Sunday, February 2, 2014

இராமாயணம் - பரந்த மார்பும் , சிறிய கண்ணும்

இராமாயணம் - பரந்த மார்பும் , சிறிய கண்ணும் 


இராமனை காண்கிறாள் சூர்பனகை. அவன் அழகு அவளை மயக்குகிறது. அவனுடைய கண்கள் தாமரை மலரைப் போல மலர்ந்து சிவந்து அழகாக இருக்கிறது. கரிய பெரிய மலை போல பெரிய தோற்றம். அவன் தோள்கள் அத்தனை அழகு. அவனுடைய இரண்டு தோள்களையும் ஒரு சேர பார்க்க நினைக்கிறாள் சூர்பனகை. முடியவில்லை. பரந்த மார்புகள் அவனுக்கு. ஒரு சமயத்தில் ஒரு தோளைத்தான் பார்க்க முடிகிறது. ஒரு தோளில் இருந்து கண்ணை எடுத்தால்தான் இன்னொரு தோளை பார்க்க முடியும். ஒரு தோளுக்கும் இன்னொரு தோளுக்கும் அவ்வளவு தூரம்.

ஐயோ, என் கண்கள் பெரிதாக இருந்தால் இரண்டு தோள்களையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாமே என்று வருந்துகிறாள்.


பாடல்

தாள் உயர் தாமரைத் 
     தளங்கள் தம்மொடும் 
கேள் உயர் நாட்டத்துக் 
     கிரியின் தோற்றத்தான் 
தோளொடு தோள் செலத் 
     தொடர்ந்து நோக்குறின், 
நீளிய அல்ல கண்; 
     நெடியமார்பு!' என்பாள்.

பொருள்

தாள் உயர் தாமரைத் = நீண்ட தண்டினை உடைய தாமரை

தளங்கள் தம்மொடும் கேள் = மலரின் இதழ்களைப் போல அவன் கண்கள்

 உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான் = உயர்ந்த மலையைப் போல கம்பீரமான உருவம் கொண்டவன்

தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் = ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றால்

நீளிய அல்ல கண் = என் கண்கள் அவ்வளவு நீண்டது அல்ல

நெடியமார்பு!' என்பாள் = அவனுடைய மார்புகளோ பரந்து விரிந்தவை என்று கூறுவாள்.


ஜொள்ளுகள் பல ரகம். அதில் இது ஒரு இரகம். 

1 comment:

  1. சீதையின் ஜொள்ளுக்கு ஈடாக, சூர்ப்பனகையின் ஜொள்ளு எழுதியிருக்கிறாரே! ஆச்சரியம்.

    ReplyDelete