Tuesday, February 4, 2014

திருவாசகம் - இருதலைக் கொல்லி எறும்பு

திருவாசகம் - இருதலைக் கொல்லி எறும்பு 


ஒரு மூங்கில் குழாய்.

அதன் நடுவில் உள்ள இரு எறும்பு.

குழாயின் இரு பக்கமும் நெருப்பு எரிகிறது. எறும்பு எங்கே போகும். ஒரு பக்கம் ஓடும். அங்கே சூடு  அதிகம் என்று மறு பக்கம் ஓடும். மாறி மாறி ஓடி முடிவில் நெருப்பில் மடிந்து போகும்.

நமக்கும் தான் எவ்வளவு ஆசை. கண்டதன் பின்னால் ஓடுகிறோம். பின் அது சுடுகிறதே என்று இன்னொரு பக்கம் ஓடுகிறோம். பின் அதுவும் சுடுகிறதே என்று  மறுபுறம்.

துன்பம் இல்லாத இன்பம் இல்லை. சூடு இல்லாத வெளிச்சம் இல்லை. வெளிச்சத்தை நோக்கி எறும்பு ஓடும். சூடு கண்டு பின் வாங்கும்.

 இது தான் என் வாழ்வின் இலட்சியம், இதை அடைந்து விட்டால் பின் வேறு எதுவும் வேண்டாம் என்று ஆசை ஆசையாக அடைந்த எத்தனை விஷயங்கள் பின் துன்பமாக மாறிப் போகின்றன.

மணிவாசகர் சொல்கிறார்....

"இருதலைக் கொள்ளி எறும்பு போல நான் இருக்கிறேன். உன்னைப் பிரிந்து தலை விரி கோலமாய் அலைகின்றேன். மூன்று உலகங்கலுக்கும் தலைவனே, என்னை கை விட்டு விடாதே. திரிசூலம் கையில் ஏந்தி பொலிபவனே"


பாடல்

இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொரு தலை மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே!


பொருள் 

இருதலைக்  கொள்ளியின் = இரண்டு பக்கமும் நெருப்பு கொண்ட கொள்ளியின்

உள் எறும்பு ஒத்து = உள்ளே அகப்பட்டுக் கொண்ட எறும்பைப் போல

நினைப் பிரிந்த = உன்னைப் பிரிந்து

விரிதலையேனை = தலை விரி கோலமாக அலையும் என்னை

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

வியன் மூவுலகுக்கு = விரிந்த இந்த மூன்று உலகுக்கும்

ஒரு தலைவா = ஒரே தலைவனே

மன்னும்= நிலைத்த

உத்தர கோச மங்கைக்கு அரசே =  உத்தர கோச மங்கைக்கு அரசே

பொரு = போருக்கு

தலை = முன்னிற்கும்

மூவிலை வேல் = திரிசூலம்

வலன் ஏந்திப் பொலிபவனே! = வலக் கையில் ஏந்தி பொலிபவனே




No comments:

Post a Comment