Sunday, January 19, 2014

கந்தர் அநுபூதி - தணியாத மோகம்

கந்தர் அநுபூதி - தணியாத மோகம் 


திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

முருகனுக்கு வள்ளி மேல் அவ்வளவு மோகம்.

மோகம் எப்போதும் தணிந்து போகும். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்களே அது போல. நாள் ஆக நாள் ஆக மனம் சலிக்கும், உடல் சலிக்கும்.

ஆனால் முருகனுக்கு வள்ளி மேல் "தணியாத மோகம்"

அதுவும் எப்படி பட்ட மோகம் ? அதி மோகம். அளவுக்கு அதிகமான தீராத மோகம்.

அந்த மோகத்தில் அவன் என்ன செய்கிறான் ?

வள்ளியின் பாதத்தை பிடித்துக் கொள்கிறான். பிடித்துக் கொள்வது மட்டும் அல்ல, அவள் பாதங்களை பணிகிறான்.

பணிந்து, "சொல்லு, நான் என்ன செய்ய வேண்டும்" என்று  கெஞ்சுகிறான்.

 "நீ என்ன சொன்னாலும் செய்கிறேன், எனக்கு இட்ட கட்டளை என்ன " என்று அவள் பாதங்களை  பணிந்து வேண்டுகிறான்.

அவன் கொண்டது காதல் மட்டும் அல்ல...மோகம் மட்டும் அல்ல...கருணையும் கூட.  "தயாபரனே" என்கிறார் அருணகிரி.

காதலும் கருணையும் கலந்தது அவன் மனம்.

ஒரு புறம் அவள் மேல் மோகம்.

இன்னொரு புறம் அவள் மேல் கருணை. பாவம், இந்த பொண்ணு என்னை நம்பி வந்து  இருக்கிறாள். இவளை நான் காக்க வில்லை என்றால் வேறு யார் காப்பார்கள் என்று  அவள் மேல் கருணை.

அவ்வளவு கருணை உள்ள நீ, உன் பாதத் தாமரையை கல் போன்ற என் மனத்திலும்  பூக்க வைக்க மாட்டாயா என்று உருகுகிறார் அருணகிரி.

"திணியான மனோ சிலை"

திணி என்றால் கடினமான என்று பொருள்.

மனோ என்றால் மனம்
சிலை என்றால் கல்

கல்லு போல கடினமான மனம்.

கல்லில் எங்காவது பூ பூக்குமா ?

பூக்காது, அதற்கு என்ன செய்ய முடியும். அவன் திருவடிகள் தாமரை போல மென்மையாக  இருக்கிறது. என் மனமோ கல்லு போல கடினமாக இருக்கிறது.

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி பிறிதோர் இடத்தில்

நான் என் மனதை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அவன்  நினைத்தால் அவன் திருவடித் தாமரை என் மனத்திலும் பூக்கும்.

ஏன் என்றால் அவன் கருணை உள்ளவன்.

வள்ளிக்காக அவள் பாதத்தை பிடித்தவன்.

எனக்காக இதைச் செய்யக் கூடாதா என்று கேட்கிறார் அருணகிரி.


பொருள்

திணியான = கடினமான
மனோ = மனம்
சிலை மீது = கல் மீது
உனதாள் = உனது தாள் = உனது பாதங்கள்
அணியார் = அழகான
அரவிந்தம்  = தாமரை
அரும்பு  மதோ = மொட்டு மலருமா ?
பணியா?  = எனக்கு இட்ட பணி  எது
என = என
வள்ளி பதம் பணியும் = வள்ளியின் பாதங்களை பணியும்
தணியா = தணியாத, எப்போதும் உள்ள
அதிமோக = அதிக மோகத்தை கொண்ட
 தயா பரனே.= கருணை கொண்டவனே


1 comment:

  1. மிக சுவாரசியமான பாடல். பெண் மீது மோகம் வந்து விட்டால், அவள் காலை முருகப் பெருமான் கூடப் பிடிக்கத் தயாராகி விடுகிறார்!

    ReplyDelete