Sunday, February 2, 2014

திருவாசகம் - பொய்யவனேனைப் பொத்திக்கொண்ட மெய்யவனே

திருவாசகம் - பொய்யவனேனைப்  பொத்திக்கொண்ட மெய்யவனே


அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள்.

ஆலகால விஷம் வந்தது.

என்ன  செய்வது என்று தவித்தார்கள்.

சிவன் அந்த விஷத்தை தான் அருந்தி அவர்களை காப்பாற்றினான்.

இது கதை.

கதை சொல்லும் கருத்து என்ன ?

நாம் செய்யும் தவறுகளை இறைவன் தனக்குள் எடுத்து மறைத்து வைத்து நம்மை காப்பாற்றுவான். விஷத்தை தனக்குள் மறைத்து வைத்து தேவர்களையும் அசுரர்களையும்  காத்தது போல.

இதை நினைவு படுத்துகிறார் மணிவாசகர்.

நான் பொய்யானவன் தான். ஆனால் விஷத்தை எடுத்து பொத்தி வைத்துக் கொண்டதைப் போல என் பொய்களையும் பொத்தி வைத்துக் கொண்டு என் பிறவி பிணியை போக்கி அருள்வாய் என்று  வேண்டுகிறார்.


பாடல்


பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு, ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே, விட்டிடுதி கண்டாய்? விடம் உண் மிடற்று
மையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
செய்யவனே, சிவனே, சிறியேன் பவம் தீர்ப்பவனே.


பொருள் 

பொய்யவனேனைப் = பொய்யே உருவான என்னை

பொருள் என ஆண்டு = ஒரு பொருளாக மதித்து

ஒன்று பொத்திக்கொண்ட = என் தவறுகளை மறைத்து (பொத்தி வைத்து)

மெய்யவனே =  மெய்யானவனே

விட்டிடுதி கண்டாய்? = என்னை விட்டு விட மாட்டாயே

விடம் உண் மிடற்று =  நஞ்சை உண்டு உன் கழுத்தில் அதை அடக்கி அதனால் உன் கழுத்து

மையவனே = கருத்தவனே 

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = நிலைத்து இருக்கும் உத்தரகோச மங்கைக்கு அரசனே

செய்யவனே = சிவந்த உருவம் கொண்டவனே

சிவனே = மங்கலமானவனே

சிறியேன் = சிறியவனான என்னை

பவம் = பிறவிப்  பிணி

தீர்ப்பவனே = தீர்பவனே 

No comments:

Post a Comment