Saturday, February 8, 2014

கந்தர் அலங்காரம் - கூத்தாட்டும் ஐவர்

கந்தர் அலங்காரம் - கூத்தாட்டும் ஐவர் 


துன்பத்திற்கு காரணம் பாசம் என்று சொல்லப் படுகிறது.

பாசம் எதன் மேல் ?

மனைவி, கணவன், பிள்ளகைள், பெற்றோர், சகோதரன், சகோதரி, என்று நட்பும் உறவும் இவற்றின் மேல் உள்ள பாசம். இதில் ஏற்படும் இழப்பு, இது ஒரு பாசம்.

இதைத்தான் நாம் பொதுவாக பாசம் என்று சொல்லுகிறோம்.

ஆனால், அருணகிரிநாதர் அதைவிட ஆழமான, நாம் அறியாத ஒரு பாசத்தைக் காட்டுகிறார்.

நம் மனம் புலன்கள் மேல் வைக்கின்ற பாசம், பிணைப்பு.

புலன்கள் தரும் இன்பம், இன்பத்தில் பிறக்கும் நினைவுகள், ஞாபகங்கள், அவற்றை விட்டு பிரிய வேண்டுமே என்ற ஏக்கம் இது பாசத்தில் பெரிய பாசம்.

இறக்கும் போது எது அதிகம் கவலை தருகிறது ? இந்த இன்பங்களை , இந்த நினைவுகளை விட்டு விட்டுப் போக வேண்டுமே என்ற கவலைதான் பெரிய கவலை.

மனதுக்கும் புலன்களுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு விடுமானால் வாழ்வில் மிகப் பெரிய இன்பம் கிடக்கும்.

உடல் வேலை செய்ய உணவு வேண்டும். உடல் தனது தேவைக்கு உண்கிறது என்று அந்த உணவின் மேல் பற்று இல்லாமல் இருக்கப் பழக வேண்டும். "ஹா, அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்கு..இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம்" என்று மனம் அதில் இலயிக்கும் போது பிரச்சனை தொடங்குகிறது .

உணவு என்பது உடல் தேவை என்பது மாறி உள்ளத் தேவையாகிப் போகிறது.

மனம், புலன், பொருள் (உயிர் உள்ளது, உயிர் அல்லாதது) என்ற இந்த பாசம் மனிதனை பாடாகப் படுத்துகிறது.

இதிலிருந்து என்னை காப்பாற்று என்று முருகனை  வேண்டுகிறார்.

பாடல்

குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்

சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.

சீர் பிரித்த பின்

கு பாச வாழ்க்கையுள்  கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த 
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய் இரு நான்கு வெற்பும்
அப்பாதியாய்  விழ மேருவும் குலங்க விண்ணாரும் உய்ய 

சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடைய  சண்முகனே.

பொருள் 

கு = உலகு
பாச வாழ்க்கையுள் = உலகின் மேல் பாசம் கொண்ட வாழ்க்கையில்
கூத்தாடும்  ஐவரில் = கூத்தாடும் ஐந்து புலன்களும்
கொட்பு = சுழற்சி. ஒரு புலன் ஓய்ந்தால் அடுத்தது தலை தூக்கும். முதலில்  பசிக்கும். உணவு கிடைத்தவுடன், வேறு சுகம் தேடும். 
அடைந்த = அடைந்த 
இப்பாச நெஞ்சனை = இந்த பாச நெஞ்சம் உள்ளவனை
ஈடேற்றுவாய் = கரை ஏற்றுவாய்
இரு நான்கு = எட்டு. அஷ்ட திக்கு
வெற்பும் = மலைகளும்
அப்பாதியாய்  விழ = இரண்டாய் உடைந்து விழ
மேருவும் குலங்க = மேரு மலையும் குலுங்க
விண்ணாரும் உய்ய = தேவர்கள் உய்ய 

சப்பாணி கொட்டிய = சப்பாணி கொட்டிய
கை ஆறிரண்டு உடைய  சண்முகனே = பன்னிரண்டு கைகளை உடைய சண்முகனே


1 comment:

  1. புலனின்பங்களுக்குள், காம இன்பத்தை என்ன செய்வது? எல்லோரும் அந்தக் காம இன்பம் இல்லாமல் இருந்துவிட்டால், இந்த உலகமே முடிந்து விடுமே? ("ஆணுன்னும் பொண்ணுன்னும் ஏன் படைச்சான்? ஆளுக்கோர் ஆசையை ஏன் படைச்சான்? இல்லேன்னா உலகமே இல்லே புள்ளே!")

    ReplyDelete