Wednesday, March 5, 2014

நீத்தல் விண்ணப்பம் - புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து


நீத்தல் விண்ணப்பம் - புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து


புலன்கள் புதுப் புது இன்பங்களை கண்டு திகைக்கிறது. அட, இப்படி கூட இருக்குமா என்று திகைக்கிறது. பின்  அதை அனுபவித்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப் படுகிறது. அதை அனுபவித்த பின், ஆஹா என்று திகைக்கிறது.

பின் சிறிது காலத்தில் இதுவா இன்பம், இந்த இன்பத்திற்கா இவ்வளவு அலைந்தேன் என்று திகைப்படைக்கிறோம்.

எல்லா இன்பங்களும் ஒரு நிலைக்கு அப்பால் சலிப்பைத் தரும். அவை நிரந்தரமானவை அல்ல. முதலில் இன்பம் போல் தோன்றினாலும் துன்பத்தில் போய் முடியும்.

அவை நம்மை தவறான வழியில் இட்டுச் செல்லும்.    அந்த பொய்யான பாதையில் செல்லும் என்னை கை விட்டு விடாதே.

நஞ்சை அமுதாக்கினவன் நீ. எனவே என் தவறுகளை நீ பொறுத்து என்னை நீ நல் வழியில் செலுத்துவது ஒன்றும் உனக்கு பெரிய காரியம் இல்லை.

பாடல்


புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து, இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணும், மண்ணும், எல்லாம்
கலங்க, முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்; கருணாகரனே!
துலங்குகின்றேன் அடியேன்; உடையாய், என் தொழுகுலமே.


பொருள் 

புலன்கள் திகைப்பிக்க = புலன்கள் என்னை திகைக்க வைக்க

யானும் திகைத்து = நானும் திகைத்து

 இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே = இந்த வாழ்க்கையில் பொய்யான வழிகளில்

விலங்குகின்றேனை = செல்லுகின்ற என்னை

விடுதி கண்டாய்?  = விட்டு விடுவாயா ?

விண்ணும், மண்ணும், எல்லாம் = விண்ணும் மண்ணும் எல்லாம்

கலங்க = கலங்கும்படி

முந்நீர் = ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்ற மூன்று நீரால் நிறைந்த கடல், அதில் தோன்றிய 

நஞ்சு அமுது செய்தாய் = நஞ்சை அமுதாகச் செய்தவனே

கருணாகரனே! = கருணைக் கடலே

துலங்குகின்றேன் அடியேன் = பயந்து இருக்கும் அடியவனாகிய என்னை

 உடையாய் = என்னை ஆட்க் கொண்டவனே

என் தொழுகுலமே. = என் தொழுகைக்கு உரியவனே


1 comment:

  1. இந்த நீத்தல் விண்ணப்பம் வரிசையில் வரும் பாடல்கள் எல்லாவற்றிலுமே ஒரு உண்மையான உணர்ச்சிபூர்வமான பரிதவிப்பைப் பார்க்க முடிகிறது. படிக்கும்போது நம் மனதையும் நெகிழவைக்கின்றன. இவைகளை எங்களுக்குத் தந்ததற்கு நன்றி.

    ReplyDelete