Monday, February 3, 2014

திருவாசகம் - ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்

திருவாசகம் - ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் 


ஆசை ஒரு புறம்.

அச்சம் மறு புறம்.

புலன்கள் நம்மை அதன் போக்கில் இழுத்துச் செல்கின்றன. அப்படி செல்லும் போது அதனால் என்ன தீங்கு  வருமோ என்று அச்சமும் கூடவே வருகிறது.

தலை அங்கும் இங்கும் அலைகிறது. பார்த்தால் ஏதோ இரண்டு தலை இருப்பது மாதிரி தோன்றும். ஆசைக்கு ஒரு தலை. அச்சத்திற்கு ஒரு தலை.

மணிவாசகருக்கு இரண்டு தலை. நமக்கு எத்தனை தலையோ.

அவர் சொல்கிறார்,

"என்  குற்றங்களை யார் பொறுப்பார்கள் ? உன் திருவருள் எப்படியோ என்று பயந்து வேர்த்து நிற்கின்ற என்னை  நீ கை விட்டு  விடாதே, பகைவர்கள் அஞ்சும்படி ஒலி எழுப்புகின்ற மணிகளை உடைய மாலையை அணிந்தவனே, திரு உத்திர கோசமங்கை என்ற ஊரின் தலைவனே, ஐம்புலன்கள் என்னை ஈர்க்கின்றன ஒரு புறம், உன் திருவடியை அதனால் விட்டு விட்டுப் போய் விடுவேனோ என்ற அச்சம் மறுபுறம் என்னை இரு புறமும் வாட்டி எடுக்கிறது"

பாடல்

தீர்க்கின்ற ஆறு என் பிழையை, `நின் சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!

பொருள் 

தீர்க்கின்ற  ஆறு = எப்படி தீர்ப்பது

என் பிழையை, = என் பிழைகளை

`நின் சீர் அருள் என்கொல் என்று = உன்னுடைய சிறந்த அருள் என்ன என்று

வேர்க்கின்ற = வேர்த்து இருக்கின்ற

என்னை  = என்னை

விடுதி கண்டாய் = விட்டு விடுவாயா

விரவார் வெருவ = பகைவர்கள் அஞ்சும்படி

ஆர்க்கின்ற = ஒலி எழுப்பும்

தார் = மாலை அணிந்த

விடை = எருதின் மேல் அமர்ந்த

உத்தர கோச மங்கைக்கு அரசே = உத்தர கோச மங்கைக்கு அரசே

ஈர்க்கின்ற = என்னை ஈர்க்கின்ற

அஞ்சொடு  = ஐந்து புலன்களும்

அச்சம் = அச்சம் மறு புறம் இருந்தாலும்

வினையேனை இருதலையே! = வினை உடைய  நான் இரண்டு பக்கமும் கிடந்து அல்லல் படுகிறேன் 

No comments:

Post a Comment