Tuesday, January 28, 2014

திருவாசகம் - இறைவன் கருணை வேண்டாம்

திருவாசகம் - இறைவன் கருணை வேண்டாம் 


மனித மனம் விசித்திரமானது. 

நல்லது என்று தெரிந்தும் அதை நாடாமல், கெட்டது என்று தெரிந்தும் சிலவற்றின் பின்னால் போகிறது. 

ரொம்ப பெரிய விஷயங்களுக்கு எல்லாம் போக வேண்டாம். 

நம் நடை முறை வாழ்க்கையை பார்ப்போம்....

இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் , காப்பி, டீ , ஐஸ் கிரீம் இது எல்லாம் உடலுக்கு கெடுதல் என்று தெரியும். விடுகிறோமா? 

பச்சை காய் கறிகள், பழங்கள் நல்லது என்று தெரியும், அதைத் தோடுகிரோமா ? இல்லையே 

இறை  உணர்வுக்கும்,உலக வாழ்க்கைக்கும் இடையில் கிடந்து  போராடுகிறோம்.

நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் கிடந்து  அலைகிறோம் .  

கெட்டதை விட  முடியவில்லை.

நல்லதை நோக்கி போக முடியவில்லை. 

வாழக்கை ஒரு முடிவில்லா போராட்டமாக இருக்கிறது. 

நமக்கு மட்டும் இல்லை, மாணிக்க  வாசகருக்கும்.

இறைவன் தன் கருணையைத் தருகிறான். அது வேண்டாம் என்று விட்டு விட்டு , உலக இன்பங்களின் பால் அலையும் என்னை கை விட்டு விடாதே என்று இறைவனை கெஞ்சுகிறார் மணிவாசகர். 

பாடல் 


வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.


பொருள் 

வளர்கின்ற நின் கருணைக் = இறைவனின் கருணை நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

கையில் வாங்கவும் நீங்கி = கையில் வாங்கினேன், பின் அதை விட்டு விட்டு நீங்கினேன். வேண்டாம் என்று விட்டு விட்டு ஓடினேன் 

இப்பால் = இந்தப் பக்கம் 

மிளிர்கின்ற என்னை = உலக இன்பங்களில் திளைத்து மகிழ்ந்து இருக்கின்ற என்னை 

விடுதி கண்டாய்? = கை விட்டு விடாதே 

வெண் மதிக் கொழுந்து ஒன்று = சிவனின் தலையில் பிறைச் சந்திரன் இருக்கிறது. அது ஒரு கீற்று. அதைப் பார்க்க ஏதோ ஒரு மரத்தின்  தளிர் போல இருக்கிறதாம். கொழுந்து என்றால் இளம் தளிர். 

ஒளிர்கின்ற நீள் முடி = ஒளி பொருந்திய நீண்ட மூடி கொண்ட 

உத்தரகோசமங்கைக்கு அரசே = திரு உத்தர கோசை என்ற ஊருக்கு அரசனே 

தெளிகின்ற பொன்னும்  மின்னும் = சிறந்த பொன்னைப் போல மின்னும் 

அன்ன தோற்றச் செழும் சுடரே = தோற்றம் கொண்ட சுடர் விடும் ஒளியை போன்ற தோற்றம் கொண்டவனே 

Maanikka Vaasgar brings out the struggle between spiritual life and materialistic life in every one of us. 



No comments:

Post a Comment