Sunday, February 2, 2014

கந்தர் அலங்காரம் - தப்பிப் போன ஒன்று

கந்தர் அலங்காரம் - தப்பிப் போன ஒன்று




பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்

கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.

சூரபத்மனும் அவன் தம்பிகளும் மூன்று பெரிய மலையை செய்தார்கள். அவை பறக்கும் மலைகள். எங்கெல்லாம் மனிதர்களும் தேவர்களும் கூட்டமாக இருக்கிறார்களோ, அப்படியே பறந்து வந்து அவர்கள் மேல் அமர்ந்து விடும் அந்த மலைகள். அவற்றின் கீழே அகப்பட்டவர்கள் நசுங்கி உயிர் விட வேண்டியது தான். 

முருகன் தன் வேலாயுதத்தால் அந்த மலைகளை பொடிப் பொடியாகச் செய்தான். 

அது ஏதோ கதை என்று நினைத்துத்  தள்ளி விடாதீர்கள். 

நம் மனம் என்ன செய்கிறது என்று நினைக்கிறீர்கள் ?

வீட்டில் நாம் அமர்ந்து இருந்தாலும், அது எங்கே நம்மிடம் இருக்கிறது. அது பாட்டுக்கு  ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறது. 

கற்பனையில், கனவில், மிதந்து கொண்டிருக்கிறது. நம்மிடம் கேட்டு விட்டா அது  போகிறது ? நம்மை விட்டு தப்பித்து ஓடிப் போய் விடுகிறது. 

டிவி யில் ஒரு நல்ல அயல் நாட்டைப் பார்த்தால் அங்கே போய் விடுகிறது, அழகான  பெண்ணை/ஆணைப் பார்த்தால் அவர்கள் கூட இருந்தால் என்ன என்று  அவர்கள் பின்னே போய் விடுகிறது....நல்ல கார், சிறந்த உடை, சுவையான உணவு ...எதைக் கண்டாலும் அதன் மேல் போய் உட்கார்ந்து கொள்கிறது  நம் மனம்....சூரபத்மனின் பறக்கும் மலைகளைப் போல. 

அவன் மலைகளாவது அவன் கட்டுப் பாட்டில் இருந்தது. 

நம் மனம் நம் கட்டுப் பாட்டிலா இருக்கிறது. 

அது பாட்டுக்கு எந்தப் பெண்ணை கண்டாலும் அவர்கள் பின்னால் போய் விடுகிறது. மலையை பொடிப் பொடியாக செய்தது போல என் ஆசை மலைகளைத் தகர்த்து எனக்கு  ஞானம் தருவாய் என்று  வேண்டுகிறார்.


பாடல் 

பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.


சீர் பிரித்த பின் 

பொட்டாக வெற்பைப் பொருத கந்தா தப்பிப் போன ஒன்றற்கு 
எட்டாத ஞான கலை தருவாய் இருங் காம விடாய் 
பட்டார் உயிரை திருகி பருகி பசி தணிக்கும் 
கட்டாரி வேல் விழியார் வலைக்கே மனம் கட்டுண்டதே 


பொருள் 

பொட்டாக = கண்ணுக்குத் தெரியாத  துகளாக.பூச்சி பொட்டு இருக்கப் போகிறது என்று சொல்வார்களே. பூச்சி கண்ணுக்குத் தெரியும். பொட்டு கண்ணுக்குத் தெரியாத சின்ன உயிரினம்.  

ஆசா நிகளம் துகளான பின் பேசா அநுபூதி பிறந்ததுவே 

என்பார் அருணகிரி பிறிதோர் இடத்தில் 


வெற்பைப் = மலைகளை 

பொருத = சண்டையிட்ட 

கந்தா = கந்தக் கடவுளே 

தப்பிப் போன ஒன்றற்கு = என்னை விட்டு தப்பிப் போன ஒன்றான (என் மனதை )
எட்டாத = அறிய முடியாத 

ஞான கலை தருவாய் = ஞானத்தை தருவாய் 

இருங் = வலிய  

காம விடாய்  = காமம் என்ற தாகம் 

பட்டார் = அடைந்தோர் 

உயிரை  = உயிரை 

திருகி பருகி பசி தணிக்கும் = திருகி, பருகி, பசி தணிக்கும் 
கட்டாரி வேல் விழியார் = கட்டாரி என்றால் குத்தீட்டி. அது போன்ற வேல் போன்ற விழிகளை கொண்ட பெண்களின் 

வலைக்கே மனம் கட்டுண்டதே  = வலையில் கட்டுப்பட்ட மனதை 




1 comment:

  1. "திருகி பருகி பசி தணிக்கும்" - திருகி சரிதான், பருகி சரிதான், ஆனால் ஏன் பசி தணிக்கும் என்று சொல்கிறார்? இந்தப் பசி அடங்கக்கூடியதா என்ன? அதுவும் பெண்கள் பசியைக் கிளப்பலாமே தவிர, பசியைத் தணிப்பவரா என்ன? புரியவில்லையே?

    ReplyDelete