Saturday, February 8, 2014

சிவபுராணம் - நமச்சிவாய வாழ்க

சிவபுராணம் - நமச்சிவாய வாழ்க 


சிவபுராணம் - மாணிக்க வாசகர் அருளிச் செய்தது.

அற்புதமான பாடல்.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

முதல்  ஐந்து வரிகள் மேலே உள்ளவை.

பெரிய புத்தகங்களை படிக்கும் போது நல்ல கருத்துகள் நடுவிலோ, கடைசியிலோ இருந்தால் ஒரு வேளை நாம் அந்த புத்தகத்தை முழுமையாக படிக்காவிட்டாலோ அல்லது சரியாகப் படிக்கா விட்டாலோ, அந்த நல்ல கருத்தை நாம் அறியாமல் போகலாம்.

அதனால் எடுத்த எடுப்பிலேயே "நமச்சிவாய வாழ்க" என்று ஆரம்பிக்கிறார்.

நீங்கள் திருவாசகம் முழுதும் படிப்பீர்களோ இல்லையோ, முதல் வரியிலேயே நல்லதை சொல்லி ஆரம்பிக்கிறார்.

கம்பரும் அப்படித்தான்  செய்தார்."தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே" என்று முதல்  பாடலிலேயே நம்மையும் சேர்த்து அவனிடம் சரண் அடையச் செய்தார்.

"நமச்சிவாய வாழ்க" என்று சொல்லி விட்டீர்களா ?

சில சமயம் நாம் பெரிய பக்தன் என்று கூட நம் தலையில் அகங்காரம் ஏறி விடும். நான் எத்தனை கோவில் போய் இருக்கிறேன், எவ்வளவு விரதம் இருந்து இருக்கிறேன், எவ்வளவு கோவில்களுக்கு எவ்வளவு நன்கொடை தந்திருக்கிறேன் என்று  பணிவில் கூட, நல்லது செய்வதில் கூட அகங்காரம் வந்து விடலாம்.

எனவே அடுத்து

"நாதன் தாள் வாழ்க" என்று அவன் திருவடிகளைப்  போற்றுகிறார். அடிபணிந்து இருக்க வேண்டும்  என்று சொல்லாமல்  சொல்கிறார்.

நம் வாழ்க்கை சிக்கல் நிறைந்தது. கோவிலுக்குப் போய் இறைவனை வழிபடும்  நேரத்திலும் வீட்டு நினைவு, அலுவலக நினைவு, என்று ஆயிரம் நினைவுகள். அதை எல்லாம் விட்டு விட்டாலும், பக்கத்தில் நிற்கும் பச்சை சேலை மனதை  அலைக் கழிக்கிறது.

அவன் நினைவு எங்கே வருகிறது.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க"

எப்போதும் என் நெஞ்சில் இருப்பவன் என்கிறார்.

.....

இப்படி ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும் ஆயிரம் அர்த்தங்கள்....

நேரமிருப்பின், மூல நூலைப் படித்துப் பாருங்கள்...

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதன் அர்த்தம்  விளங்கும்.

படித்துப் பாருங்கள்...உருகுகிறதா என்று தெரியும்.....


No comments:

Post a Comment