Saturday, February 15, 2014

திருப்பாவை - அருள் எனும் வெள்ளம்

திருப்பாவை - அருள் எனும் வெள்ளம் 



காதல் என்பது கொடுப்பது. பெறுவது அல்ல.

ஒரு தாய், தன் பிள்ளைக்கு பால் அமுது ஊட்டுவது போல. அந்த கைக் குழந்தையிடம் அவள் என்ன எதிர்பார்ப்பாள் ? ஒன்றும் இல்லை. அவளின் அளவு கடந்த அன்பினால் அந்த குழந்தைக்கு அவள் பால் தருகிறாள்.

சில சமயம் குழந்தை உடல் நலக் குறைவால் பால் குடிக்காது. குழந்தை பால் அருந்தாத அந்த நாட்களில் அந்த தாய் படும் வேதனை அவளுக்குத்தான் தெரியும். குழந்தைக்கென்று சுரந்த பால், குழந்தை குடிக்காவிட்டால் மார்பில் கட்டிக் கொள்ளும். அவளுக்கு மிகுந்த வேதனையைத் தரும். சில சமயம், அந்தப் பாலை கிண்ணத்தில் பெற்று தூர ஊத்தி விடுவது கூட உண்டு. பால் தராமல் அவளால் இருக்க முடியாது.

அது போல, பிள்ளைகளுக்குத் தருவதற்கு என்று ஆண்டவன் அருளை தன் மனம் நிறைய வைத்துக் கொண்டிருக்கிறான். பல சமயம் நாம் தான் அவற்றை பெற்றுக் கொள்வதில்லை. பால் அருந்தாத குழந்தையைப் போல.

அருள் வெள்ளம் வழிந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.

ஆண்டாள் அந்த அருளின் பல வடிவங்களை காட்டுகிறாள்..எப்படி அது உயிர்களுக்கு உறுதி செய்கிறது என்று. அவள் பார்வையில் இறைவனின் அருள் எங்கும் பொங்கி பரவிக் கிடக்கிறது.

பாடல்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்

ஓங்கி உலகளந்த = ஓங்கி உலகை அளந்த

உத்தமன் பேர்பாடி = உத்தமனாகிய திருமாலின் பேரைப் பாடி

நாங்கள் = நாங்கள் 

நம் = நம்முடைய

பாவைக்குச் சாற்றி = பாவைக்கு நோன்பு மேற்கொண்டு

நீ ராடினால் = நீராடினால்

தீங்கின்றி = ஒரு தீங்கும் இன்றி

நாடெல்லாம் = நாடெங்கும்

திங்கள்மும் மாரிபெய்து = மாதம் மூன்று முறை மழை பொழிந்து

ஓங்கு பெறும்செந் நெல் = ஓங்கி வளர்ந்த நெல் பயிர்களின்

ஊடு = ஊடே , இடையில் 

கயலுகளப் = கயல் என்ற மீன் அசைந்து ஓட

பூங்குவளைப் போதில் = குவளை மலரில்


பொறிவண்டு கண்படுப்பத் = வண்டுகள் கண் அயர்ந்து தூங்க

தேங்காதே = அஞ்சி, பயந்து 

புக்கிருந்து = உள்ளிருந்து  

சீர்த்த முலைபற்றி வாங்க  = சீரிய முலைகளைப் பற்றி

 குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் = குடங்களை நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் = என்று நீங்காத செல்வம் 

நிறைந்தேலோர் எம்பாவாய். = நிறையட்டும் என் பாவையே

மழை நன்றாகப் பெய்கிறது. வயல்கள் எல்லாம் நிறைந்து விட்டன. நெல் வயல்களில்  மீன்கள் விளையாடுகின்றன. இருந்தும் அவை குவளை மலர்களை  தொந்தரவு செய்யவில்லை. அதில் வண்டுகள் நிறைய தேன் குடித்து விட்டதால் கண் அயர்ந்து தூங்குகின்றன.

மழை நன்றாகப் பெய்ததால் ஊரில் புல் நன்றாக விளைந்திருக்கும். அவற்றை உண்ட பசுக்கள் மடி நிறைய பாலை சுமந்து கொண்டிருக்கும்.

பசுக்களின் மடியைத் தொட்டால் எங்கே அவை பாலை குடம் குடமாக தந்து அவை வழிந்து இல்லமெல்லாம் சேறு ஆகி விடுமோ என்று தயங்கி தயங்கி அவற்றின் மடியைப் பற்றினால், உடனே அவை குடங்களை நிறைத்து விடுமாம்.

இறைவனிடம் கொஞ்சம் கேட்டால் போதும் அவன் குடம் குடமாக நிறைத்து விடுவான் என்று சொல்லாமல் சொல்லும் பாடல்.

அருளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான் ? கேளுங்கள்.



1 comment:

  1. நல்ல ஊர் வருணனை என்று கொள்ளலாம்.

    ReplyDelete