Tuesday, February 18, 2014

நீத்தல் விண்ணப்பம் - ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை

நீத்தல் விண்ணப்பம் - ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை




 நமக்கு ஒரு பொருள் சொந்தம் என்றால் அதை நாம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் அல்லவா ?

அதை அனுபவிக்கலாம், விக்கலாம், அடமானம் வைக்கலாம்...நம் இஷ்டம் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்.

தன்னையே இறைவனுக்கு கொடுத்துவிட்ட மாணிக்க வாசகர்  சொல்கிறார்.

"இனி நான் உன் பொருள். என்னை நீ ஆண்டுகொள், விற்றுக் கொள், அடமானம் வை...என்ன வேண்டுமானாலும் செய்து கொள். இந்த பிறவிப் பிணிக்கு மருந்து போன்றவனே, என்னை கை விட்டு விடாதே " என்று கெஞ்சுகிறார்.

பாடல்

இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.


பொருள் 

இருந்து என்னை = இங்கிருந்து என்னை

ஆண்டுகொள் = ஆட்கொள்

விற்றுக்கொள் = விற்றுக் கொள்

ஒற்றி வை = ஒத்தி வைப்பது என்றால் அடமானம் வைப்பது

என்னின் அல்லால் = இது போல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்

விருந்தினனேனை = விருந்து என்றால் எப்பவாவது வருவது. அடிக்கடி வருவது விருந்து அல்ல. நாம் பக்தி செய்வது, கோவிலுக்குப் போவது எல்லாம் எப்பவாவது தானே. எனவே விருந்தினேனை  என்றார்.


(இராமாயணத்தில் இராம இலக்குவனர்களை ஜனகனுக்கு அறிமுகம் செய்யும் போது "விருந்தினர்" என்று அறிமுகம் செய்வான். இவர்கள் வைகுந்தத்தில் இருப்பவர்கள். எப்பவாவது இந்தப் பக்கம் வருவார்கள் என்று அர்த்தம் தொனிக்கும் வகையில்


இருந்த குலக் குமரர்தமை, இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி,
அருந் தவனை அடி வணங்கி, 'யாரை இவர்? உரைத்திடுமின், அடிகள்!' என்ன,
'விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி காணிய வந்தார்; வில்லும் காண்பார்;

பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர்' என, அவர் தகைமை பேசலுற்றான்)


 விடுதி கண்டாய்? = விட்டு விடாதே

 மிக்க நஞ்சு = ஆலகால விஷத்தை

அமுதா அருந்தினனே= அமுதம் போல அருந்தியவனே. நான் கெட்டவன் தான். ஆனால் நீ தான் விஷத்தையே அமுதமாக ஏற்றுக் கொண்டவன் ஆயிற்றே. என்னையும் ஏற்றுக் கொள்.

 மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

மருந்தினனே = மருந்து போன்றவனே

பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே = பிறவி என்னும் பிணியில் கிடந்து உழல்பவர்கே

நோய், பிணி என்று இரண்டு சொல் உண்டு.

நோய் வந்தால் போய் விடும்.

பிணி போகாது.

பசிப் பிணி என்பார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

பிறவியும் ஒரு பிணி தான். மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். அந்த பிறவிப் பிணிக்கு மருந்து அவன்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த 
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் 
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே! 

பணியேன், ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.

என்பார் அபிராமி பட்டர்


1 comment:

  1. இந்தப் பாடல் மட்டுமன்றி, நீ சுட்டிக்காட்டிய இன்னும் இரண்டு பாடல்களால் இந்த உரை இன்னும் நன்றாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete