Friday, February 7, 2014

திருவாசகம் - மெலிகின்ற என்னை விடுதி கண்டாய்

திருவாசகம் - மெலிகின்ற என்னை விடுதி கண்டாய்


சந்தேகம். பயம். ஆசை.

சந்தேகம் மனிதனை விடுவதே இல்லை. எது கிடைத்தாலும், இது அதுதானா, , இதையா நாம் தேடினோம், இதற்க்கா இந்த அலைச்சல்  என்ற சந்தேகம் எழுகிறது. நம்பிக்கையே கிடையாது. 

கிடைத்தது போய் விடுமோ ? இது நிலைக்காதோ ? யாரவது பறித்துக் கொண்டு போய் விடுவார்களோ ? என்ற பயம்.

இதை விட சிறப்பாக என்ன இருக்கும் ? அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும், எல்லாம் வேண்டும் என்று ஆசை , பேராசை.

இது சாதாரண பொருள்கள் , மனிதர்கள், அவர்களின் உறவுகள் இருந்து மட்டும் வருவது இல்லை....இறை அருள் கிடைத்தால் கூட இந்த பயமும், சந்தேகமும், ஆசையும் மனிதனை விடுவதில்லை.

மாணிக்க வாசகர் சொல்கிறார்.....

"உன் திருவடிகளை அடைந்த பின்னும், என் உடல் பொருள் ஆவி எல்லாம் உனக்காக தந்த பின்னும் நான் மெலிந்து கொண்டே இருக்கிறேன். அதற்காக என்னை கை விட்டு விடாதே. திரி புரங்களை எரித்தவன் நீ...."


பாடல்

பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம், மாறுபட்டே.

பொருள் 

பொலிகின்ற = ஒளிவிடும்

நின் தாள் =உன் திருவடிகளை

புகுதப்பெற்று = அடைந்த பின்னும்

ஆக்கையைப் போக்கப் பெற்று = உடல் என்பதே இல்லை என்ற ஆனா பின்

மெலிகின்ற என்னை = இன்னும் மெலிகின்ற என்னை. மெலிவு ஏன்? இது நிலைக்குமோ என்ற சந்தேகம், பயம் போன்ற உணர்வுகளால் மெலிந்து.  இறை அருளே ஆனாலும், வெளியில் இருந்து வரும் எதுவும் மனிதனை இட்டு நிரப்ப முடியாதுதான் போலிருக்கிறது.

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

அளி = வண்டு

தேர்= தேர்ந்து , ஆராய்ந்து

விளரி = ஒரு வித இசை

ஒலி நின்ற = இசை நிறைந்த

பூம் பொழில் = பூஞ்சோலைகள் உள்ள

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

வலி நின்ற = வலிமை நிறைந்த

திண் = திண்மையான

சிலையால் = வில்லால்

எரித்தாய் = அழித்தாய்

புரம் = திரி புரங்களை

மாறுபட்டே = மாறுபாடு கொண்டு, பகை கொண்டு


No comments:

Post a Comment