Sunday, February 16, 2014

கந்தர் அலங்காரம் - கூற்றுவன் பிடிக்கும் போது அஞ்சல் என்பாய்

கந்தர் அலங்காரம் - கூற்றுவன் பிடிக்கும் போது அஞ்சல் என்பாய் 


ஒரு ஊருக்குப் போக வேண்டும் என்றால் இரயிலிலோ, விமானத்திலோ முன் பதிவு செய்து கொள்வது புத்திசாலித்தனம். இல்லை என்றால் கடைசி நேரத்தில் இருக்க இடம் கிடைக்காமல் அல்லல் பட நேரிடும்.

வேறு ஏதாவது காரியம் செய்ய வேண்டும் என்றால் முன் கூட்டியே அதைப் பற்றி திட்டமிட்டு செய்வது நலம்.

மரணம் என்று ஒன்று வரும்.  அதற்கு என்ன திட்டம் இட்டு வைத்து இருக்கிறோம் ? ஏதோ அப்படி ஒன்று நிகழவே போவது இல்லை என்று அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  அருணகிரியார் நமக்கு அதை நினைவு  படுத்துகிறார்.

மரணம் வரும். கூற்றுவன் வருவான். பாசக் கயிறை வீசுவான். அப்போது அவனிடம் இருந்து யார் நம்மை காக்க முடியும் ? முருகா, நீ தான் எனக்கு "அஞ்சாதே" என்று ஆறுதல் சொல்ல முடியும். அதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு திருப்புகழை படித்து போற்றுவேன்.

பாடல்

படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்லென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை

இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே.

பொருள்

படிக்கும் = படிக்கும்

திருப்புகழ் = திருப்புகழ், சிறந்த புகழ், என்று அழியாத புகழ்

போற்றுவன் = போற்றுவேன்

கூற்றுவன் = உடலையும் உயிரையும் கூறு போடுபவன், கூற்றுவன்

பாசத்தினாற் = பாசக் கயிற்றால்

பிடிக்கும் பொழுது = என்னை வந்து பிடிக்கும் போது

வந்து = என் எதிரில் வந்து

அஞ்லென் பாய் = அஞ்சல் என்பாய்

பெரும் பாம்பினின்று = பெரிய பாம்பின் மேல் நின்று

நடிக்கும் = நடனமாடும்

பிரான் = கண்ணன், திருமால்

மருகா = மருமகனே

கொடுஞ் = கொடுமையான

சூரனடுங்க = சூரன் நடுங்க

வெற்பை = மலையை


இடிக்கும் = இடிக்கும், பொடித்து துகள் துகளாக்கும் 

கலாபத் = தோகை  உள்ள

தனி மயில் = தனித்துவம் உள்ள மயில் (special )

 ஏறும் இராவுத்தனே = ஏறும் இராவுத்தனே 

இராவுத்தன் என்றால் முஸ்லிம் அல்லவா ? குதிரை விற்பவனை , குதிரை வண்டி ஓட்டுபவனை இராவுத்தன் என்று சொல்லலாம். முருகன் மயில் மேல் அல்லவா வருகிறான் ? அவனை எப்படி இராவுத்தன் என்று சொல்லலாம் ?

ஒரு காலத்தில், மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான் குதிரை விற்பவனாக  வந்து குதிரை  விற்றார். அந்த தகப்பனுக்கு மகன் தானே  இவன்.எனவே குதிரை விற்பவனின் மகன்  இராவுத்தன். 

எதற்கு சம்பந்தம் இல்லாமல் பாம்பின் மேல் ஆடும் மருகன், மயில் மேல் வரும் முருகன் என்று  சொல்கிறார் ?

இவை எல்லாம் ஒரு குறியீடுகள்.

பாம்பு புஸ் புஸ் என்று சீரும். பெரிதாக காற்றை வெளியே விடும். அப்படி புஸ் புஸ் என்று சீரும்  பாம்பை அடக்கி வைப்பது மயில். 

பிராண வாயுவின் ஓட்டத்தை கட்டுப் படுத்தினால் மரண பயம் வராது. 

மூச்சு சீரானால் , கட்டுப் பட்டால் மனம்  வசமாகும்.

மனம் வசமானால் பயம் நீங்கும். பயத்தில் பெரிய பயம் மரண பயம். அதுவும் நீங்கும். 





1 comment:

  1. குறியீடுகள் பற்றிய குறிப்பு சுவாரசியம். நன்றி.

    ReplyDelete