Friday, February 28, 2014

நீத்தல் விண்ணப்பம் - நினைப் பிரிந்த வெரு நீர்மையனை

நீத்தல் விண்ணப்பம் - நினைப் பிரிந்த வெரு நீர்மையனை 


குழந்தை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் கழித்து அதற்கு அந்த பொம்மைகளின் மேல் சலிப்பு வரும். அம்மாவை தேடும். அம்மாவைக் காணாவிட்டால் அழும். அம்மாவைக் கண்டவுடன் ஓடி சென்று அவளின் காலைக் கட்டிக்  கொள்ளும். அப்போதுதான் அதற்கு நிம்மதி, சந்தோஷம்.

குழந்தை மட்டுமா ?

நாமும் தான்.

பொம்மைகள் வேறு அவ்வளவுதான்.

நீரைப் பிரிந்த மீனைப் போல உன்னை பிரிந்து வெறுமையில் தவிக்கிறேன்.  பொங்கி வரும் கங்கை நீரில்  மிதக்கும் ஓடத்தைப் போல உன் தலையில் உள்ள ஆகாய கங்கையில் பிறைச் சந்திரனை கொண்டவனே, என்னை கை விட்டு விடாதே.

பாடல்


பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு நினைப்பிரிந்த
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன் கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே


கொஞ்சம் சீர் பிரிக்கலாம் 

பெரு நீர் அறச் சிறு மீன் துவண்டு ஆங்கு  நினைப் பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரு நீர் மடுவுள் மலைச் சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குரு நீர் மதி பொதியும் சடை வானக் கொழு மணியே


பொருள் 

பெரு நீர் = பெரிய நீர். பெருகி வரும் நீர்

அறச் = அற்றுப் போக.

சிறு மீன் = சிறிய மீன்

துவண்டு = நீரின்றி துவண்டு

ஆங்கு = அங்கு துடிப்பதைப் போல

 நினைப் பிரிந்த = உன்னை விட்டுப் பிரிந்த

வெரு = பயம் கொள்ளும் (வெருட்சி = பயம் )

நீர்மையேனை = கொள்ளும் என்னை 

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

வியன் கங்கை பொங்கி = பெரிய கங்கை பொங்கி

வரு நீர் = வெள்ளம் வருகின்ற போது

மடுவுள் = தேங்கிய நீரில்

மலைச்  = மலைத்து நிற்கும்

சிறு தோணி வடிவின் = சிறு தோணி போல

வெள்ளைக் குரு நீர் மதி = வெண்மையான பிறைச் சந்திரனை

பொதியும் = பொதிந்து வைத்து இருக்கும்

சடை = சடையைக் கொண்ட

வானக்  = வானில் உள்ள

கொழு மணியே = சிறந்த மணி போன்றவனே


அது ஏன் பிறை சந்திரன் ?

ஒரு முறை சந்திரன் தவறு செய்தான். நாளும் ஒரு கலையாக தேய்ந்து அழியும்படி  சபிக்கப் பட்டான். 

மூன்றே கலைகள் இருக்கும் போது கடைசியில் சிவனை தஞ்சம் அடைந்தான். 

அவர், அவனை மன்னித்து தன் தலையில் சூடிக் கொண்டார். அவன் அழிவு தவிர்க்கப் பட்டது. 

எவ்வளவு தவறு செய்து இருந்தாலும், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் , பாவ விமோசனம் தருவான் அவன்.

காலில் விழுந்த சந்திரனை தலையில் தூக்கி  வைத்தார்.

இதைச் சொல்ல வந்த தெய்வப் புலவர் சேக்கிழார், நிலவு உலாவிய நீர் மலி வேணியன் என்றார்.  நிலவு உலவுகிரதாம். ஏன் உலவமாட்டான் ? சிவனின் தலையில் அல்லவா இருக்கிறான் ? உலாத்தலுக்கு என்ன குறைச்சல் ? 

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; 
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
 
 

No comments:

Post a Comment