Friday, February 7, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக் கைகளால் என்னை தீண்டும் வண்ணம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக் கைகளால் என்னை தீண்டும் வண்ணம்


ஆண்டாளுக்கு கண்ணன் மேல் அவ்வளவு காதல்.

காதல் என்றால் அப்படி இப்படி இல்லை.

பெண்களுக்கு இயல்பாகவே நாணம் மிகுந்து இருக்கும். மனதில் உள்ளதை அவ்வளவு எளிதில் சொல்ல மாட்டார்கள். வெட்கம். நாணம்.

அதையும் மீறி, தங்கள்  காதலர்களிடம்,கணவனிடம் கொஞ்சம் கொஞ்சம்  சொல்வார்கள். மற்றவற்றை அவர்களே கண்டு பிடித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுவார்கள்.

ஆனால், ஆண்டாள் அதை எல்லாம் பார்க்கவில்லை. அவள் காதலில் அவள் உண்டு, அவன் உண்டு. வேறு யாரைப் பற்றியும் அவளுக்கு  .கவலை இல்லை.

தன் காதலை தேன் தமிழில் வடிக்கிறாள். கால காலத்திற்கும் அவள் காதலை பறை சாற்றிக் கொண்டிருக்கும் அவைகள்.

முதலில், தன் காதல் கை கூட காதல் கடவுளான மன்மதனை வேண்டுகிறாள்.

"மன்மதனே, உனக்கு காய் கறி , கரும்பு, நெல் எதை எல்லாம் படைத்து, உன்னை வணங்குகிறேன். உலகளந்த திரிவிக்கிரமன் என் வயிற்றையும், என் மென்மையான மார்புகளையும் தீண்டும் வரம் தருவாய்"

பாடல்



காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனேஉன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே



பொருள்

காயுடை = காய் கறிகள் 
நெல்லொடு = நெல்லும்
கரும்பமைத்துக் = கரும்பும் சேர்த்து
கட்டி யரிசி யவலமைத்து = கட்டி அரிசி, அவல் இவற்றைச் சேர்த்து
வாயுடை = நல்ல சொற்களை உடைய
மறையவர் = வேதம் ஓதுபவர்கள்
மந்திரத்தால் = சொன்ன மந்திரங்களால்
மன்மதனே = மன்மதனே
உன்னை வணங்குகின்றேன் = உன்னை வணங்குகின்றேன்
தேய = தேசத்தில். இந்த உலகில்
முன் னளந்தவன் = முன்னொரு காலத்தில் அளந்தவன்
திரி விக்கிரமன் = திருவிக்கிரமன்
திருக் கைகளாலென்னைத் = திரு கைகளால் என்னை
தீண்டும்வண்ணம் = தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் = ஒளி பொருந்திய என் வயிற்றையும்
மென் = மென்மையான
தட = பெரிய
முலையும் = மார்புகளையும்
தரணியில் = உலகில்
தலைப்புகழ் = சிறந்த புகழ்
தரக்கிற்றியே = தந்தருள்வாயாக

அவனை நினைத்துக் கொண்டிருக்கிறாள் - பயம் போயிற்று. வெட்கம் போயிற்று. அவனே எல்லாம் என்று ஆனாள்.

ஒரு பெண் எல்லோரும் அறிய தன் காதலை, அதனால் வரும் ஆசைகளை வாய் விட்டுச்  சொல்வதென்றால் அவனை எந்த அளவுக்கு அவள் நேசித்திருக்க  வேண்டும் ?

1 comment:

  1. அருமையான, காதல் உணர்வு வடிகின்ற பாடல். நன்றி.

    "பெருமாள் வந்து தீண்டும் வண்ணம், என் வயிற்றையும் பெரிய முலைகளையும் புகழ் கொள்ளச் செய்க!" என்று மன்மதனை வேண்டி என்ன ஒரு வேண்டுகோள்!

    ReplyDelete