Saturday, February 22, 2014

நீத்தல் விண்ணப்பம் - உடம்பையும், எலும்பையும் உருக்கி

நீத்தல் விண்ணப்பம் - உடம்பையும், எலும்பையும் உருக்கி 




இரண்டு யானைகள் சண்டை போடுகிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த சண்டையில் அங்கு இருக்கும் சின்ன சின்ன செடிகள் என்ன ஆகும் ?

இரண்டு அல்ல, ஐந்து யானைகள் சண்டை போடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு இருக்கும் சின்ன செடிகளின் நிலை என்ன ஆகும் ?

அது போல இந்த ஐந்து புலன்களும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. இடையில் அகப்பட்ட குறுஞ் செடிகளாக நாம் கிடந்து அல்லல் படுகிறோம்.

ஒன்று நல்ல ருசியான உணவு வேண்டும் என்கிறது.
ஒன்று உடை வேண்டும், இசை வேண்டும், வீடு வாசல் வேண்டும், உடல் சுகம் வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என்று நம்மை பாடாய் படுத்துகிறது. அவைகளுக்கு தீனி போட நாம் கிடந்து அழைக்கிறோம்.


அப்படி கிடந்து அல்லல் படும் என்னை கை விட்டு விடாதே. என் மனதினில் இன்பத்தை வார்த்தவனே, என் உடலையும், எலும்பையும் உருக்கியவனே என்று உருகுகிறார்  மணிவாசகர்.

பாடல்

ஆனை வெம் போரில், குறும் தூறு எனப் புலனால் அலைப்புண்
டேனை, எந்தாய், விட்டிடுதி கண்டாய்? வினையேன் மனத்துத்
தேனையும், பாலையும், கன்னலையும், அமுதத்தையும், ஒத்து,
ஊனையும், என்பினையும், உருக்காநின்ற ஒண்மையனே.


பொருள் 

ஆனை = யானைகள்

வெம் போரில் = ஈடுபட்ட பெரிய கொடிய போரில்

குறும் தூறு = குற்றுச் செடிகள்

எனப்  = என

புலனால் = புலன்களால்

அலைப்பு உண்டேனை = அலைக்கழிக்கப் பட்ட என்னை

எந்தாய் = என் தந்தையே

விட்டிடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

வினையேன் மனத்துத் = வினை உள்ள என் மனதில்

தேனையும் = தேனையும்

பாலையும் = பாலையும்

கன்னலையும் = கரும்பின் சாற்றையும்

அமுதத்தையும்  ஒத்து  = அமுதம் போல சேர்த்து

ஊனையும் = ஏன் உடலையும்

என்பினையும் = எலும்பையும்

 உருக்காநின்ற = உருக்கி நின்ற

ஒண்மையனே = ஒளி மயமானவனே


இறைவனை தனிமையில் சிந்தித்தால் இனிமை வரும். அந்த இனிப்புக்கு முன்னால் மற்ற இனிப்புகள் எல்லாம் கசந்து போகும்.

"....மெய் அன்பினால் மெள்ள மெள்ள உள்ள...கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து  அறக்கைத்ததுவே" என்பார் அருணகிரிநாதர்.



No comments:

Post a Comment