Friday, February 7, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அவனுக்கே இவ்வுடல் அர்ப்பணம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அவனுக்கே இவ்வுடல் அர்ப்பணம் 



ஆண்டாள் தன் காதலைத் தொடர்கிறாள்.

வானத்தில் வாழும் தேவர்களுக்கு என்று வேள்வியில் பெய்த அவிர் பாகத்தை காட்டில் உள்ள நரி உண்பது எவ்வளவு சரியான செயல் இல்லையோ அது போல நாராயணனுக்கு என்று இருக்கும் இந்த உடலை வேறு மானிடர் தொடுவார்கள் என்று பேசப் பட்டால் கூட உயிர் வாழ மாட்டேன், ஏ காமதேவனே என்று காமதேவனிடம் கூறுகிறாள்.

பாடல்

வானிடை வாழுமவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து  கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

பொருள்

வானிடை = வானத்தில்
வாழுமவ் = வாழும் அந்த

வானவர்க்கு = தேவர்களுக்கு
மறையவர் = வேதம் ஓதுவோர்
வேள்வியில் = வேள்வியில், யாகத்தில்
வகுத்த அவி = இட்ட அவிர்ப் பாகத்தை

கானிடைத் = காட்டில்

திரிவதோர் = திரியும் ஒரு

நரி புகுந்து = நரி புகுந்து

கடப்பதும்  = காலால் தீண்டுவதும்

மோப்பதும் = மூக்கால் முகர்வதும்

செய்வதொப்ப = செய்வதைப் போன்றது

ஊனிடை = தன் உடம்பில்

யாழிசங் குத்தமர்க்கென்று = ஆழி, சங்கு என்று தரித்த உத்தமர்கு என்று

உன்னித்  = பொங்கி , பூரித்து

தெழுந்தவென் = எழுந்த என்

தட முலைகள் = பெரிய மார்புகள்

மானிட வர்க்கென்று = வேறு மனிதர்களுக்கு என்று

பேச்சுப்படில் = பேசப் பட்டால்

வாழகில் லேன் = வாழ மாட்டேன், உயிரை விட்டு விடுவேன்

கண்டாய் = நீ அறிந்து கொள்

மன்மதனே = மன்மதனே


1 comment:

  1. சினிமா வசனம் மாதிரி இருக்கிறது.

    என்ன தைரியமான பாடல் - அதுவும் அந்தக் காலத்தில்!

    ReplyDelete