Friday, February 7, 2014

தேவாரம் - ஊர் கோபிக்கும் உடல்

தேவாரம் - ஊர் கோபிக்கும் உடல் 


பெரிய மனிதர், நல்லவர்,  படித்தவர், பண்புள்ளவர், பக்திமான் என்று கொண்டாடிய ஊர், உயிர் இந்த உடலை விட்டு போனவுடன் இந்த உடலை எவ்வளவு வெறுப்பார்கள். "என்ன இன்னும் எடுக்கவில்லையா, ஒரு மாதிரி நாத்தம் வருகிறதே, காலாகாலத்தில் எடுங்கள்" என்று இந்த உடல் இங்கே கிடப்பது கூட குற்றம் என்று கோபித்து பேசுவார்கள்.

அந்த நிலை வரும் முன்னால், இந்த உடலைக் கொண்டு சாதிக்க வேண்டியவற்றை சாதித்துக் கொள்ள வேண்டும்.

நாம் நிரந்தரமாக இங்கே இருக்கப் போவது இல்லை.

அது நமக்கு அடிக்கடி மறந்து போய் விடுகிறது.

நாவுக்கரசர் சொல்கிறார்

துன்பம் தரும் இந்த வாழ்வில் என்ன செய்தீர்கள் ? இடுகாட்டுக்கு இந்த உடல் செல்வது உறுதி. அவன் கை விட்டு விட்டால் இந்த உடலை ஊரார் கோபித்து எடுத்துச் செல்லும்படி சொல்லும் நிலைக்கு ஆளாகிவிடும்.

பாடல்


 நடலை வாழ்வுகொண் டென்செய்தீர் நாணிலீர்
              சுடலை சேர்வது சொற்பிர மாணமே
              கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
              உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

பொருள் 

நடலை  = துன்பம்
வாழ்வு = நிறைந்த வாழ்கையை
கொண் டென்செய்தீர் = கொண்டு என்ன செய்தீர் ?
நாணிலீர் = வெட்கம் இல்லாதவர்களே
சுடலை = சுடுகாடு
சேர்வது  = சென்று அடைவது
சொற்பிர மாணமே = சத்தியமான சொல்லே
கடலின் = பாற்கடலில்
நஞ்சமு துண்டவர் = தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவர்
கைவிட்டால் = கை விட்டு விட்டால்
உடலி னார் = இந்த உடலை
கிடந் தூர்முனி பண்டமே = ஊரார் கோவிக்கும் நிலையில் இருக்கும் இந்த உடல் .


சிவன் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதமாக உண்டான். 

என்ன அர்த்தம் ?

அவ்வளவு கொடிய விஷத்தையே அவன் ஏற்றுக் கொண்டான். 

நீங்கள் அவ்வளவு கொடியவர்களா என்ன ?

உங்களையும் ஏற்றுக் கொள்வான் என்று சொல்லாமல் சொல்லும் கதை அது. 


No comments:

Post a Comment