Tuesday, February 11, 2014

நீத்தல் விண்ணப்பம் - களியாத களி எனக்கே

நீத்தல் விண்ணப்பம் - களியாத களி எனக்கே 


ஒருவன் தெளிந்த நீர் ஓடும் ஆற்றில் நின்று கொண்டிருக்கிறான். தாகம் எடுக்கிறது. ஓடும் நீரை அள்ளிப் பருக வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு , ஐயோ, தாகம் எடுக்கிறதே, உயிர் போகிறதே, யாராவது எனக்கு நீர் தாருங்களேன் என்று அவன் கூவினால்  அவனைப் பற்றி என்ன  நினைப்போம் ?

அறியாத மூடன் என்று தானே நினைப்போம்.

அவன் இருக்கட்டும் அங்கேயே.

நம் வாழ்வில் எத்தனை துன்பங்கள். பணம், தொழில், பிள்ளைகள், கணவன்,மனைவி, அலுவலகம், அண்டை அயல், எதிர் காலம், ஆரோக்கியம் என்று ஆயிரம் கவலைகள்.

நம்ம சுற்றி உள்ள நல்லவற்றை நாம் பார்க்கிறோமா என்றால் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைத்திருக்கின்ற நன்மைகளை, நல்லவைகளை நினைத்துப் பார்த்தால் நம் துன்பம் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.

நம்மைச் சுற்றி ஆற்றின் வெள்ளம் போல கணக்கில் அடங்காத இன்பங்கள் சூழ்ந்து  கிடக்கின்றன.அவற்றை காணாமல், தாகம் எடுக்கிறதே என்று துன்பப் படுகிறோம்.

நம்மை சந்தோஷமாக இருப்பதை தடை செய்வது யார் ? தண்ணீர் இருக்கிறது. முகந்து குடிப்பதை தடை செய்வது யார் ?

நம் அறியாமை.

மாணிக்க வாசகர் உருகுகிறார்....

"வெள்ளத்தின் நடுவில் நின்று கொண்டு நாக்கு வறண்டு தாகம் எடுக்கிறது என்று புலம்பும் மனிதனைப் போல உன் அருள் பெற்றும் துன்பத்தில் இருந்து விடுபடாமல் இருக்கும் என்னை கை விட்டு விடாதே. அடியார்கள் உள்ளத்தில் உள்ளவனே, தீராத இன்பத்தை எனக்கு தந்தருள்வாய் "

பாடல்

வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு, உன் அருள் பெற்றுத் துன்பத்தின் [நின்]றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்? விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளத்து உளேற்கு, அருளாய் களியாத களி, எனக்கே.


பொருள் 

வெள்ளத்துள் = வெள்ளத்தின் நடுவில். இது ஏதோ குளம் குட்டை இல்லை. குடித்தால் குறைந்து போக. வெள்ளம். வந்து கொண்டே இருக்கும். புதிது புதியதாய் நாளும் இன்பம் வந்து கொண்டே இருக்கும்.

நா வற்றி = நாக்கு வறண்டு

ஆங்கு = அங்கு

 உன் அருள் பெற்றுத் = உன் அருளைப் பெற்றப் பின்னும்

துன்பத்தின் [நின்]றும் = துன்பத்தில் கிடக்கும் என்னை

விள்ளக்கிலேனை  = வெளி வராமல் தவிக்கும் என்னை

விடுதி கண்டாய்?= விட்டு விடுவாயா ?

 விரும்பும் அடியார் = விரும்பும் அடியார். ஏதோ கடமைக்கு, வேறு வழியில்லாமல் ஆன அடியார்கள் அல்ல. விரும்பி அடியார்கள் ஆனவர்கள்

உள்ளத்து உள்ளாய் = உள்ளத்தில் இருப்பவனே

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

கள்ளத்து உளேற்கு = கள்ளத்தனம் நிறைந்த எனக்கு

அருளாய் = அருளாய். என்ன அருள் வேண்டுமாம் ?

களியாத களி, எனக்கே = களியாத களி எனக்கே. தீராத இன்பம்.

Count your blessings என்று சொல்லுவார்களே அது போல.

இறை அருள் எங்கும் விரவிக் கிடக்கிறது. அள்ளிப் பருகுங்கள். யார் தடுப்பது உங்களை.

தண்ணீரில் நின்று கொண்டே தாகம் என்று சொல்லுவது அறியாமை.



1 comment:

  1. நல்ல பாடல். இறை அருள் என்பது நம்மைச் சுற்றியுள்ள பல இன்பங்களின் மூலம் கிடைக்கிறது என்பது மிக நல்ல கருத்து.

    சுவையான, பாடலுக்கு மெருகு கூட்டும் உரை.

    நன்றி.

    ReplyDelete