Wednesday, January 29, 2014

இராமாயணம் - வயிற்றிடைவாயினர்

இராமாயணம் - வயிற்றிடைவாயினர்


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள்.

அவளைச் சுற்றி அரக்கியர் காவல் இருக்கின்றனர்.

அந்த அரக்கியர் எப்படி இருப்பார்கள் ? கம்பன் சொல்லுகிறான்...

"வாய் வயிற்றில் இருக்கும். நெற்றி வளைந்து இருக்கும். கண்கள் இரண்டும் ஏதோ குழ போல இருக்கும். கொடிய பார்வை. அவர்களின் பற்களுக்கு இடையே யானை, பேய், யாளி போன்றவை படுத்து உறங்கும். குகை போல பெரிய வாய்"

பாடல்

வயிற்றிடைவாயினர்; வளைந்த நெற்றியில் 
குயிற்றியவிழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்குஇடை இடை, யானை, யாளி, பேய்,
துயில் கொள்வெம் பிலன் என, தொட்ட வாயினர்.

பொருள்


வயிற்றிடைவாயினர் = வாய் வயிற்றிக்கு இடையில் இருக்கும். அப்படி என்றால் என்ன அர்த்தம். வாயும் வயிறும் ஒன்றாக இருக்கும். எந்நேரமும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பர்கள். வாயில் போட்டு, மென்று தின்று, அது வயிற்றிற்கு போவதற்கு நேரம் ஆகும். வாயை வயிற்றில் வைத்து விட்டால் எப்படி இருக்கும் ? அரக்கியர் என்பவர் பெரும் தீனி தின்பவர்கள். அல்லது, பெரும் தீனி தின்பவர்கள் அரக்கர்கள்.

ஒரு படி மேலே போவோம். அரக்கர் என்பவர் புலன்களால் செலுத்தப் படுபவர்கள். சாப்பாட்டைக் கண்டால் உடனே அதை தின்ன வேண்டும்.

அழகான பெண்ணைக் கண்டால் அவளை அடைய வேண்டும், அவள் மாற்றான் மனைவியாக இருந்தாலும்.

புலன்களால் செலுத்தப் படும் யாரும் அரக்கர்/அரக்கியர் தான். 

வளைந்த நெற்றியில் = வளைந்த நெற்றியில்

குயிற்றியவிழியினர் = குழி பறித்து அதில் பதித்து வைத்ததை போன்ற கண்களைக் கொண்டவர்கள்

கொடிய நோக்கினர் = கொடூரமான பார்வை கொண்டவர்கள். கண்ணில் அருள் நோக்கம் வேண்டும்.

எயிற்றினுக்குஇடை இடை = பற்களுக்கு இடையே

யானை, யாளி, பேய் = யானை, யாளி, பேய்

துயில் கொள் = படுத்து தூங்கும்.

வெம் பிலன் என = பிலம் என்றால் குகை. வெம்பிலன் என்றால் பெரிய குகை

தொட்ட வாயினர் = போன்ற பெரிய திறந்த வாயினர். குகைக்கு ஏது கதவு. உள்ளே செல்லும் உணவுக்கும், வெளியே செல்லும் வார்த்தைகளுக்கும் ஒரு கட்டுபாடு  கிடையாது. அது அரக்க குணம்.

கம்பர் ஏதோ அரக்கர்களை சொல்லி விட்டு போகிறார் என்று நினைக்கக் கூடாது.

இந்த குணங்கள் அரக்கர்களுக்கு இருக்கும்.

இந்த குணங்கள் இருப்பர்வர்கள் அரக்கர்கள்.

நம்மில் எத்தனை அரக்கர்களோ ?



No comments:

Post a Comment