பார்த்து கோபம் கொண்டு கூறுகிறேன். நீ கோபப் படாமல் இப்படி சாந்தமாக நிற்பது அருளின் பாற்பட்டது அன்று. இந்த அரக்கியை கொல் என்று அந்தணன் கூறினான்.

ஒவ்வொரு வார்த்தையும் கம்பன் தேர்ந்தெடுத்து கோர்த்த கவிதை

பாடல்

'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக்
கோறி' என்று, எதிர் அந்தணன் கூறினான். 

பொருள்


வாலி வதம் - எது அறம் ?

வாலி வதம்  - எது அறம் ?


அறம் என்பது மிக நுட்பமானது.

எவ்வளவு நுட்பமானது என்றால் இராமனுக்கே அது பற்றி இரண்டு எண்ணங்கள் இருந்ததாக கம்பன் காட்டுகிறான்.

பொய் சொல்வதா அறமா என்றால் - இல்லை.

ஆனால் வள்ளுவன் சொல்லுகிறான் - பொய்மையும் வாய்மையிடத்து என்று. பொய்யும் சில சமயம் உண்மையாக மாறும். எப்போது என்றால் சந்தேகத்துக்கு இடம் இல்லாத நன்மை பயக்கும் சமயத்தில்.

தூதரையும் மாதரையும் கொல்லக்  கூடாது என்பது இராமன் கற்ற அறம் .

பெரியோர் சொல்வதை கேட்க வேண்டும் என்பதும் அவன் கற்ற அறம்.

இங்கே விஸ்வாமித்திரன் சொல்கிறான், ஒரு பெண்ணை கொல் என்று.

இராமன் என்ன செய்தாலும், என்ன செய்யாவிட்டாலும் அறம் பிறழ்ந்தவனாவான் .

என்ன செய்யாலாம் ?

இராமனே சொல்கிறான் - அறமே இல்லாவிட்டாலும், ஐயனே நீ சொல்வதை கேட்டு அதன்படி செய்வது தானே அறம் செய்யும் வழி என்கிறான்.

இராமனுக்கு அது வரை கிடைத்தது புத்தக அறிவு. குரு குலத்தில் அப்போது தான்  வந்து இருக்கிறான்.

நான் படித்தவன், எனக்கு எல்லாம் தெரியும் என்று இராமன் இறுமாப்பு கொள்ளவில்லை. "அய்யன், நீ சொல்வதே அறம் செய்யும் வழி" என்று பெரியவர்கள் சொல்வதை கேட்க்கிறான்.

பாடல்

ஐயன் அங்கு அது கேட்டு. ‘அறன் அல்லவும்
எய்தினால். ‘’அது செய்க!’’ என்று ஏவினால்.
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு’ என்றான்.


பொருள்


Sunday, June 9, 2013

கம்ப இராமாயணம் - வாலி வதம் - இன்னொரு கோணம்

கம்ப இராமாயணம் - வாலி வதம் - இன்னொரு கோணம் 


இராமன் வில் அறம் தவறுபவனா ? வாலி வதத்திற்கு முன், இராமன் முதன் முதலில் வில் எடுத்த போது நடந்தது என்ன ?

விச்வாமித்திரனுடன், அவன் வேள்வியை காக்க இராமன் கானகம் போனான்.

இவர்களை (இராமன், இலக்குவன் மற்றும் விஸ்வாமித்திரன்) கண்டவுடன் தாடகை இவர்களை கொல்ல பெரிய சூலாயுதத்தை எடுத்து ஏறிய தயாராய் நிற்கிறாள்.

விஸ்வாமித்திரன் அம்பை விடு என்று இராமனிடம் சொல்கிறான்.

மாதரையும் தூதரையும் கொல்வது  வில் அறம் அல்ல என்று இராமன் அறிவான்..

அவன் அம்பை தொடக்  கூட இல்லை.

இன்னும் சிறிது நேரம் சென்றாலும் தாடகையின் கையில் உள்ள  சூலாயுதம் அவன் உயிரை குடிக்க தயாராய் இருக்கிறது.

இருந்தும் அவன் அசையக் கூடவில்லை

பாடல்


அண்ணல் முனிவற்கு அது
   கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
   தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
   தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
   பெருந்தகை நினைந்தான்.


பொருள்


பிரகலாதன் - சொல்லும் வேலும்

பிரகலாதன் - சொல்லும் வேலும் 




பிரகலாதன் இறைவனை பற்றி மேலும் மேலும் சொல்லிக் கொண்டே போகிறான். அவன் சொல்வதை கேட்ட இரணியன் கோபம் கொண்டு அவன் வீரர்களை பார்த்து "அவனை கொல்லுங்கள் " என்கிறான். கூற்றினும் கொடிய அந்த அரக்கர்கள் பிரகலாதனை கொல்ல நினைத்து அவன் மேல் வேல்களையும், வாட்களையும், கூரிய அம்புகளையும் எய்தனர்.

அவை என்ன ஆயிற்று தெரியுமா ?

அவை பிரகலாதனுக்கு ஒரு தீங்கும் விளைவிக்க வில்லை என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது ?

எறிந்ததோ கொடிய அரக்கர்கள்.

எறியப்பட்டதோ கூரிய ஆயுதங்கள்.

எப்படி இன்னல் விளைவிக்காமல் இருக்கும் ? அதை சொல்ல வந்த கம்பன் ஒரு உதாரணம் சொல்லுகிறான்.

அந்த ஆயுதங்கள் பகைவர்கள் நம் மேல் வீசும் கொடிய வார்த்தைகள் போல பயனற்று போயின என்றான்.

நம் எதிரிகள் நம் எதிரில் நின்று எவ்வளவு கொடிய சொற்களை நம் மீது கூறினாலும் அது எப்படி நம்மை பாதிக்காதோ அப்படி ஆயிற்று என்கிறான் கம்பன்.

பாடல்


'தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்தன்னை, அத் தவம் எனும் தகவு இல்லோர்
"ஏ" என் மாத்திரத்து எய்தன, எறிந்தன, எறிதொறும் எறிதோறும், -
தூயவன்தனைத் துணை என உடைய அவ் ஒருவனைத் துன்னாதார்
வாயின் வைதன ஒத்தன - அத்துணை மழுவொடு கொலை வாளும்.

பொருள் 

Saturday, June 8, 2013

பிரகலாதன் - இறை உணர்வு - கடல் கரை ஏற

பிரகலாதன் - இறை உணர்வு - கடல் கரை ஏற 


கடலை நீந்தி கடக்க முடியுமா ?

முடியும் என்கிறான் பிரகலாதன்.

பிறவி என்ற பெருங்கடல். அந்த பெருங்கடலை நீந்தி கரை ஏறி நிற்பார்கள்.

யார் ?

அவனுடைய அருமையும், பெருமையும் அறிந்தவர்.

அவன் என்றால் யார் ?

அவன் தான் நாம் செய்யும் எல்லா வினைகளும், அவற்றின் பலன்களும், அந்த பலன்களை உயிர்களுக்கு தரும் தலைவனும், தானே எல்லாமாகி நின்றவன்.

அவனுடைய அருமையும், பெருமையும் அறிந்தவர் இம்மை, மறுமை என்று சொல்லும் இந்த பிறவி பெருங்கடலை கடந்து கரை ஏறி நிற்பர்.

பாடல்


' "கருமமும், கருமத்தின் பயனும், கண்ணிய
தரு முதல் தலைவனும், தானும், தான்; அவன்
அருமையும் பெருமையும் அறிவரேல் அவர்,
இருமை என்று உரைசெயும் கடல்நின்று ஏறுவார். 


பொருள் 


திருக்குறள் - உயரும் வழி

திருக்குறள் - உயரும் வழி 


வாழ்க்கையில் உயர வேண்டும் என்று விரும்பாத ஆள் யார் ? எல்லா உயிர்களும் உயர்வையே விரும்புகின்றன.

நிறைய படிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், நல்ல புகழ் பெற வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள்.

ஆனால் இந்த படிப்பு, பணம்,புகழ் எல்லாம் எப்படி வரும் ?

ஒரு நாள் இந்த கேள்வியை ஒரு மாணவன் திருவள்ளுவரிடம் கேட்டான்.

வள்ளுவர்: வா, நாம் அப்படி நடந்து கொண்டே இதை பற்றி பேசுவோம் என்றார்

இருவரும் அப்படியே நடந்து போய் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே அவர்கள் ஒரு குளத்தை கண்டார்கள். அதில் கொஞ்சம் தாமரை, அல்லி மலர்கள் இருந்தன.

வள்ளுவர்: தம்பி, இந்த குளம் எவ்வளவு ஆழம் இருக்கும் ?

மாணவன்: ஐயா ஒரு பத்து பதினைந்து அடி இருக்கும்.

வ: அப்படி என்றால் இந்த தாமரை செடிகளின் உயரம் எவ்வளவு இருக்கும் ?

மா: ஐயா, அதுவும் பத்து பதினைந்து அடி தான் இருக்கும்.

வ: சரி, இந்த தாமரையை இன்னும் கொஞ்சம் உயரமாக ஆக்க வேண்டும் என்றால் என்ன செய்யணும் ?

மா: ஐயா, தாமரை கொடி போன்றது. அதை கொஞ்சம் மேலே தூக்கி, ஒரு கம்பில்  கட்டி வைத்து விட்டால் அதை பற்றிக் கொண்டு அது வளர்ந்து உயரமாகி விடும்


வ: சிரித்துக் கொண்டே, சரி, செய்து பார் என்றார்.

மாணவனும் குளத்தில் இறங்கி ஒரு தாமரை மலரை பிடித்து கொஞ்சம் லேசாக இழுத்தான்...அது கையோடு அறுந்து வந்து விட்டது. அதை தூக்கி குளத்தில் எறிந்து விட்டு, இன்னொரு பூவை அதே போல் சிறிது எச்சரிக்கையோடு இழுத்தான் . அதுவும் அதே போல் அறுந்து வந்து விட்டது.

மா: ஐயா, இது சரி வரவில்லை. நாளை இது பற்றி யோசித்து வந்து சொல்லுகிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டான்


மறு நாள், இருவரும் அதே குளத்திற்கு சென்றார்கள்.

முதல் நாள் பெய்த மழையில் குளத்தில் நாலைந்து அடி நீர் ஏறி இருந்தது. மலர்கள் எல்லாம்  அவ்வளவு தூரம் உயர்ந்து இருந்தது.

மாணவன் வள்ளுவரைப்  பார்த்தான்.

வள்ளுவர் அவனைப் பார்த்து சிரித்தார்.

தம்பி, நீர் எந்த அளவு இருக்கிறதோ, அந்த அளவு தான் பூக்களின் உயரம் இருக்கும்.

மனிதனை இரண்டாக பிரித்துக் கொள்.

அகம். புறம் என்று .

அகம் எவ்வளவு வளர்கிறதோ, அந்த அளவுதான் புறம் வளரும்.

அகம் என்றால் - மனம். உன் மனம் எந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறதோ அந்த அளவுதான் உன் வாழ்க்கையின் வளர்ச்சி இருக்கும்..

நிறைய பேர் உயர்வு பெற்றோர் மூலம், உறவினர் மூலம், நண்பர்கள் மூலம், இப்படி எங்கிருந்தோ வெளியில் இருந்து வருகிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உயர்வு வெளியில் இருந்து வராது.

உள்ளத்தில் இருந்து வர வேண்டும்.

மனம் உயர, வாழ்வு உயரும்.

அக வாழ்க்கை உயர, புற வாழக்கை உயரும். 

பாடல்

வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
முள்ளத் தனைய துயர்வு

பொருள் 

வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனைய உயர்வு.



Friday, June 7, 2013

அபிராமி அந்தாதி - சிந்துர வண்ணப் பெண்ணே

அபிராமி அந்தாதி - சிந்துர வண்ணப் பெண்ணே 


என் தலையில் இருப்பது எப்போதும் உன் பொன் போன்ற திருவடிகளே.

என் சிந்தனையில் எப்போதும் நிலைத்து இருப்பது உன் திரு மந்திரமே

சிவந்த பெண்ணே

உன்னுடைய அடியார்களுடன் கூடி முறையாக நான் பண்ணியது உன்னுடைய பரம ஆகம பக்தியே.

பாடல்


சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே 
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.- 
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே 
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

பொருள்


பிரகலாதன் - இறை உணர்வு - உணரத் தேயுமோ ?

பிரகலாதன் - இறை உணர்வு - உணரத் தேயுமோ ?




' "மூவகை உலகும் ஆய், குணங்கள் மூன்றும் ஆய்
யாவையும் எவரும் ஆய், எண் இல் வேறுபட்டு,
ஓவல்இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை
தேவரும் முனிவரும்உணரத் தேயுமோ ?

ஒரு பொருளை நாம் மனதால் உணர முடியும் என்றால் அது நம் மனதுக்கு உட்பட்டது. அது நம் மனதிற்குள் அடங்கி விடுகிறது. 

ஏன் எல்லாம் நம் மனதிர்குள் அடங்க வேண்டும் ? அப்படி ஒன்றும் விதி இல்லையே ?

இறைவன் நம் நினைவுக்கும் மனதுக்கும் எட்டாதவன். 

அவன் மூன்று உலகும் ஆய், மூன்று குணங்களும் ஆய், எல்லா பொருளும் ஆய், எல்லோருமாய் ஆய், கணக்கில் அடங்காத அளவு வேறு வேறு உருவாக ஆகி, நீங்குதல் இல்லாத ஒரே நிலையில் உள்ளவன். 

அவனை தேவரும், முனிவரும் மனதிற்குள் அடங்கும்படி தேய்ந்து சின்னதாக ஆகாதவன். 

' "மூவகை உலகும் ஆய், குணங்கள் மூன்றும் ஆய்
யாவையும் எவரும் ஆய், எண் இல் வேறுபட்டு, 
ஓவல்இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை
தேவரும் முனிவரும்உணரத் தேயுமோ ? 


பொருள் 

திருக்குறள் - எண்ணிய எண்ணியாங்கு எய்துப

திருக்குறள் - எண்ணிய எண்ணியாங்கு எய்துப 




எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

எண்ணியதை, அவர்கள் நினைத்தபடியே அடைவார்கள்.

யார் அடைவார்கள் ?

தாங்கள் எண்ணியதை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை உறுதியாக செய்பவர்கள்.

ஒவ்வொரு குறளும் ஏழு வார்த்தைகள். அதில் தேவை இல்லாத வார்த்தைகளை வள்ளுவர் போடுவாரா ?

இந்த குறளில் எண்ணியாங்கு என்ற வார்த்தை எதற்கு ?

எண்ணிய எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் என்று சொன்னால் என்ன தவறு வந்து விடும் ?

எண்ணியாங்கு என்ற வார்த்தை ஏதோ சொல்ல வருகிறது.

சில உதாரணங்களை பார்ப்போம்.

சில பேர் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைப்பார்கள். பணக்காரன் என்றால்  எவ்வளவு ? பெரிய பங்களா ? சில பல ஏக்கர் நிலம் ? நகை நட்டு ? பேங்க் பாலன்ஸ் ? பில் கேட்ஸ் ஐ விட பணக்காரனாக வேண்டும் .... இப்படி எது எல்லாம் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று  நினைத்தார்களோ அப்படி.

நல்லா படிக்கவேண்டும் நினைத்தால் எவ்வளவு ? பள்ளியிலேயே முதல் மாணவன் , மாநிலத்திலேயே முதல் மாணவன், இப்படி எப்படி நினைக்கிறார்களோ.

அதாவது நினைவு, கனவு, குறிக்கோள் பொத்தாம் பொதுவாக இல்லாமல் எது வேண்டும், எப்படி வேண்டும் என்று குறிப்பாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால், அதை அடைய என்ன என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது  எளிது.

திட்டமிட்டால்,, அதன் படி உறுதியாக , அதனை செயல் படுத்த வேண்டும்.

அப்படி உறுதியாக செயல் படுத்தினால், அதை அடைய முடியும்

ஒரு வார்த்தை - எவ்வளவு அர்த்தம்!

Thursday, June 6, 2013

நல்வழி - விண்டாரைக் கொண்டாடும் வீடு

நல்வழி - விண்டாரைக்  கொண்டாடும் வீடு 


அவ்வையார்.

தமிழ் இலக்கிய உலகை கலக்கிய பெண் புலவர்.

ஆணாதிக்க சமுதாயத்தில், அதிலும், ஆண் புலவர்க்கள் நிறைந்திருந்த அந்த காலத்தில் (ஏன் இந்தக் காலத்திலும் தான்) இலக்கிய உலகை தன் பாட்டால் கலக்கிய பெண்.

மிக மிக எளிமையான பாடல்கள். அர்த்த செறிவு நிறைந்த பாடல்கள். நீங்கள் உங்கள் பள்ளி நாட்களில் இதில் சிலவற்றை படித்தும்  இருக்கலாம்.

தானம் செய்யுங்கள். இந்த உடம்பு நிரந்தரம் என்று எண்ணி அதற்காக எப்போதும் உங்கள் நேரத்தையும் செல்வத்தையும் செலவழிக்காதீர்கள்.

வாழ்வில் மிகப் பெரிய வலி எது தெரியுமா - மரண வலி. மரணம் வரும் நேரம் இந்த உடல் அனுபவிக்கும் வலி. மூச்சு திணறும். இதயம் துடிக்க தவிக்கும். நாக்கு குழறும். நினவு வந்து வந்து போகும். கண் மங்கும்.

அது எல்லாவற்றிலும் பெரிய வலி. அந்த வலியில் இருந்து நீங்கள் துன்பப் படாமல் இருக்க வேண்டுமா ?

இந்த பாடலை படியுங்கள். அதில் சொன்ன மாதிரி செய்யுங்கள்.

பாடல்
 

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

பொருள்

பிரகலாதன் இறை தத்துவம் - வேறு உணர் பித்தர்

பிரகலாதன் இறை தத்துவம் - வேறு உணர் பித்தர் 


வேதங்களின் முடிந்த முடிவுகளுக்கு அப்பாற்பட்டவன் அவன்.

அவனை யார் அறிவார்கள் ?

தன்னை தான் அறிந்த வித்தகர்கள் அவனை அறிவார்கள்

வேதம் என்ன சொல்லுகிறது ?

அவன் தான் ஆதி, அவன் தான் அந்தம், அவனே எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிப்பவன் என்று வேதம் கூறுகிறது.

அப்படி அல்ல என்று சொல்லும் பித்தர்களும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பித்தர்கள் வீடு பேறு பெற மாட்டார்கள்.

பாடல்

சித்து என அரு மறைச் சிரத்தின் தேறிய
தத்துவம் அவன்; அது தம்மைத் தாம் உணர்
வித்தகர் அறிகுவர்; வேறு வேறு உணர்
பித்தரும் உளர் சிலர்; வீடு பெற்றிலார்.


பொருள் 

Wednesday, June 5, 2013

பிரகலாதன் இறை தத்துவம் - பின் இலன் முன் இலன்

பிரகலாதன் இறை தத்துவம் - பின் இலன் முன் இலன் 


பிரகலாதன் இறைவனின் தன்மைகளை பற்றி கூறிக் கொண்டு போகிறான்.

ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை ஆழமான சிந்தனை கம்பனுக்கு இருந்திருக்கிறது. இது ஒரு தனிப் பட்ட மனிதனின் சிந்தனையாக இருந்திருக்க முடியாது. அவன் இருந்த காலத்தில் இந்த கேள்விகளும், இவற்றிற்கான பல் வேறு பதில்களும் இருந்திருக்கும்.

இந்த தமிழ் சமுதாயம் எவ்வளவு ஆழமாக சிந்திருக்கிறது. சிந்தித்து சிந்தித்து சில விடைகளை கண்டிருக்கிறது.

இறை சிந்தனை அவற்றில் ஒன்று.

இந்த உலகம் எப்போது , எங்கிருந்து வந்தது ?

இந்த உலகத்திற்கு தோற்றம் இருக்கும் என்றால், அதற்கு முடிவும் இருக்கும் அல்லவா ?

தோன்றுவதற்கு முன்னால் அது எங்கே எப்படி இருந்தது ?

முடியும் என்றால், முடிந்த பின்னால் எங்கே எப்படி முடியும் ?

இந்த உலகம் தானே தோன்றவில்லை என்றால் யார் தோற்றுவித்தது ?

அப்படி யாராவது தோற்றி வித்தார்கள் என்றால் அவன் அல்லது எது எப்போது தோன்றியது ?

சரி, இந்த உலகம் தோன்றி விட்டது...அது எப்படி நிலைத்து இருக்கிறது ? ஏன் அது தோன்றிய மாதிரியே மறைந்து விடவில்லை ?

இந்த உலகம் எல்லாம் அடிப்படையில் அணுவால் ஆனது என்று அறிவியல் கண்டு சொன்னது. பின் அணு அல்ல அடிப்படை, அதற்க்கும் கீழ் சில துகள்கள் இருக்கின்றன -- எலெக்ட்ரான், ப்ரோடான் போன்ற துகள்கள் இருக்கின்றன என்று சொன்னது. பின், இல்லை அது கூட அல்ல, அதற்கும் கீழே சில துகள்கள் இருக்கின்றன போசான், குவார்க் போன்ற துகள்கள் இருக்கின்றன என்கிறது.  இப்படியே போய்  கொண்டு இருந்தால் எதில் போய் முடியும் ? ஒரு வேளை இந்த உலகம் முழுதும் ஏதோ ஒரே ஒரு பொருளால் ஆனதுதான் என்ற முடிவுக்கு வருமோ ?

இது ஒரு புறம் இருக்க, பொருள்கள் எல்லாம் சக்தியால் ஆனது என்று ஐன்ஸ்டீன் நிருபித்தார். எல்லாம் ஒரே சக்தியால் ஆனது என்பது அறிவியல் ஒப்புக்கொண்ட முடிவு. அதில் ஒரு சந்தேகமும் இல்லை.

அப்படி என்றால் அந்த சக்தி எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிறது. அந்த சக்தியால் தான் இந்த உலகம் உருவாக்கப் பட்டு இருக்கிறது. அந்த சக்தி எல்லா பொருள்களுக்கும் உள்ளேயும் இருக்கிறது, வெளியேயும் இருக்கிறது, அதுவே பொருளாகவும் இருக்கிறது. பொருள்கள் சிதைந்து மீண்டும் சக்த்தியாக மாறி விடுகின்றன. இது அறிவியலின் இன்றைய சித்தாந்தம்.

இந்த உலகம் பெரு வெடிப்பில் (Big Bang ) இருந்து வெடித்து சிதறியது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. அந்த பெரு வெடிப்புக்குப் முன்னால் என்ன நடந்தது என்றால், அதை இந்த அறிவியல் அறியவே முடியாது என்று அறிவியல் நிருபிக்கிறது. மனிதனால் நிச்சயமாக தொடக்த்திற்கு முன்னால் என்ன நடந்தது என்று அறியவே முடியாது. இது சர்வ நிச்சயம்.

இந்த கருத்தை கம்பனும் சொல்கிறான்.


இந்த பாடலைப் பாருங்கள். பாடலின் சிந்தனை வீச்சும், ஆழமும், அதுக்கு மேலே தெரியலையே என்று ஒத்துக் கொள்ளும் நேர்மையும் சிலிர்க்க வைக்கும்

பாடல்


' "தன்னுளே உலகங்கள் எவையும் தந்து, அவை -
தன்னுளே நின்று, தான் அவற்றுள் தங்குவான்,
பின் இலன் முன் இலன், ஒருவன்; பேர்கிலன்;
தொல் நிலை ஒருவரால் துணியற்பாலதோ ?


பொருள் 

Tuesday, June 4, 2013

பிரகலாதன் இறை தத்துவம் - உள்ளங்கை நெல்லிக் கனி

பிரகலாதன் இறை தத்துவம் - உள்ளங்கை நெல்லிக் கனி 


கொஞ்சம் யுத்த களத்தை விட்டு பின்னோக்கி (flash  back ) செல்வோம்.

பிரகலாதன் அவனுடைய தந்தையான இரணியனை துதிக்க மறுக்கிறான். இரணியன் கேட்கிறான் நீ வணங்கும் அந்த நாராயணன் யார் என்று ?

இரணியன் இறை தத்துவத்தை விளக்குகிறான். கிட்டத்தட்ட இருபது பாடல்கள். 

Philosophy , Theology என்று கம்பன் பின்னுகிறான். இறை தத்துவத்தின் உச்சியை தொடுகிறான்.

அதிலிருந்து சில பாடல்கள் 


விதை இல்லாமல் மரம் இல்லை. அரசனே, நீ மயக்கம்  (prejudice ) கொள்ளாமல் கேட்டால்,, உள்ளங்கை நெல்லிக் கனி போல இதை நீயே காணலாம் என்று இறை தன்மையை விளக்குகிறான்.  

பாடல் 

"வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை; வேந்த! நின்
பித்து இன்றி உணர்தியேல், அளவைப் பெய்குவேன்;
'உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தற்பாற்று' எனா,
கைத்து ஒன்று நெல்லிஅம் கனியின் காண்டியால்.

பொருள் 

Monday, June 3, 2013

திருக்குறள் - புல்லறிவாண்மை

திருக்குறள் - புல்லறிவாண்மை 


அது என்ன புல்லறிவாண்மை ?

புல்லிய அறிவை ஆள்தல்.

கொஞ்சம் போல படித்துவிட்டு மேதாவி போல காட்டிக் கொள்வது. அறிவின்மை என்பது வேறு. ஏதோ மேல் போக்காக படித்து விட்டு கற்றறிந்த பண்டிதர் போல பேசுவது புல்லறிவாண்மை.

இப்படி பட்ட ஆட்களை வள்ளுவர் ரொம்பதான் கிண்டல் அடிக்கிறார்.

இந்த மாதிரி ஆட்கள் தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ளும் தீமை இருக்கிறதே, அதை அவர்களின்   எதிரிகள் கூட செய்ய முடியாது என்கிறார் .

அதாவது ஒரு எதிரி எவ்வளவு ஒருவனுக்கு தீமை செய்வானோ அதை விட அதிகமான தீமைகளை இந்த அரை வேக்காடுகள் தங்களுக்கு தாங்களே செய்து கொள்வார்கள் என்கிறார்.

பாடல்

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

பொருள்


இரணியன் வதம் - நரசிங்கத்தின் கோர தாண்டவம்

இரணியன் வதம் - நரசிங்கத்தின் கோர தாண்டவம் 


நரசிங்கப் பெருமாள் களத்தில் இறங்கி விட்டார். அரக்கர்களை பின்னி பெடல் எடுக்கிறார்.

சின்ன பையன்கள் தங்களுக்கு பிடித்த கதா நாயகர்களின் வீர சாகசங்களை எப்படி ஒரு உற்சாகத்தோடு சொல்லுவார்களோ அப்படி ஒரு குதூகலத்தோடு சொல்லுகிறான் கம்பன்.

சில பேரை வாயில் போட்டு கடிக்கும், சில பேரை கையில் அப்படியே பிசைந்து  கொல்லும். இன்னும் கொஞ்ச பேரை அப்படியே தூக்கி மலை மேல் மோதிக் கொல்லும் . இன்னும் கொஞ்ச பேரை அப்படியே தண்ணீருக்குள் முக்கி கொல்லும். சில பேரை தூக்கி தீயில் அப்படியே வாட்டும்......

பாடல்

'பேருடை அவுணர்தம்மைப் பிறை எயிற்று அடக்கும்; பேரா,
பாரிடைத் தேய்க்கும்; மீளப் பகிரண்டத்து அடிக்கும்;  பற்றி,
மேருவில் புடைக்கும்; மாள, விரல்களின் பிசையும்; வேலை
நீரிடைக் குமிழி ஊட்டும்; நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்;

பொருள்


Sunday, June 2, 2013

திருக்குறள் - கனியும் காயும்

திருக்குறள் - கனியும் காயும் 


இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

நாம் பேசுவதற்கு முன்னால் நம்மிடம் இரண்டு வாய்ப்பு இருக்கிறது.

இனிய சொல் பேசலாம். அல்லது இனிமை இல்லாத சொல் பேசலாம்.

எதை பேசுவது என்பது நம் முடிவில் இருக்கிறது.

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனி இருப்ப காய் கவர்ந்தற்று 

நல்ல இனிய சொற்கள் இருக்கும்போது அதை விட்டு விட்டு இனிமை இல்லாத சொற்களை பேசுவது கனி இருக்கும் போது அதை விடுத்து காயை உண்ணுவது போல என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவர் இவ்வளவு குறைவாக சொல்பவர் அல்லவே. இதில் இன்னும் ஏதோ இருக்க வேண்டும்.

ஆழ்ந்து சிந்தித்துப் பாப்போம்.

கவர்தல் என்ற சொல்லுக்கு - கவர்ச்சி உடையது என்று ஒரு பொருள். அந்த இடம் என்னை  ரொம்ப கவர்ந்து விட்டது என்று கூறக் கேட்டு இருக்கிறோம். அந்த பெண் ரொம்ப கவர்ச்சியாக உடை அணிந்து இருக்கிறாள் என்று கூறுவது போல. சிலருக்கு இன்னாத சொற்களின் மேல் ஒரு கவர்ச்சி. தீய சொற்கள், கேட்ட சொற்கள், பயன் தராத சொற்கள், இனிமை இல்லாத சொற்கள் பால் கவர்ச்சி. இனிய சொற்கள் பால் நாட்டம் கொள்ள வேண்டும்.

இரண்டாவது

கவர்தல் என்றால் கவர்ந்து கொள்ளுதல், பறித்தல் என்று பொருள் உண்டு. கவர்ந்து சென்று விட்டான் என்று சொல்லுகிறோம் அல்லவா ? நல்ல இனிய சொற்கள் இருக்கும் போது இன்னாத சொற்களை திருடிக் கொண்டு வருவது எவ்வளவு மடமையான செயல்

திருடுவதே குற்றம். அதிலும் தேவை இல்லாத ஒன்றை திருடுவது எவ்வவளவு மடமை...அந்த அளவு மடமை இனிய உளவாக இன்னாத கூறல்.

இனிய சொல் என்றால் புரிகிறது. அது என்ன இன்னாத சொல் ? இன்னாத என்றால் துன்பம் தரும் சொல், தீமை தரும் சொற்கள்.

வேறு வழியில்லாமல் ஒரு கெட்ட காரியத்தை செய்து விட்டால் அது மன்னிக்கப் படலாம். நல்ல காரிய செய்ய ஒரு வழி இருந்தும் அதை விடுத்து கெட்ட காரியம் செய்தால் அது தண்டனைக்கு உரியதுதானே ?

இனிய சொற்கள் இருக்கின்றன. "இனிய உளவாக". வேண்டும் என்றால் இனிய சொற்களை  சொல்லலாம். இனிய சொற்கள் இல்லை என்றால் அது வேறு விஷயம். இனிய உளவாக இன்னாத கூறல் ?

இனிய சொல், இன்னாத சொல்
கனி, காய்.
கூறுதல், கவர்தல்.

காய் கடினமானது. கனி மென்மையானது.

காயை உண்பது என்றால் கத்தியால் வெட்டி , சிறு சிறு துண்டுகள் ஆக்கித்தான் உண்ண முடியும். கனியை எளிதாக அப்படியே உண்ணமுடியும்.

காயை அதிகம் உண்ண முடியாது. கனிகளை வேண்டும் வரை உண்ணலாம்.

உண்ட பின்னும் காய் செரிமானம் ஆக நேரம் பிடிக்கும். கனி உடலுக்கு இதம் தரும்.

காய் புளிக்கும், துவர்க்கும், கசக்கும்....பொதுவாகவே எல்லா கனிகளும் இனிப்பாக சுவை நிறைந்ததாய் இருக்கும்.

காயை விட கனி பார்க்கவும் அழகாக இருக்கும்.

இறைவனுக்கு கனிகளை படைக்கிறோம்.

உடல் நிலை சரி இல்லாதவர்களை காண போகும்போது  கனிகள் வாங்கிச் செல்கிறோம். உடலுக்கும் மனதுக்கும் இதம் தருவது  கனி என்பதால். நோயை குணமாக்கி உடலுக்கு ஆரோக்கியம் தரும் - கனி.

யோசித்து யோசித்து எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

இரணியன் வதம் - தாயை போன்ற கருணையுடன்

இரணியன் வதம் - தாயை போன்ற கருணையுடன் 


ஒரு தாய் எவ்வளவு கருணையுடன் அவள் கருவை சுமக்கிறாள். வரப் போவது ஆணா , பெண்ணா, கருப்பா சிவப்பா, உயரமா, குள்ளமா என்று ஒன்றும் தெரியாது. இருந்தாலும், அந்த பிறக்காத உயிர் மேலும் அவள் அளவற்ற அன்புடன் தன உதிரத்தை தந்து வளர்கிறாள்.

கடினமாக இருக்கிறது என்று அவள் குறை மாதத்தில் குழந்தையை வெளியே தள்ளி விடுவதில்லை. தகுந்த காலம் வரை, தன் வயிற்றில் வைத்திருந்து பின் பிறப்பிக்கிறாள்.

அது போல், அந்த நரசிம்மம், நல்லவர்களை கருணையோடு ஒரு தாயை போல வைத்திருந்து தந்தது.

பாடல்

'நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ, கேடு ? நான்முகத்தோன் ஆதி
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும் துறந்திலோரை,
அன்வயித்து, ஓரும் தீய அவுணர் அல்லாரை, அந் நாள், 
தன் வயிற்றகத்து வைத்துத் தந்தது, அச் சீயம், தாயின்.

பொருள் 

Saturday, June 1, 2013

திருக்குறள் - அறிவின் பயன்

திருக்குறள் - அறிவின் பயன் 


முந்தைய ப்ளாகில் இல்லாதவற்றுள் எல்லாம் பெரிய இல்லாமை அறிவு இல்லாமையே என்றும், மற்ற இல்லாமைகளை இந்த உலகம் பெரிதாக கொள்ளாது என்றும் பார்த்தோம்.

அறிவை விட அருள், அன்பு முக்கியமில்லையா ? எல்லோரும் அறிவு உள்ளவர்களாய் இருப்பது என்பது கடினம். ஆனால், எல்லோரும் மற்றவர்கள் மேல் அன்பு கொண்டவர்களாய் இருக்க வேண்டும் அல்லவா ?

அறிவை விட அன்பு முக்கியம் இல்லையா ? ஏன் வள்ளுவர் அறிவில்லாமையை பெரிதாக சொல்கிறார் ? அன்புடைமை பற்றி ஏன் அவ்வளவு சொல்லவில்லை என்று கேள்வி எழலாம்.

வள்ளுவர் சாதாரண மனிதர் அல்ல.

ஒரு விஷயத்தை சொல்லுமுன் எவ்வளவு யோசித்து இருப்பார் ?

அறிவு என்றால் என்ன ? What is intelligence  ? அறிவு என்பதற்கு வள்ளுவர் சில இலக்கணங்களை தருகிறார்.

அதில் முக்கியமான ஒன்று அறிவு மற்ற உயிர்களை தன் உயிர் போல நினைக்கும்.

அறிவினால் அவ்வது என்ன ? மற்றதன் நோயையை தன் நோய் போல நினைக்காவிட்டால் ?

பாடல்

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை.


பொருள்

இரணியன் வதம் - சொல்லாமல் சொன்னது

இரணியன் வதம்  - சொல்லாமல் சொன்னது 



நரசிங்கத்தின் உக்கிரமான அழகை சொல்லி முடியவில்லை கம்பனுக்கு. மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டே போகிறான். என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை அவனுக்கு.

கம்பனுக்கு நெஞ்சு விம்முகிறது. மூச்சு முட்டுகிறது. வார்த்தைகள் கை கட்டி வாய் மூடி சேவகம் செய்யும் கம்பனுக்கே நரசிமத்தை வார்த்தையில் வடிக்க முடியவில்லை.

"அம்மா" என்று  அரற்றுகிறான்.

தான் காணாத, தனக்குத் தெரியாத ஒன்றை சொல்லி அதுக்கும் மேலே என்று சொல்லுகிறான். மொத்தத்தில் ஒரு உன்மத்தம் பிடித்தவன் போல ஆகி விட்டான்.

உலகின் முடிவில் ஊழித் தீ என்று ஒன்று வரும்.. அது எல்லாவறையும் எரித்து விடும் என்பது இந்து மத நம்பிக்கை.

அந்த ஊழித் தீயை அவித்து  விடும் அளவிற்கு உக்கிரமாய் அந்த நரசிம்மம் தோன்றியது. அந்த ஊழித் தீயை தூண்டும் ஊழிக் காற்று. அந்த காற்றையும் மாற்றி போடும் அளவிற்கு ஆக்ரோஷமாய் நரசிம்மம் வந்தது.  

பாடல்

'முடங்கு வால் உளை அவ் அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும்
கடம் கொள் வெங் காலச் செந் தீஅதனை வந்து  அவிக்கும்; கால
மடங்கலின் உயிர்ப்பும், மற்று அக் காற்றினை மாற்றும்; ஆனால்,
அடங்கலும் பகு வாய் யாக்கை அப் புறத்து அகத்தது அம்மா !

பொருள்