Friday, February 21, 2014

நீத்தல் விண்ணப்பம் - கொம்பர் இல்லா கொடி போல்

நீத்தல் விண்ணப்பம் - கொம்பர் இல்லா கொடி போல் 


 

நமக்குத் துணை யார் ?

முதலில் பெற்றோரை பற்றி இருக்கிறோம். பின் உடன் பிறப்புகள், நண்பர்கள், துணைவன்/துணைவி, பிள்ளைகள் என்று இது விரிந்து கொண்டே போகிறது.

இவர்கள் எல்லாம் நமக்கு சிறந்த பற்றுகோல்களா ? இல்லை.

அவர்களே நமக்குத் துணையாவார் யார் என்று அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆகாய விமானத்தில் இருந்து தவறி விழுந்தவன் , அவன் கூடவே விழுந்த ஒரு காகிதத்தை துணைக்கு பற்றிக் கொண்ட மாதிரி.


 ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற 
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் 
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே 
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே! 

என்பார் பட்டினத்தார்.

எது நிரந்தரமோ அதை பற்றிக் கொள்ள வேண்டும்.

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் 
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்பது அபிராமி பட்டர் வாக்கு.  அபிராமியை துணையாகக் கொண்டார் பட்டர்.


ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.

உன் அருளைப் பெற ஒரு ஆதாரமும் இல்லாமல் தவிக்கிறேன் என்றார் அருணகிரி.


பற்றிப் படர ஒரு கொழு கொம்பு இல்லா கொடி போலத் தவிக்கிறேன். என்னை கை விட்டு  விடாதே. விண்ணவர்களும் அறியாத நீ, பஞ்ச பூதங்களும் ஆனவன் நீ என்று உருகுகிறார் மணிவாசகப் பெருந்தகை.

பாடல்

கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே.

பொருள் 

கொம்பர் = பற்றி படர ஒரு கொம்பு

இல்லாக் கொடிபோல் = இல்லாத ஒரு கொடி போல

அலமந்தனன் = வழி தெரியாமல் அலைந்தேன்

 கோமளமே = இளமையானவனே

வெம்புகின்றேனை = வெம்புகின்ற என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

விண்ணவர் = தேவர்களும்

நண்ணுகில்லா = அணுக முடியாத இடத்தில்

உம்பர் = உயர்ந்த இடத்தில்
உள்ளாய் = உள்ளாய்

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

அம்பரமே = வானே

நிலனே = நிலமே

அனல் = தீயே

காலொடு = காற்றே

அப்பு = நீரே

ஆனவனே = ஆனவனே


No comments:

Post a Comment