Wednesday, February 12, 2014

நாச்சியார் திருமொழி - உனக்கு புண்ணியமாய் போகும்

நாச்சியார் திருமொழி - உனக்கு புண்ணியமாய் போகும் 


இந்த ஆண்டாள் ஓயாமல் குயிலை பார்த்து இதைச் செய் , அதைச் செய் என்று சொல்லிக் கொண்டே  இருக்கிராள் . பார்த்தது அந்தக் குயில். அவள் காணாத வண்ணம் மறைந்து கொண்டது. கோதை விடுவதாய் இல்லை.

"ஏய், அழகான குயிலே, அவனோடு சேரும் ஆசையினால் என் கொங்கைகள் கிளர்ந்து எழுந்து, குதுகலமாக இருக்கிறது. அவனைக் காணாமல் என் ஆவியோ சோர்கிறது. அவன் இங்கே வரும்படி நீ கூவினால், உனக்கு ரொம்ப புண்ணியமாகப் போகும் " என்று குயிலிடம் வேண்டுகிறாள்.


பாடல்

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால்என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும்
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ சாலத் தருமம் பெறுதி

சீர் பிரித்த பின்

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலஞ் செய்யும்
அங் குயிலே.உனக்கென்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ  சாலத் தருமம் பெறுதி


பொருள் 

பொங்கிய பாற்கடல் = பொங்கிய பாற்கடல். பாற்கடல் ஏன் பொங்கிற்று ? ஆண்டாள் மனதில் ஒரே சந்தோஷம். காதல் தரும் பர பரப்பு. அவளுடைய பர பரப்பினால், அவளுக்கு அந்த பால் கடலும் பொங்குவது போலத் தெரிகிறது.

பள்ளி கொள்வானைப் = பள்ளி கொண்டிருப்பவனை

புணர்வதோர் ஆசையினால் = புணரும் ஆசையினால் 

என் கொங்கை = என் மார்புகள் 

கிளர்ந்து = கிளர்ச்சி அடைந்து 

குமைத்துக்   = அடர்ந்து. அதாவது ஒன்றோடு ஒன்று உரசி

குதுகலித்து = ஆனந்தப் பட்டு 

ஆவியை ஆகுலஞ் செய்யும் = உனது உயிரை வருத்தும்


அங் குயிலே = அழகிய குயிலே

உனக்கென்ன = உனக்கு என்ன

மறைந்து உறைவு = மறைந்து உறைகிறாய். மறைந்து வாழ்கிறாய் 

ஆழியும் = சக்கரமும்

சங்கும் = சங்கும்

ஒண் தண்டும் = கையில் கதையும்

தங்கிய கையவனை = எப்போதும் கொண்டு இருப்பவனை

வரக் கூவில் நீ = நீ வரும்படி கூவினால்

சாலத் தருமம் பெறுதி = உனக்கு ரொம்ப புண்ணியமாகப் போகும். 

1 comment:

  1. என்ன ஒரு பாடல்! அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பாடல்கள் கூட இருந்தன!

    இதையே இப்போது ஒரு பெண் கவிஞர் எழுதினால், என்ன ஆர்ப்பாட்டங்கள் நடக்குமோ?!

    ReplyDelete